குறிஞ்சிப்பாட்டு



பொதுக் குறிப்பு - குறிஞ்சி



குறிஞ்சிப் பாட்டு

பொதுக் குறிப்பு - குறிஞ்சி


இடம் – மலையும் மலைசார்ந்த நிலமும்

காலம் – குளிர்காலம், யாமப்பொழுது

தெய்வம் – சேயோன் (முருகன்)

நிலைத்திணை இந்நூலில் கூறப்பட்டுள்ள பூ தரும் மரம், செடி, கொடிகள். உரிப்பொருள் - புணர்தலும், புணர்தல் நிமித்தமும்

குறிஞ்சிப் பாட்டு கபிலர் ஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ் (தமிழ்ப்பண்பு) அறிவித்தற்குப் பாடியது. காதலர் தாமே கூடிப் பின் மணந்து கொள்ளும் தமிழ்நெறியை ஆரிய அரசன் பிரகத்தன் உணராமல் ஏதோ பேசினான். அவனுக்குத் தமிழ்நெறி இத்தகையது என்று காட்டுவதற்காகக் கபிலர் இந்தக் குறிஞ்சிப்பாட்டைப் பாடினார்.

பண்பு கெடாமல் நிகழ்ந்த தற்செயல் இயல்புப் புணர்ச்சியை இப்பாடலில் காணலாம். குறிஞ்சிநிலத் தெய்வம் முருகன். அவனுக்கு விழா எடுக்கும் காட்சியுடன் நூல் தொடங்குகிறது.

தலைவி, தலைவியின் தாய், தோழி, தோழியின் தாய். தோழியின் தாய் தலைவிக்குச் செவிலித்தாய்; பெற்ற தாய் நற்றாய். நற்றாயையும், செவிலித்தாயையும் தாய் எனக் கருதி (அன்னை) என்று விளித்தல் தமிழ்மரபு. அன்னையை ‘அன்னாய்’ என விளித்துத் தலைவியின் நிலையைச் சொல்வதாக அமைந்துள்ளது இந்தப் பாடல். தோழி, தாயிடம் சொல்கிறாள்.


1. தன் தோழி தலைவியின் நோய்க்குக் காரணம் என்னவென்று ஊரெல்லாம் கேட்டறிந்தும், முருகு-விழா நடத்தியும் தீரவில்லையே என்று வருந்திக் கொண்டிருக்கிறாய்.

2. யாருக்கும் சொல்லக்கூடாது என்று மறைத்துவைத்திருந்த செய்தியை என்னிடம் மட்டும் என் தோழியாகிய தலைவி சொன்னாள்.

3. அணிமணிகள் போனால் திரும்பவும் பெற்றுக்கொள்ளலாம். சால்பு குன்றினால் மூற்றும் துறந்த திரும்பப் பெற இயலாது என அறிஞர் கூறுவர்.

4. தலைவிக்கு மன்றல் நடந்துவிட்டது. இது நானும் அவளும் ஆராய்ந்து மேற்கொண்ட முடிபு. இது தாயாகிய உனக்கும் தெரிந்தால் பழி ஒன்றும் இல்லை.

5. இந்த மன்றல்-மணம் முறைப்படி நடக்கவில்லையே என்று இவள் தேம்பிக்கொண்டிருக்கிறாள்.

6. இருபெரு வேந்தர்க்கிடையே போர் நிகழும்போது இடைநிற்கும் சான்றோர் போல நானும் கலங்கிக்கொண்டிருக்கிறேன்.

7. குடி, குலம் போன்றவற்றைப் பார்க்காமல் நிகழ்ந்த இந்த மன்றல்-மணம் பற்றிச் சொல்கிறேன். சினம் கொள்ளாமல் கேட்பாயாக.

8. தினைப்புனம் காத்து மாலையில் திரும்புக என அனுப்பிவைத்தாய் 8

9. நீ சொன்னபடி, தழல், தட்டை, குளிர் கருவிகளில் இசை எழுப்பிக்கொண்டு தினைப்புனம் காத்துக்கொண்டிருக்கும் வேளையில்,

10. பெருமழை பொழிந்தது.

11. அருவியில் தண்ணீர் கொட்டியது. நாங்கள் நீராடினோம்.

12. பாயம் பாடிக்கொண்டு கூந்தலை உலர்த்தினோம்.

13. அங்கே பூக்கள் (99) பூத்துக்கிடந்தன.

14. அவற்றைப் பறித்துப் பாறையில் குவித்துவிட்டு, கிளி ஓட்டும் ஓசையை எழுப்பிக்கொண்டிருந்தோம்.

15. குவித்த பூக்களால் தழையாடை செய்து உடுத்திக்கொண்டு அசோக மரத்தின் அடியில் இருந்தோம்.

16. அகன்ற மார்பில் பூமாலை சூடிக்கொண்டு கையில் வில்லேந்திய ஒருவன் அங்கு வந்தான்.

17. வேட்டை-நாய்கள் அவனைச் சூழ்ந்து வந்தன.

18. நாங்கள் பயந்து வேறிடம் சென்றோம். பசுவைக் கண்ட காளை போல அவன் பின்தொடர்ந்தான்.

19. ‘ஏன் நடுங்குகிறீர்கள். ஏதாவது துன்பம் நேர்ந்ததா’ – என மெல்ல வினாவினான். நாங்கள் எதுவும் பேசவில்லை.

20. ‘ஏதாவது பேசக்கூடாதா’ – எனக் கெஞ்சினான்.

21. பூத்த கொம்புகளை ஒடித்துத் தட்டிக் குரைக்கும் நாய்களின் வாயை அடக்கிளான்.

22. அப்போது, மதம் கொண்ட ஆண்யானை ஒன்று சிங்கம் போல அங்கு வந்தது.

23. செய்வது அறியாமல் நாணத்தை விட்டுவிட்டு என் தோழி அவனைத் தழுவிக்கொண்டு நடுங்கினாள் (முருகள்-வள்ளி கதை - முளைத்த வரலாறு)

24. யானையின் முகத்தில் அம்பைப் பாய்ச்சினான். புண் பட்ட யானை திரும்பிப் போய்விட்டது.

25. பெருவெள்ளம் பாயும்போது கரையிலிருக்கும் வாழைமரம் போல அவள் நடுங்கினாள்.

26. ‘அஞ்சாதே, உன் நலத்தை உண்கிறேன்’ – என்று சொல்லிக்கொண்டு, என்னைப் பார்த்துச் சிரித்தான்.

27. நாணமும், அச்சமும் கொண்டு நான் பிரிந்துவிட்டேன். அது மயிலாடும் பாறை.

28. அவன் குன்றத்துத் தலைவன். பெருமை மிக்கவன்.

29. ‘உன் திருமணத்தில் ஊரார் விருந்து உண்ணும்போது நானும் உன்னுடன் சேர்ந்து உணவு உண்பது மேலானது’ – என்று அறநெறியும் கூறித் தேற்றினான்.

30. கடவுள் பெயரால் வஞ்சின-வாய்மை (சத்தியம்) கூறிக்கொண்டு முத்தமிட்டான்.

31. பொழுது மறைந்த மாலைநேரம்.

32. வானம் இருண்டது.

33. ‘நாடறியத் திருமணம் செய்துகொள்வேன்’ – என்று முன்னங்கைகளைப் பிடித்துக்கொண்டு சொன்னான். பசுவுடன் வரும் காளை போல அவன் வந்தான்.

34. அன்று முதல் இரவில் வருதல் அவனுக்கு வழக்கமாயிற்று.

35. ஊர்க்காவலர் உலாவல், நாய் குரைத்தல், தாயாகிய நீ விழித்துக்கொள்ளல், நிலா-வெளிச்சம் போன்ற இடையூறுகளால் இவளை அடையமுடியாமல் போனாலும், சலித்துக்கொள்ளாமல் வருகிறான்.

36. அவனுக்காக இவள் தூங்காமல் கிடக்கிறாள்.

37. புலி, உளியம், ஆளி, ஆமான், பாம்பு, முதலை இடையூறுகளுக்கு இடையே வருகிறானே என்று இவள் அழுகிறாள்.

