புறநானூறு



பாடல் எண் 189



பாடியவர் : மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்.

புறநானூற்றில் பாடியுள்ளவை : 56, 189, 395.

பாடல் உணர்த்தும் கருத்து : செல்வத்தைப் பிறர்க்குப் பயன்படுத்துவதே நல்லது.

திணை : பொதுவியல்.

துறை : பொருண்மொழிக் காஞ்சி.


"தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி

வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்.

நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்

கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,

உண்பது நாழி; உடுப்பவை இரண்டே;

பிறவும் எல்லாம் ஓரொக் குமே;

அதனால், செல்வத்துப் பயனே ஈதல்;

துய்ப்பேம் எனினே, தப்புந போலவே! "


பொருள் : தெளிந்த கடல் சூழ்ந்திருக்கும் உலகம் அனைத்தையும் பிறருக்கு உரிமை இல்லாமல் தனக்கே உரியதாய், ஒருவன் தன் வெண்கொற்றக் குடைக்கீழ்க் கொண்டு வந்து ஆண்டு அனுபவித்துக் கொண்டிருக்கிறான். மற்றொருவன், பகல் இரவு என்று பாராமல் நள்ளிரவிலும் உணவுக்கு வேட்டையாட விலங்கினைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். யாராய் இருந்தால் என்ன? இருவரும் உண்பது ஒரு படி உணவு. மேல் கீழ் என்று உடுத்துவது இரண்டே ஆடைகள். பிறவற்றை எண்ணிப் பார்த்தாலும் இருவர் நுகர்வும் ஒன்றாகவே உள்ளது. அப்படி இருக்கும்போது செல்வத்தைச் சேர்த்து வைத்து என்ன செய்யப் போகிறோம். நாம் மட்டுமே துய்ப்போம் என்றால் மிஞ்சித் தப்பி விடுமே. அதனால் செல்வத்துப் பயன் ஈதல் ஒன்றே.

( அதாவது, தாம் மட்டும் அனுபவிக்க எண்ணினால் அவன் அச்செல்வத்தினால் வரும் பயன்கள் பலவற்றையும் இழக்க நேரிடும்.)