புறநானூறு :
பாடல் எண் 186.
பாடியவர் : மோசிகீரனார்.
திணை : பொதுவியல் :
துறை : பொருண்மொழிக்காஞ்சி
"நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே;
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;
அதனால், யான்உயிர் என்பது அறிகை
வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே.
அதாவது, இப்பாடலில் 'மண்ணை ஆளும் வேந்தனாக இருந்தாலும் சில கடமைகள் பற்றிய நினைவு அவனுக்கும் இருக்க வேண்டும்' என்று புலவர் மோசிகீரனார் உணர்த்துகிறார்.
பாடலின் பொருளைப் பாருங்களேன்! மக்களுக்கு உணவு நெல்மணிகள்; அவர்கள் நீரையும் பருகி உயிர் வாழ்பவர்கள். எனினும், நெல்லும் நீரும் அவர்களுக்கு உயிர் அன்று; மன்னன்தான் அவர்களுக்கு உயிர்!
ஒவ்வொரு மன்னனும் தான்தான் மக்களுக்கு உயிர் என்பதை உணர்ந்து கொண்டு நாட்டை ஆள வேண்டும். தன் உயிரைக் காப்பதுபோல் தன் நாட்டுக் குடிமக்களின் உயிரையும் காக்க வேண்டும்.