38. இடுக்கு, வழுக்கு, மலைப்பாம்பு உள்ள பாதையில் வருகிறானே என்று இவள் அழுகிறாள்.


“அன்னாய் வாழி! வேண்டு அன்னை, ஒண்ணுதல்

ஒலி மென் கூந்தல் என் தோழி மேனி

விறல் இழை நெகிழ்த்த வீவு அரும் கடு நோய்,

அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும்,

பரவியும், தொழுதும், விரவு மலர் தூயும், 5

வேறு பல் உருவில் கடவுள் பேணி,

நறையும் விரையும் ஓச்சியும், அலவுற்று,

எய்யா மையலை, நீயும் வருந்துதி” (1-8)

பொருளுரை: தாயே நீ நீடு வாழ்வாயாக! நான் கூறுவதைக் கேட்பாயாக! ஒளியுடைய நெற்றியையும் அடர்ந்த மென்மையான கூந்தலையும் உடைய என் தோழியின் மேனியில் அணிந்த சிறப்பான அணிகலன்களை நழுவச் செய்த அழிக்க முடியாத கொடூர நோயைக் கண்டு, அகன்ற ஊரில் உள்ள, நடக்கப்போவதை அறிவிக்கும் கட்டுவிச்சி வேலன் முதலியோரைக் கேட்டும், வெவ்வேறு உருவங்களில் உள்ள கடவுளைப் பேணியும், பாராட்டியும், வணங்கியும், பல நிற மலர்களைக் கலந்து தூவியும், அகில் முதலிய நறுமணப் புகையையும், சந்தனம் முதலிய நறுமணப் பொருட்களையும் செலுத்தி, கலக்கமுற்று, காரணம் அறியாது, மயக்கமுடையவளாக நீயும் வருந்துகின்றாய்.


தோழியின் சொல் வன்மை

“நல் கவின் தொலையவும், நறும் தோள் நெகிழவும்,

புள் பி்றர் அறியவும், புலம்பு வந்து அலைப்பவும், 10

உள்கரந்து உறையும் உய்யா அரும் படர்,

செப்பல் வன்மையின் செறித்தியான் கடவலின்,” (9-12)

பொருளுரை: என் தோழியின் சிறப்பான அழகு கெடவும், அவளுடைய நறுமணமான தோள் மெலியவும், கை வளை வழுக்கி விழுவதை பிறர் அறியவும், தனிமையில் அவள் வருந்தவும், அவள் நெஞ்சின் உள் மறைந்திருக்கும் தாங்க முடியாத அரிய நோயை, என் சொல்லின் வன்மையால் அவளை நெருக்கி, கூறுமாறு நான் ஏவுவதால்,


அறம் உரைக்கும் தலைவியின் ஆற்றொணாத் துன்பம்

“முத்தினும், மணியினும், பொன்னினும், அத்துணை

நேர்வருங் குரைய கலங்கெடின் புணரும்,

சால்பும், வியப்பும், இயல்பும் குன்றின், 15

மாசறக் கழீஇ வயங்கு புகழ் நிறுத்தல்

ஆசறு காட்சி ஐயர்க்கும் அந்நிலை

எளிய என்னார் தொல் மருங்கு அறிஞர்,

மாதரும் மடனும் ஓராங்குத் தணப்ப

நெடுந்தேர் எந்தை அருங்கடி நீவி, 20

இருவேம் ஆய்ந்த மன்றல் இதுவென

நாம் அறி உறாலின் பழியும் உண்டோ?

ஆற்றின் வாரார் ஆயினும் ஆற்ற

ஏனை உலகத்தும் இயைவதால் நமக்கென”,

மான் அமர் நோக்கம் கலங்கிக் கையற்று, 25

ஆனாச் சிறுமையள் இவளும் தேம்பும்” (13-26)

பொருளுரை: என் தோழி கூறுகின்றாள், “முத்தினாலும் மணியினாலும் பொன்னினாலும், அளவுக்கு ஏற்றபடி இணைத்து இயற்றப்பட்ட அணிகலன்கள் பாழ்பட்டால், அவற்றைச் சேர்த்து இணைக்க முடியும். சான்றான்மையும் பெருமையும் ஒழுக்கமும் கெட்டால், மாசற்ற விளங்கும் புகழை பழைய நிலைக்குக் கொண்டு வருதல், குற்றமில்லாத காட்சியை உடைய சான்றோர்க்கும் அது எளிமையான செயல் என்று கூற மாட்டார்கள், பழைய நூல்களை அறிந்த அறிஞர்கள். பெற்றோரும் அவர்கள் தேர்ந்தெடுப்பவர்க்கு என்னைக் கொடுக்க எண்ணுவதையும் என்னுடைய மடமையும், ஒரு சேரக் கெட, உயர்ந்த தேரை உடைய என் தந்தையின் அரிய காவலைக் கடந்து, இருவரும் தேர்ந்த, களவு மணம் இது என நாம் தாயிடம் கூறுமிடத்து, பழியும் உண்டோ? அறிவுறுத்திய பின்னர், இசைந்து வாராது இருப்பினும், பொறுத்திருக்க, இம்மை மாறி மறுமை அடைந்த பொழுது நான் அடைய வேண்டும்”. மானைப் போன்ற அமர்ந்த நோக்கத்தை உடைய என் தோழி வருந்தி, செயலற்று, ஆற்ற முடியாத நோய் உடையவளாகத் தேம்புகின்றாள்.

தன்னிலை கூறும் தோழி

“இகல் மீக் கடவும் இரு பெரு வேந்தர்

வினை இடை நின்ற சான்றோர் போல,

இரு பேர் அச்சமோடியானும் ஆற்றலேன்” (27-29)

பொருளுரை: பகைமையுடன் தாக்கும் இரண்டு பெரிய வேந்தர்கள் இருவரை ஒன்றுசேர்க்கும் பணியில் இருக்கும் சான்றோர் போல, உனக்கும் என் தோழிக்கும் இடையே, நான் அச்சத்துடன் மிகவும் வருந்தி இருக்கின்றேன்.

குறிப்பு: அறத்தொடு நிற்கும் காலத்தன்றி அறத்தியல் மரபிலள் தோழி என்ப (தொல்காப்பியம், பொருளதிகாரம் 12).


தலைவியின் மனம் கூறும் தோழி

“கொடுப்பின் நன்கு உடைமையும், குடி நிரல் உடைமையும், 30

வண்ணமும் துணையும் பொரீஇ எண்ணாது,

எமியேம் துணிந்த ஏமம் சால் அருவினை

நிகழ்ந்த வண்ணம் நீ நனி உணரச்

செப்பல், ஆன்றிசின், சினவாதீமோ!’ (30-34)

பொருளுரை: மகட் கொடை கொடுக்குமிடத்தில் எல்லாம் நன்றாக முடியும் என்பதையும், தலைவனின் குடியும் தன்னுடைய குடியும் ஒத்தது என்பதையும், தலைவனின் பண்புகளையும், அவனது சுற்றத்தாரின் இயல்புகளையும் ஒப்பிட்டு நினைக்காது, நாங்கள் தனியாக, துணிந்து களவு ஒழுக்கத்தின் காவலை உடைய, அரிய செயலை நடத்தினோம். நீ அறிவதற்கு, அது நடந்த வண்ணம் நான் கூறுகின்றேன். சினம் கொள்ளாதே!

குறிப்பு: பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு உருவு நிறுத்த காம வாயில் நிறையே அருளே உணர்வொடு திரு என முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே (தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல் 25).


