நமக்குக் கிடைத்த மிக அருமையான இலக்கண நூல்களுள் தொல்காப்பியமும் ஒன்று. இதன் பெருமைகளைக் கூறிச் செல்லின் அளவில்லாது விரிந்து செல்லும். அத்தகு சிறப்புகளை உடையது இந் நூல். சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய நூல் எனினும், அக்காலத்திற்கும் இக்காலத்திற்கு எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய வாழ்வியல் நெறிகளை, வாழ்வியல் உண்மைகளைப் படம் பிடித்துக் காட்டுகிறது.
இயற்றியவர் : தொல்காப்பியர்.
காலம் : கி/மு. 711 ( செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் கூறுகிறது ).
"தமிழ் முதல் நூல்" என்றும் "ஒல்காப் புகழ்த் தொல்காப்பியம்" என்றெல்லாம் போற்றப்படுவதன் மூலமே இந்நூலின் பெருமையை உணரலாம். ஆம்! இலக்கண நூல் என்றாலும் இலக்கியம் போன்று தித்திக்கும் சுவையுடன் விளங்குகிறது.
தொல்காப்பியர் தம்மை மட்டும் குறிப்பிடாமல், தம் முன்னோரை யாப்பறி புலவர், நூனவில் புலவர், தொன்னெறிப் புலவர், உயர்மொழிப் புலவர் என்றெல்லாம் போற்றுகின்றார். இது, ஒரு மிகச் சிறந்த பண்பாடு அல்லவா?
இவ்விலக்கண நூலுக்குப் பின் பல இலக்கண நூல்கள் தோன்றியிருப்பினும், வழிவழியாகப் போற்றப்பட்டு, காப்பாற்றப்பட்டு இன்று நம் கைகளில் முழுமையாகக் கிடைத்துள்ளது, இந்நூல்.