தலைவனோடு தலைவிக்கு ஏற்பட்ட தொடர்பின் தொடக்கம் தினைப்புனம் காவல்

“நெல் கொள் நெடு வெதிர்க்கு அணந்த யானை 35

முத்து ஆர் மருப்பின் இறங்கு கை கடுப்ப,

துய்த்தலை வாங்கிய புனிறு தீர் பெருங்குரல்,

நல் கோள் சிறு தினைப் படு புள் ஓப்பி

எல் பட வருதியர்” என நீ விடுத்தலின்,” (35-39)

பொருளுரை: “விதையை உடைய மூங்கிலை மேல் நோக்கி நின்ற யானை, தன்னுடைய முத்துக்கள் நிறைந்த தந்தத்தில் இறக்கி வைத்த தும்பிக்கையைப் போல, பஞ்சைப் போன்ற மேல் பகுதி உடைய, வளைந்த, முதிர்ந்த, பெரிய கொத்துக்களை நன்றாகத் தன்னிடம் கொண்ட சிறு தினையைத் தாக்கும் பறவைகளை விரட்டி விட்டு, கதிரவன் மறையும்பொழுதில் திரும்பி வருவீர்களாக”, எனக் கூறி நீ அனுப்பியதால்,


பறவை ஓட்டும் பாவையர்

“கலி கெழு மர மிசைச் சேணோன் இழைத்த 40

புலி அஞ்சு இதணம் ஏறி, அவண,

சாரல் சூரல் தகை பெற வலந்த

தழலும், தட்டையும், குளிறும், பிறவும்,

கிளி கடி மரபின ஊழ் ஊழ் வாங்கி,

உரவுக் கதிர் தெறூஉம் உருப்பு அவிர் அமயத்து,” (40-45)

பொருளுரை: ஆரவாரம் மிகுந்த மரத்தின் உச்சியில், தினைப் புனத்தின் காவலாளி, புலியின் மேல் கொண்ட அச்சத்தினால் செய்த பரணில் ஏறி, அங்கு மலைச் சரிவில் உள்ள பிரம்பினால் அழகாகப் பின்னிய தழல் என்ற கருவியையும், தட்டை என்ற கருவியையும், குளிர் என்ற கருவியையும், பிறவற்றையும், கிளியை ஓட்டும் முறைப்படி முறை முறையாகக் கையில் கொண்டு, ஞாயிற்றின் மிகுந்த கதிர்கள் சுடும் வெட்பத்துடன் அமைந்த ஒளியுடைய வேளையில்,

குறிப்பு: தழல் என்பது கையால் சுற்றும்பொழுது ஒலியை எழுப்பும் கருவி, தட்டை – மூங்கிலைப் பிளந்து தட்டி ஒலி எழுப்பும் கருவி, குளிர் – மூங்கிலை வீணையைப் போல கட்டித் தெறித்து ஒலி எழுப்பும் கருவி.


மழை பொழிந்த நண்பகல் நேரம்

“விசும்பு ஆடு பறவை வீழ் பதிப் படர,

நிறை இரும் பெளவம் குறைபட முகந்து கொண்டு

அகல் இரு வானத்து வீசு வளி கலாவலின்,

முரசு அதிர்ந்தன்ன இன் குரல் ஏற்றொடு,

நிரை செலல் நிவப்பின் கொண்மூ மயங்கி, 50

இன்னிசை முரசின் சுடர்ப் பூண் சேஎய் ஒன்னார்க்கு

ஏந்திய இலங்கு இலை எஃகின

மின் மயங்கு கருவிய கல் மிசைப் பொழிந்தென, “ (46-53)

பொருளுரை: வானத்தில் பறக்கும் பறவைகள் தாங்கள் விரும்பும் கூடுகளுக்குச் செல்லுமாறு, நீர் நிறைந்த பெரிய கடல் குறையுமாறு, முகில் கூட்டங்கள் நீரை அள்ளிக் கொண்டு, மிக அகன்ற வானத்தில் வீசுகின்ற காற்றுடன் கலப்பதால், முரசு அதிர்ந்தாற்போன்ற இனிய குரலை உடைய இடியுடன் கூடி வரிசையாக மேலே சென்று கலங்கி, இனிய இசையை உடைய முரசினையும் ஒளியுடைய அணிகலன்களையும் உடைய முருகன், பகைவர்களைக் கொல்லும்பொருட்டு, கையில் கொண்ட விளங்கும் இலையையுடைய வேல் ஆயுதத்தைப் போன்று உள்ள மின்னலுடனும் இடியுடனும் கூடிய தொகுதியுடையதாக, மலை மீது பொழிந்தன.


அருவியில் ஆடிய அரிவையர்

“அண்ணல் நெடுங்கோட்டு இழிதரு, தெள் நீர்

அவிர் துகில் புரையும் அவ்வெள் அருவி, 55

தவிர்வு இல் வேட்கையேம் தண்டாது ஆடிப்

பளிங்கு சொரிவு அன்ன பாய் சுனை குடைவுழி,

நளி படு சிலம்பில் பாயம் பாடிப்

பொன் எறி மணியின் சிறுபுறம் தாழ்ந்த எம்

பின்னிருங் கூந்தல் பிழிவனம் துவரி, 60

உள்ளகம் சிவந்த கண்ணேம். . . . .” (54-61)

பொருளுரை: தலைவனின் நெடிய மலை உச்சியிலிருந்து விழுகின்ற தெளிந்த நீரையுடைய, விளங்குகின்ற, துணியைப் போன்ற அழகிய வெள்ளை அருவியில், நீங்குதல் இல்லாத விருப்பமுடையவர்களாக ஒழிவின்றி விளையாடி, பளிங்கினைக் கரைத்து சொரிந்தாற்போன்ற அகன்ற சுனையில் குடைந்து விளையாடும் இடத்தே, அடர்ந்த மலையில், எங்கள் மனதுக்கு ஏற்றாற்போல் பாடி, பொன்னில் பதிக்கப்பட்ட நீலமணியைப் போல, எங்கள் சிறிய முதுகில் தாழ்ந்து கிடந்த பின்னப்பட்ட கூந்தலைப் பிழிந்து உலர்த்தினோம். உள்ளிடம் சிவந்த கண்களுடையவர்களாக ஆனோம்.

குறிப்பு: பாயம் (58) – மனவிருப்பம், பாசம் என்னும் வடமொழி பாயம் என்று நின்றது.

பாறையில் மலர் குவித்த பாவையர்

“———– ———— ———– வள் இதழ்

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம், 65

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான் பூங் குடசம்,

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,

பயினி, வானி, பல்லிணர்க் குரவம்,

பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, 70

விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,

குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,

குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,

போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,

செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம், 75

கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்

தில்லை, பாலை, கல்இவர் முல்லை,

குல்லை, பிடவம், சிறுமாரோடம்,

வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்

தாழை, தளவம், முள் தாள் தாமரை 80

ஞாழல், மௌவல், நறுந்தண் கொகுடி,

சேடல், செம்மல், சிறுசெங்குரலி கோடல்,

கைதை, கொங்கு முதிர் நறுவழை,

காஞ்சி, மணிக்குலைக் கள் கமழ் நெய்தல்,

பாங்கர், மராஅம், பல்பூந் தணக்கம், 85

ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை,

அடும்பு, அமர் ஆத்தி, நெடுங்கொடி அவரை,

பகன்றை, பலாசம், பல்பூம் பிண்டி,

வஞ்சி, பித்திகம், சிந்து வாரம்,

தும்பை, துழாஅய் சுடர்ப்பூந் தோன்றி, 90

நந்தி, நறவம், நறும் புன்னாகம்,

பாரம், பீரம், பைங்குருக்கத்தி,

ஆரம், காழ்வை, கடிஇரும் புன்னை,

நரந்தம், நாகம், நள்ளிருள்நாறி,

மாஇருங் குருந்தும், வேங்கையும் பிறவும் 95

அரக்கு விரிந்தன்ன பரு ஏர் அம் புழகுடன்

மால் அங்கு உடைய மலிவனம் மறுகி

வான்கண் கழீஇய அகல் அறைக் குவைஇ” (61-98)

பொருளுரை: அரக்கை விரித்தாற்போல் உள்ள பருத்த அழகிய மலை எருக்கம்பூவுடன், பிற மலர்களின் அழகிலும் மயங்கியதால், விருப்பத்துடன் திரிந்து அவற்றைப் பறித்து, மழை பெய்து கழுவிய அகன்ற பாறையில் குவித்தோம்.

இந்த மலர்கள் – பெரிய இதழுடைய ஒளியுடைய செங்காந்தள், ஆம்பல், அனிச்சம், குளிர்ந்த குளத்தின் குவளை, குறிஞ்சி, வெட்சி, செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை, தனக்கு உரித்தாக நாறும் விரிந்த கொத்துக்களையுடைய உந்தூழ், கூவிளம், தீயைப் போன்ற எறுழம், சுள்ளி, கூவிரம், வடவனம், வாகை, வான் பூங் குடசம், எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை, பயினி, வானி, பல கொத்துக்களையுடைய குரவம், பசும்பிடி, வகுளம், பல கொத்துக்களையுடைய காயா, விரிந்த மலராகிய ஆவிரை, வேரல், சூரல், குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி, குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம், போங்கம், திலகம், தேனின் மணத்தையுடைய பாதிரி, செருந்தி, அதிரல், பெரிதும் குளிர்ச்சியுடைய சண்பகம், கரந்தை, குளவி, நறுமணம் கமழும் மா, தில்லை, பாலை, பாறைகளில் படர்ந்த குல்லை, பிடவம், சிறுமாரோடம், வாழை, வள்ளி, நீண்ட நறுமணமான நெய்தல், தாழை, தளவம், முள்ளுடைய காம்பையுடைய தாமரை, ஞாழல், மௌவல், நறுமணமான குளிர்ந்த கொகுடி, சேடல், செம்மல், சிறுசெங்குரலி, கோடல், கைதை, கொங்கு முதிர் நறுவழை, காஞ்சி, மணிக்குலைக் கள் கமழ் நெய்தல், பாங்கர், மராஅம், பல பூக்களையுடைய தணக்கம், ஈங்கை, இலவம், தொங்கும் கொத்துக்களையுடைய கொன்றை, அடும்பு, அமர் ஆத்தி, நெடுங்கொடி அவரை, பகன்றை, பலாசம், பல பூக்களையுடைய பிண்டி, வஞ்சி, பித்திகம், சிந்து வாரம், தும்பை, துழாஅய், சுடர்ப்பூந் தோன்றி, நந்தி, நறவம், நறும் புன்னாகம், பாரம், பீரம், பைங்குருக்கத்தி, ஆரம், காழ்வை, கடிஇரும் புன்னை, நரந்தம், நாகம், நள்ளிருள்நாறி, கருமையான பெரிய குருந்தும், வேங்கையும் பிறவும்,


சொற்பொருள்:

1. செங்காந்தள் – Red malabar Glory Lily, Gloriosa Superba,

2. ஆம்பல் – White Water lily, Nymphaea lotus, அல்லி

3. அனிச்சம் – possibly Anaallis arvensis Linn,

4. குவளை – Nymphaea stellate/Nymphaea odorata, Blue Nelumbo,

5. குறிஞ்சி – Square branched conehead, Strobilanthes kunthiana,

6. வெட்சி – Scarlet Ixora, Ixora Coccinea,

7. செங்கொடுவேரி – Rosy-flowered leadwort, Plumbago rosea,

8. தேமா – மாமரம், Mango tree, Mangifera indica,

9. மணிச்சிகை – Ipomoea sepiaria, Koenig ex Roxb,

10. உந்தூழ் – பெருமூங்கில், Bambusa arundinaca,

11. கூவிளம் – வில்வம் மரம், Bael, Aegle marmelos,

12. எறுழம்பூ – Calycopteris floribunda,

13. சுள்ளி – Barleria prionitis,

14. கூவிரம் – Crateva religiosa,

15. வடவனம் – Ocimum sanctum/Ocimum gratissimum/Ocimum tenuiflorum, holy basil,

16. வாகை – மரம், Albyzzia Lebbeck,

17. குடசம் – Holarrhena antidysentrica,

18. எருவை – நாணல், Typha angustata, reed,

19. செறுவிளை – White-flowered mussel-shell creeper, Clitoria ternatea-albiflora,

20. கருவிளம், Mussell-shell creeper, Clitoria ternatea,

21. பயினி – Vateria indica, hill country tree,

22. வானி – Euonymus dichotomous,

23. குரவம் – Webera corymbosa,

24. பசும்பிடி – பச்சிலை, மரம், Mysore gamboge, Garcinia xanthochymus,

25. வகுளம் – மகிழ் மரம், Pointed-leaved ape-flower, Mimusops elengi,

26. காயா – காசாமரம், Ironwood tree, Memecylon edule,

27. ஆவிரை – செடி, Tanner’s senna, Cassia auriculata,

28. வேரல் – சிறுமூங்கில்- Swollen node-ringed semi-solid medium bamboo,

Arundinaria wightiana Nees,

29. சூரல் – Calamus rotang – R. Panchavarnam,

சூரை செடி – Oblique-leaved jujube or small-fruited jujube,

Zizyphus oenoplia, P.L. Sami and Palaniappan Vairam Parthasarathy,

30. குரீஇப்பூளை, சிறுப் பூளை – களை, A common weed, Aerua lanata,

31. குறுநறுங்கண்ணி – குன்றி, குன்னி முத்து, Crab’s eye, Abrus precatorius,

32. குருகிலை – Butea frondosa/ficus virens,

33. மருதம் – மருதமரம், நீர்மருது, Black winged myrobalan, கருமருது, Terminalia elliptica/Terminalia arjuna,

34. கோங்கம் – இலவு மரம், False tragacanth, Cochlospermum gossypium,

35. போங்கம் – மரம், Osmosia travancorica,

36. திலகம் – Adenanthera pavonina,

37. பாதிரி – மரம், yellow flower trumpet tree, Stereospermum chelonoides,

38. செருந்தி – மரம், Panicled golden-blossomed pear tree, Ochna squarrosa,

39. அதிரல் – Derris Scandens மல்லிகைவகை, Wild jasmine,

40. சண்பகம் – மரம், champak, Michelia champaca,

41. கரந்தை – Spaeranthus indicus,

42. குளவி – பன்னீர் பூ, மரமல்லிகை, Millingtonia hortensis,

43. மா – மாமரம், Mango tree, Mangifera indica,

44. தில்லை – மரம், Excoecaria agallocha, Blinding tree,

45. பாலை – Wrightia tinctoria/Mimusops kauki,

46. முல்லை – Jasminum sambac,

47. கஞ்சங்குல்லை – Cannabis sativa,

48. பிடவம் – Bedaly emetic-nut, Randia malabarica,

49. சிறுமோரோடம், செங்கருங்காலி, Acacia sundra/Acacia catechu,

50. வாழை – plantain, Musa paradisiaca

, 51. வள்ளி – கிழங்கு கொடி, Dioscorea alata/Convolvulus batatas,

52. நெய்தல் – Nymphaea Stellata, Blue waterlily,

53. தாழை – Coconut tree, Cocos nucifera,

54. தளவம் – மஞ்சள் முல்லை, Jasminum elongatum/Jasminum polyanthum,

55. தாமரை – Lotus, Nelumbium speciosum,

56. ஞாழல் – University of Madras Lexicon – புலிநகக்கொன்றை, Cassia sophera,

Tigerclaw tree, Heritiera Littoralis/ Caesalpinia,

57. மௌவல் – Jasminum officinale,

58. கொகுடி – Jasminun pubescens, முல்லைக்கொடி வகை,

59. சேடல் – Nyctanthes arbor-tristis, Night-flowering jasmine, பவளமல்லிகை,

60. செம்மல் – சாதிப்பூ, Jasminum grandiflorum, முல்லைப்பூ வகை,

61. சிறுசெங்குரலி – Trapa bispinosa Roxb,

62. கோடல் – வெண் காந்தள், Gloriosa superba,

63. கைதை – தாழ், தாழம்பூ, Pandanus odoratissimus,

64. வழை – சுரபுன்னை, Long-leaved two-sepalled gamboge, Ochrocarpus longifolius,

65. காஞ்சி – பூவரச மரம், portia tree, Thespesia populnea,

66. கருங்குவளை – மணிக் குலை, குவளை வகை, Blue Nelumbo, Nymphaea Stellata/Nymphaea rubra,

67. பாங்கர் – Tooth-brush tree, Salvadora persica; ஓமை, Sandpaper-tree, Dillenia indica, உவாமரம்,

68. மரவம் – வெண்கடம்பு, Seaside Indian oak, Barringtonia racemosa,

69. தணக்கம் – நுணா என்னுங் கொடி, Small ach root,

Morinda umbellate – University of Madras Lexicon,

70. ஈங்கை – ஈங்கு செடி, Mimosa rubicaulis,

71. இலவம் – மரம், Red-flowered silk-cotton tree, Bombax malabaricum,

72. கொன்றை – சரக்கொன்றை, Indian laburnum, Cassia fistula,

73, அடும்பு – கொடி, Ipomaea pes caprae,

74. ஆத்தி – மரம், Common mountain ebony, Bauhinia racemosa/Bauhinia tomentosa,

75. அவரை – கொடி, Field-bean, Dolichos lablab,

76. பகன்றை – சிவதை கொடி, Indian jalap, Operculina turpethum,

77. பலாசம் – புரசமரம், Palas-tree, Butea frondosa,

78. பிண்டி – Asōka tree, Saraca indica,

79. வஞ்சி – Salis tetrosperma, இலுப்பை மரம், Bassia malabarica,

80. பித்திகம் – பித்திகை, Jasminum augustifolium,

81. சிந்துவாரம் – கருநொச்சி, Three-leaved Chaste tree, Vitex negundo/Vitex trifolia,

82. தும்பை – செடி, White dead nettle, Leucas, Bitter toombay, Leucas aspera,

83. துழாய், tulasī, Sacred basil, Ocimum sanctum,

84. தோன்றி – Gloriosa superba, Red Malabar glory lily, செங்காந்தள்,

85. நந்தி – நந்தியாவட்டம், East Indian rosebay, Tabernaemontana coronaria,

86. நறவம் – நறுமணக்கொடி, Luvunga scandens,

87. புன்னாகம் – சிறு மரம், Callophylum elatum,

88. பாரம் – பருத்தி செடி, Indian cotton-plant, Gossypium herbaceum,

89. பீரம் – பீர்க்கு, Luffa acutangula,

90. குருக்கத்தி – மாதவிக்கொடி, Hiptage madablota,

91. ஆரம் – சந்தனம், Sandalwood tree, Santalum album,

92. காழ்வை – அகில், Eagle-wood, Aquilaria agallocha,

93. புன்னை – மரம், Mast-wood, Calophyllum inophyllum,

94. நரந்தம் – நாரத்தை, Bitter orange or Cymbopogon flexuosus – grass,

95. நாகப்பூ – Iron wood of Ceylon, Mesua ferrea,

96. நள்ளிருணாறி – இருவாட்சி, big jasmine variety, Jasminum sambac,

97. குருந்தம் – புனவெலுமிச்சை, wild lime, Atlantia monophylla, wild orange, citrus indica,

98. வேங்கை – East Indian kino tree, Pterocarpus marsupium,

99. புழகு – Calotropis gigantea,


மர நிழலில் தங்கிய மங்கையர்

“புள்ளார் இயத்த விலங்கு மலைச் சிலம்பின்

வள் உயிர் தெள் விளி இடை இடைப் பயிற்றிக் 100

கிள்ளை ஓப்பியும், கிளை இதழ் பறியாப்

பை விரி அல்குல் கொய் தழை தைஇப்

பல் வேறு உருவின் வனப்பு அமை கோதை

எம் மெல் இரு முச்சிக் கவின் பெறக் கட்டி,

எரி அவிர் உருவின் அம் குழைச் செயலைத் 105

தாது படு தண்ணிழல் இருந்தனம் ஆக,” (99-106)

பொருளுரை: பறவைகள் ஒலியாகிய இசைக்கருவிகளை உடைய, குறுக்கிட்டுக் கிடக்கும் மலைச் சரிவில், பெரிய ஒலியுடன் தெளிந்த சொற்களை இடையிடையே கூறி, கிளிகளை விரட்டியும், புற இதழ்களைக் களைந்து, பாம்பின் படத்தைப் போன்று படர்ந்த அல்குலில், கொய்த தழையினால் செய்த ஆடையைக் கட்டி, பல்வேறு உருவங்களில் அழகான மலர்மாலைகளை எங்களுடைய மெல்லிய கரிய கொண்டையில் அழகாகக் கட்டி, நெருப்பைப் போல உள்ள நிறத்தையுடைய அழகிய தளிரையுடைய அசோக மர மலர்த் தாது விழுகின்ற, குளிர்ச்சியான நிழலில் இருந்தோம்.


தலைவனின் எழில்

“எண்ணெய் நீவிய சுரி வளர் நறும் காழ்த்

தண் நறும் தகரம் கமழ மண்ணி,

ஈரம் புலர விரல் உளர்ப்பு அவிழா,

காழ் அகில் அம் புகை கொளீஇ, யாழிசை 110

அணி மிகு வரி மிஞிறு ஆர்ப்பத் தேங்கலந்து

மணி நிறம் கொண்ட மா இருங் குஞ்சியின்,

மலையவும், நிலத்தவும், சினையவும், சுனையவும்,

வண்ண வண்ணத்த மலர் ஆய்பு விரைஇய

தண் நறும் தொடையல், வெண் போழ்க் கண்ணி, 115

நலம் பெறு சென்னி நாம் உற மிலைச்சி,” (107-116)

பொருளுரை: எண்ணெய் தடவிய, சுருண்டு வளர்ந்த, கருமை நிறமுடைய, நீலமணியின் நிறத்தைக் கொண்ட பெரிய கருமையான மயிரின்கண், குளிர்ந்த நறுமணமான சாந்தினை மணம் கமழ பூசி, ஈரம் உலர விரலால் கோதி, பிணைப்பை அவிழ்த்து, யாழ் இசையைப் போன்று பாடும், அழகு மிகுந்த தேனீக்கள் அந்த மணத்தை விரும்பி ஆரவாரிக்குமாறு, வைரம் பாய்ந்த (அடர்ந்த மரம்) அகிலின் அழகிய புகையை ஊட்டியிருந்தான். மலையிலிருந்தும், நிலத்திலிருந்தும், மரத்தின் கிளைகளிலிருந்தும், சுனையிலிருந்தும், பல நிறங்களில் மலர்களைத் தேர்ந்து தொடுத்த, குளிர்ச்சியுடைய நறுமணமான மலர் மாலையையும், வெள்ளை பனை மடலின் கண்ணியாலும், சிறப்பைப் பெற்ற தலையில் அணிந்து, முருகன் என கண்டோர் அச்சம் உண்டாகுமாறு அவன் தோற்றமளித்தான்,

ஞிமிறு என்றே இப்பெயர்ச்சொல் இலக்கியங்களில் பயில வழங்குவதாம். மிஞிறு என்றல் எழுத்துநிலை மாறுதல் என்ப. மிஞிறு – தேனீ,


“பைங்கால் பித்திகத்து ஆய் இதழ் அலரி

அம் தொடை ஒரு காழ் வளைஇச் செந்தீ

ஒண் பூம் பிண்டி ஒரு காது செரீஇ,

அம் தளிர்க் குவவு மொய்ம்பு அலைப்பச் சாந்து அருந்தி 120

மைந்து இறை கொண்ட மலர்ந்து ஏந்து அகலத்து,

தொன்று படு நறும் தார் பூணொடு பொலிய,

செம் பொறிக்கு ஏற்ற வீங்கு இறைத் தடக் கையின்

வண்ண வரிவில் ஏந்தி அம்பு தெரிந்து,

நுண் வினைக் கச்சைத் தயக்கு அறக் கட்டி, 125

இயல் அணிப் பொலிந்த ஈகை வான் கழல்

துயல்வருந்தோறும் திருந்தடிக் கலாவ,” (117-127)

பொருளுரை: பச்சைக் காம்பையுடைய பிச்சி மலரின் அழகிய இதழ்களால் அழகாக தொடுத்த ஒரு மாலையைத் தலைமயிரில் சுற்றி, சிவப்பு நெருப்பைப் போன்ற ஒளியுடைய பிண்டி பூக்களை அழகிய தளிருடன் ஒரு காதில் சொருகி, அத் தளிர் அவனுடைய திரண்ட தோளில் அலைப்ப (உரச), சாந்தைத் தடவிய வலிமை கொண்ட உயர்ந்த மார்பில் தொன்றுதொட்டு அணியும் மரபாகிய நறுமணமான மாலையை அணிகலன்களுடன் பொலிய அணிந்து, சிவப்பு பொறிகள் பொருந்திய பெரிய முன்னங்கையை உடைய பெரிய கைகளில், நிறமுடைய வரிந்த வில்லை ஏந்தி, அம்பை ஆராய்ந்து பிடித்து, நுண்ணிதாக செய்த கச்சையை அசையாதபடி கட்டி, இயல்பாக அழகாக பொலிந்த பொன்னினால் ஆன உயர்ந்த வீரக்கழல்கள் அவன் திருத்தமாக அடியெடுத்து நடக்கும் பொழுதெல்லாம் உயர்ந்தும் தாழ்ந்தும் அசைய,

வந்தன நாய்கள்

“முனை பாழ்படுக்கும் துன்னருந் துப்பின்,

பகை புறங் கண்ட பல்வேல் இளைஞரின்,

உரவுச்சினம் செருக்கித் துன்னுதொறும் வெகுளும் 130

முளை வாள் எயிற்ற வள் உகிர் ஞமலி,

திளையாக் கண்ண வளைகுபு நெரிதர,

நடுங்குவனம், எழுந்து நல்லடி தளர்ந்து யாம்

இடும்பை கூர் மனத்தேம், மருண்டு புலம் படர,” (128-134)

பொருளுரை: பகைப் புலத்தைப் பாழ்படுத்தும், நெருங்க முடியாத வலிமையுடன், பகைவர்கள் புறமுதுகிட்டு ஓடுவதைக் கண்ட வேற்படையை உடைய இளைய மறவர்களைப் போன்று மிகுந்த சினத்தால் செருக்குற்று, நெருங்கும்தோறும் சினக்கும் மூங்கில் முளையைப் போன்ற ஒளியுடைய பற்களையும் கூர்மையான நகங்களையும் உடைய நாய்கள், இமைக்காத கண்களுடன் எங்களைச் சுற்றி வளைத்து நெருங்க, நாங்கள் நடுங்கினோம். எழுந்து, அடி தளர்ந்து, நாங்கள் வருத்தம் மிக்க நெஞ்சுடையவர்களாக மருண்டு, இடத்தைவிட்டுச் செல்ல,


நாய்களை அடக்கிக் கெடுதி வினவிய தலைவன்

“மாறு பொருது ஓட்டிய புகல்வின் வேறு புலத்து 135

ஆ காண் விடையின், அணி பெற வந்து, எம்

அலமரல் ஆயிடை வெரூஉதல் அஞ்சி,

மெல்லிய இனிய மேவரக் கிளந்து, எம்

ஐம்பால் ஆய் கவின் ஏத்தி, “ஒண் தொடி

அசைமென் சாயல் அவ்வாங்கு உந்தி 140

மட மதர் மழைக் கண் இளையீர்! இறந்த

கெடுதியும் உடையேன்” என்றனன். (135-142)

பொருளுரை: தனக்குப் பகையாகிய பிற காளைகளை விரட்டிய, செருக்கு மிக்க, வேறு நிலத்துப் பசுக்களைக் கண்ட காளையைப் போல, அழகுடன் வந்து, நாங்கள் மனக் கலக்கம் அடைந்த வேளையில், நாங்கள் அஞ்சுவதைக் கண்டு தானும் அஞ்சி, எங்களிடம் மென்மையான இனிமையான சொற்களைப் பொருந்துமாறு கூறி, எங்களுடைய ஐந்து பிரிவாகிய கூந்தலையும், எங்களின் பலரால் ஆராயப்பட்ட அழகையும் புகழ்ந்து, “ஒளியுடைய வளையல்களையும், அசையும் மென்மையான சாயலையும், அழகிய வளைந்த கொப்பூழினையும், மடமையுடைய அழகான ஈர கண்களையுமுடைய இளையவர்களே! நான் வேட்டையாடிய விலங்கு தப்பிப் போன நிலையில் உள்ளேன்”. குறிப்பு: சாயல் – சாயல் மென்மை (தொல்காப்பியம், உரியியல் 29).


தலைவியின் சொல்லை எதிர்பார்த்து நின்றான் தலைவன் “——– ———- ———– அதன் எதிர்

சொல்லேம் ஆதலின், அல்லாந்து கலங்கிக்

“கெடுதியும் விடீஇர் ஆயின் எம்மொடு

சொல்லலும் பழியோ மெல்லியலீர்” என 145

நைவளம் பழுநிய பாலை வல்லோன்

கை கவர் நரம்பின், இம்மென இமிரும்

மாதர் வண்டொடு சுரும்பு நயந்து இறுத்த

தாது அவிழ் அலரித் தா சினை பிளந்து,

தாறு அடு களிற்றின் வீறு பெற ஓச்சி, 150

கல்லென் சுற்றக் கடுங்குரல் அவித்து, எம்

சொல்லற் பாணி நின்றனன் ஆக” (142-152)

பொருளுரை: நாங்கள் அதற்குப் பதில் கூறவில்லை. அதனால் அவன் வருந்தி, கலங்கி, “என்னிடமிருந்து தப்பிய விலங்கை நீங்கள் காட்டாவிட்டாலும், என்னுடன் பேசுவது உங்களுக்குப் பழியாகுமா, மென்மையானவர்களே?” என்று நட்ட ராகம் முற்றுப் பெற்ற பாலை யாழில் வல்லவன் தன் கையினால் தெறித்த நரம்பைப் போல இம்மென்று இசைக்கும், காதலுடைய பெண் வண்டுகளுடன் ஆண் வண்டுகள் விரும்பி வந்து தங்கும் பூந்தாது உடைய மலர்கள் மலர்ந்த தழைத்து படர்ந்த மரக்கிளையை ஒடித்து, பாகனின் பரிக்கோலை மீறிய களிற்று யானையைப் போல், அக் கிளையை வெற்றியுண்டாக வீசி, ஓசையுண்டாகக் குரைக்கும் தன்னுடைய சுற்றியுள்ள வேட்டை நாய்களின் கடுமையான குறைத்தலை அடக்கி, எங்கள் விடைக்காகக் காத்து நின்றான்.


காவலன் எய்திய அம்பினால் சினமடைந்த யானை

“இருவி வேய்ந்த குறுங்கால் குரம்பைப்

பிணை ஏர் நோக்கின் மனையோள் மடுப்ப,

தேம்பிழி தேறல் மாந்தி மகிழ் சிறந்து, 155

சேமம் மடிந்த பொழுதின், வாய்மடுத்து

இரும் புனம் நிழத்தலின், சிறுமை நோனாது,

அரவு உறழ் அம் சிலை கொளீஇ, நோய்மிக்கு

உரவுச்சின முன்பால் உடல் சினம் செருக்கிக்

கணை விடு புடையூக் கானம் கல்லென 160

மடி விடு வீளையர் வெடிபடுத்து எதிரக்

கார்ப் பெயல் உருமிற் பிளிறிச் சீர்த் தக

இரும்பிணர்த் தடக்கை இரு நிலம் சேர்த்திச்

சினம் திகழ் கடாஅம் செருக்கி மரம் கொல்பு

மையல் வேழம் மடங்கலின் எதிர்தர, 165

உய்வு இடம் அறியேம் ஆகி, ஒய்யென

திருந்து கோல் எல் வளை தெழிப்ப, நாணு மறந்து,

விதுப்புறு மனத்தேம் விரைந்து அவற் பொருந்திச்

சூர் உறு மஞ்ஞையின் நடுங்க,” ( 153-169)

பொருளுரை: தினை அரிந்த தாளால் செய்த குறுகிய கால்களையுடைய குடிலில் பெண் மானின் அழகிய நோக்கினையுடைய மனைவி குடிக்கக் கொடுக்க, ஒருவன் தேனால் செய்த கள்ளினைக் குடித்து, மிகவும் மகிழ்ச்சி அடைந்து, தினைப்புனத்தின் காவலை நிறுத்திய பொழுது, ஒரு யானை பெரிய புனத்தில் தினையை உண்டு அழித்ததால், சிறிய அளவு தினையையும் பெறாது, பாம்பைப் போன்ற அழகிய வில்லில் நாணை ஏற்றி, வருத்தம் மிகுந்ததால் மிகுந்த சினம் கொண்டு, வலிமையுடன், உடலில் சினத்திற்குரிய அடையாளங்கள் தோன்ற, அம்பைச் செலுத்தி, தன்னுடன் பணி புரியும் இளைஞர்களுடன் சேர்ந்து தட்டை முதலியவற்றை தட்டி ஒலி உண்டாக்கி, காட்டில் கல்லென்ற ஒலி பிறக்கும்படி அவர்களுடன் வாயை மூடி சீழ்க்கையடித்து மிக்க ஒலியை உண்டாக்கி அவன் யானையை விரட்ட, கார்கால இடியைப் போலப் பிளிறி, தன் தலைமைக்குத் தக்க கரிய சருச்சரை உடைய பெரிய தும்பிக்கையைப் பெரிய நிலத்தில் சேர்த்துச் சினம் திகழ்வதற்குக் காரணமான மதத்தால் செருக்குடன் மரங்களை முறித்துப் போட்டது, அந்தக் கலக்கமடைந்த யானை. அது கூற்றுவனைப் போல் எங்களை நோக்கி வர, தப்பிக்க இடம் அறியாது, விரைவாக, எங்கள் திருத்தமான திரண்ட ஒளியுடைய வளையல்கள் ஒலிக்க, எங்களின் நாணத்தை மறந்து, விரைந்து, நடுங்கும் மனது உடையவர்களாக, அவனை அடைந்து, கடவுள் ஏறிய மயிலைப் போல நாங்கள் நடுங்க,


யானை மீது அம்பைச் செலுத்தினான் தலைவன்


“——— —————————— வார் கோல்

உடு உறும் பகழி வாங்கிக் கடு விசை 170

அண்ணல் யானை அணி முகத்து அழுத்தலின்,

புண் உமிழ் குருதி முகம் பாய்ந்து இழிதரப்

புள்ளி வரி நுதல் சிதைய, நில்லாது

அயர்ந்து புறங்கொடுத்த பின்னர், நெடுவேள்

அணங்கு உறு மகளிர் ஆடுகளம் கடுப்பத்” (169-175)

பொருளுரை: நீண்ட கோலையுடைய உடுச் சேர்ந்த கணையை, இழுத்து விரைவாகச் செல்லும்படி ஏவி, தலைமையுடைய யானையின் அழகிய முகத்தில் புகுத்தியதால் புண்ணாகி, அந்தப் புண்ணிலிருந்து கொட்டும் குருதி முகத்தில் பரவி கீழே வடிய, புள்ளியும் வரியும் உடைய நெற்றி அழிய, நிற்காது தன்னை மறந்து புறமுதுகிட்டு ஓடிய பின்னர், முருகன் தீண்டியதால் வருத்தமுற்ற பெண்களுக்காக ஏற்படுத்தப்பட்ட வெறியாட்டுக் களத்தைப் போன்று,


“திணி நிலைக் கடம்பின் திரள் அரை வளைஇய

துணையறை மாலையின், கை பிணி விடேஎம்,

நுரையுடைக் கலுழி பாய்தலின் உரவுத் திரை

அடுங் கரை வாழையின் நடுங்கப் பெருந்தகை,

“அஞ்சில் ஓதி! அசையல்! யாவதும் 180

அஞ்சல், ஓம்பு நின் அணி நலம் நுகர்கு” என

மாசு அறு சுடர் நுதல் நீவி, நீடு நினைந்து,

என் முகம் நோக்கி நக்கனன்” (176-183)

பொருளுரை: திண்மையான கடம்ப மரத்தின் திரண்ட அடிப்பகுதியில் வளையச் சூட்டிய மகளிர் ஒழுங்குக்கு ஒப்புச் சாற்றுதலையுடைய மாலையைப் போன்று, நாங்கள் எங்கள் கோத்த கைகளை விடவில்லை. நுரையையுடைய புது வெள்ளம் பாய்ந்ததால் வலிமையான அலைகள் கரையை இடிக்கும்பொழுது நடுங்கும் வாழை மரத்தைப் போல் நடுங்கினோம் நாங்கள். பெரிய தலைவன், “அழகிய மென்மையான கூந்தலை உடையவளே! தடுமாறாதே! அச்சம் கொள்ளாதே! உன்னுடைய அழகிய நலத்தை நுகர்வேன் நான்” என, மாசு இல்லாத தலைவியின் ஒளியுடைய நெற்றியைத் தடவி, அதன் பின் நீண்ட நேரமாக நினைத்து, தலைவியின் தோழியான என்னுடைய முகத்தை நோக்கி நகைத்தான்.

குறிப்பு: துணை அறை மாலை (177) – மகளிர் ஒழுங்குக்கு ஒப்புச் சாற்றுதலையுடைய மாலையைப் போன்று, ‘கடம்பினை முருகனாகக் கருதி மாலை சூடுதல் மரபு’.


தலைவி தலைவனோடு கூடல்

“——— ————— அந்நிலை

நாணும் உட்கும் நண்ணுவழி அடைதர,

ஒய்யெனப் பிரியவும் விடாஅன், கவைஇ, 185

ஆகம் அடைய முயங்கலின்” (183-186)

பொருளுரை: அவளை அணுகினபொழுது நாணமும் அச்சமும் அவளுக்கு வந்து தோன்றுகையால், விரைவாக பிரியவும் விடவில்லை அவன். அவளை அணைத்து அவளுடைய மார்பு தன்னுடைய மார்பிலே ஒடுங்குமாறு அவளைத் தழுவினான்.


தலைவன் நாட்டின் சிறப்பு

“———- ——— அவ்வழி

பழு மிளகு உக்க பாறை நெடுஞ்சுனை

முழு முதற் கொக்கின் தீங்கனி உதிர்ந்தென,

புள் எறி பிரசமொடு ஈண்டி, பலவின்

நெகிழ்ந்து உகு நறும் பழம் விளைந்த தேறல், 190

நீர் செத்து அயின்ற தோகை, வியல் ஊர்ச்

சாறு கொள் ஆங்கண் விழவுக் களம் நந்தி

அரிக்கூட்டு இன்னியம் கறங்க ஆடுமகள்

கயிறு ஊர் பாணியின் தளரும், சாரல்

வரையர மகளிரின் சாஅய் விழைதக, 195

விண் பொரும் சென்னிக் கிளைஇய காந்தள்

தண் கமழ் அலரி தாஅய் நன் பல

வம்பு விரி களத்தின், கவின் பெறப் பொலிந்த

குன்று கெழு நாடன்” (186-199)

பொருளுரை: அங்கு, பழுத்த மிளகு உதிர்ந்து கிடக்கின்ற பாறை ஒன்றின் மேல் உள்ள பெரிய சுனையில், பெரிய அடிப்பகுதியை உடைய மாவின் இனிய கனிகள் உதிர்ந்தன. அதனுடன் வண்டுகள் சிதறியத் தேனும், பலா மரத்தின் வெடித்து தேன் சொரியும் நறுமணமான பழங்களின் சாறும் கலந்து, விளைந்த கள்ளாகியது. அதனை நீர் என்று எண்ணி குடித்த மயில் ஒன்று, பெரிய ஊரின் விழாக் களத்தில் மிகுந்து அரித்து எழும் ஓசையைக் கூட்டிய இனிய இசைக் கருவிகள் ஒலிக்க, கயிறாடும் பெண் கயிற்றில் ஏறி தாளத்திற்கு ஏற்ப ஆடி பின் தளர்ந்தது போல் தளர்ந்தது. மலையில் உள்ள பெண் கடவுள்கள் ஆடுவதால், காண்பவர் விரும்பும்படி விண்ணைத் தொடும் மலை உச்சியில் உள்ள குளிர்ச்சியுடைய மணம் வீசும் மலர்களைக் கொண்ட, கிளையுடைய காந்தள் செடிகள் கீழ் நிலத்தில் படர்ந்து, சிறிது கெட்டாலும், நல்ல பல துணிகளை விரித்த களத்தைப் போன்று அழகாகப் பொலிந்த மலை பொருந்திய நாட்டின் தலைவன்,

குறிப்பு: நச்சினார்க்கினியர் உரை – (187-191) – மிளகு உக்க பாறை அந்நிலத்து மாக்கள் உறைகின்ற ஊராகவும், நெடுஞ்சுனை தலைவன் குடியாகவும், மாம்பழத்தாலும் பலாப்பழத்தாலும் விளைந்த தேறல் தந்தையாலும் தாயாலும் உளனாகிய தலைவனாகவும், பிரசம் இவரைக்கூட்டின பால்வரை தெய்வமாகவும், அதனை உண்ட மயில் உயர்ந்த தலைவனைத் தன் குலத்திற்கு ஓத்தானாகக் கருதி நுகர்ந்த தலைவியாகவும், அத் தேறலில் பிறந்த களிப்பு களவொழுக்கத்திற் பிறந்த பேரின்பமாகவும், மயில் ஆடவாற்றாத் தன்மை வருந்திக் குறைந்த தன்மையாகவும் உள்ளுறை உவமம் கொள்க. நச்சினார்க்கினியர் உரை (196-199)– உயர் நிலத்தே நின்று மணக்கின்ற காந்தள் வரையர மகளிராற் கீழ் நிலத்தே பரந்து அவ்விடத்தைக் கச்சு விரித்தாற்போல் அழகு பெறுத்தும் என்றதனால் நம்மில் உயர்ச்சியுடைய தலைவன் நமது நல்வினையால் தனது பெருமைதானும் ஒழிந்து இவ்விடத்தே வந்து கூடி நமக்கும் உயர்ச்சியுளதாக்கி நம்மை அழகு பெறுத்துகின்றான் என்று உள்ளுறை உவமம் எய்திற்று.

இல்லறம் நாடினான் இனியவன்

“———————–எம் விழைதரு பெருவிறல்

உள்ளத் தன்மை உள்ளினன் கொண்டு, 200

“சாறு அயர்ந்தன்ன மிடாஅச் சொன்றி

வருநர்க்கு வரையா வளநகர் பொற்ப

மலரத் திறந்த வாயில் பலர் உண

பைந்நிணம் ஒழுகிய நெய்ம் மலி அடிசில்

வசை இல் வான் திணைப் புரையோர் கடும்பொடு 205

விருந்து உண்டு எஞ்சிய மிச்சில், பெருந்தகை,

நின்னோடு உண்டலும் புரைவது” என்று ஆங்கு

அறம் புணை ஆகத் தேற்றி” (199-208)

பொருளுரை: தலைவியை விரும்புகின்ற பெரிய வெற்றியை உடையவன், தலைவியின் உள்ளத்தின் தன்மையை எண்ணிக் கொண்டு, “விழாக் கொண்டாடினாற்போல் பெரிய பானையில் சோறு சமைத்து, வருபவர்களுக்கு எல்லையில்லாமல் உண்ணுவதற்கு கொடுத்து, செல்வமுடைய இல்லம் பொலியுமாறு அகலத் திறந்த வாசலுடன் பலர் உண்ணுவதற்கு, பசுமையான கொழுப்பு, நெய் நிறைந்த சோறு ஆகியவற்றை, குற்றமில்லாத உயர்ந்த குடியின் சான்றோர், மற்றும் சுற்றத்தாரும் விருந்து உணவாக உண்டு மிஞ்சியதை, தகமையுடையவளே! உன்னுடன் உண்ணுதல் உயர்ந்தது”, என்று அங்கு, அறமுடைய இல்லறம் தங்களுக்குப் புணையாக இருக்கும் என்று தலைவிக்கு விளக்கி, குறிப்பு: பொற்பு – பொற்பே பொலிவு (தொல்காப்பியம், உரியியல் 39).


ஆணை தந்து ஆற்றுவித்தான் தலைவன்

“————– பிறங்கு மலை

மீ மிசைக் கடவுள் வாழ்த்திக் கைதொழுது,

ஏமுறு வஞ்சினம் வாய்மையின் தேற்றி, 210

அம் தீம் தெள் நீர் குடித்தலின், நெஞ்சமர்ந்து

அரு விடர் அமைந்த களிறு தரு புணர்ச்சி,

வான் உரி உறையுள் வயங்கியோர் அவாவும்

பூ மலி சோலை அப்பகல் கழிப்பி” (208-214)

பொருளுரை: பெரிய மலையின் மிக உயரத்தில் உள்ள கடவுளான முருகனை வாழ்த்தி, கையால் தொழுது, தலைவி இன்பமுறுவதற்காகச் சூளுரையை உண்மையாகத் தெளிவித்து, அழகிய இனிய தெளிந்த நீரை அவன் குடித்ததால், தலைவியின் நெஞ்சு அவனது சூளுரையில் பொருந்தியது. வானத்தில் உறையும் தேவர்கள் விரும்பும் பூக்கள் நிறைந்த சோலையில், அரிய காட்டில் உள்ள களிற்று யானையால் கூடின அவர்கள், ஒன்றாக அந்தப் பகலைக் கழித்து,


வந்தது மாலைக் காலம்!

“எல்லை செல்ல ஏழ் ஊர்பு இறைஞ்சிப் 215

பல் கதிர் மண்டிலம் கல் சேர்பு மறைய,

மான் கணம் மர முதல் தெவிட்ட, ஆன் கணம்

கன்று பயிர் குரல மன்று நிறை புகுதர,

ஏங்கு வயிர் இசைய கொடு வாய் அன்றில்

ஓங்கு இரும் பெண்ணை அக மடல் அகவப் 220

பாம்பு மணி உமிழப் பல் வயின் கோவலர்

ஆம்பல் அம் தீம் குழல் தெள் விளி பயிற்ற,

ஆம்பல் ஆய் இதழ் கூம்புவிட, வள மனைப்

பூந்தொடி மகளிர் சுடர் தலைக் கொளுவி,

அந்தி அந்தணர் அயரக் கானவர் 225

விண் தோய் பணவை மிசை ஞெகிழி பொத்த,

வானம் மாமலைவாய் சூழ்பு கறுப்புக் கானம்

கல்லென்று இரட்ட, புள்ளினம் ஒலிப்ப,

சினைஇய வேந்தன் செல் சமம் கடுப்பத்

துனைஇய மாலை துன்னுதல் காணூஉ,” (215-230)

பொருளுரை: பகல் நேரம் போகும்படி ஏழு குதிரைகள் உடைய தேரைச் செலுத்தி பல கதிர்களையுடைய கதிரவன் மலையை அடைந்து மறையவும், மான் கூட்டம் மரத்தின் அடியில் திரளவும், பசுக்கூட்டம் கன்றுகளை அழைக்கும் குரலை உடையவையாய் கொட்டில்கள் நிறையுமாறு புகவும், ஊதுகின்ற கொம்பைப் போல் இசையை உடைய வளைந்த வாயையுடைய அன்றில் பறவை உயர்ந்தக் கரிய பனை மரத்தின் உள் மடலில் இருந்து தன் துணையை அழைக்கவும், பாம்பு மணியைக் கக்கவும், பல இடங்களில் இடையர்கள் ஆம்பல் என்னும் பண்ணினை இனிய குழலில் ஊதவும், ஆம்பல் மலர்களின் அழகிய இதழ்கள் கூம்பவும், செல்வமுடைய இல்லங்களில் உள்ள அழகிய வளையல்களை அணிந்த பெண்கள் விளக்கை ஏற்றவும், அந்தணர்கள் அந்திக் கடனை ஆற்றவும், காட்டில் வாழ்பவர்கள் வானத்தைத் தீண்டும் பரண் மேல் தீக்கடையும் கோலால் நெருப்பைப் பிறப்பித்து எரிக்கவும், முகில்கள் பெரிய மலையிடத்தே சூழ்ந்து கருமை அடையவும், கானத்தில் கல்லென்று ஒலி எழும்பவும், பறவைகள் ஆரவாரிக்கவும், சினமுடைய மன்னன் போருக்குச் செல்வதைப் போல விரைதலையுடைய மாலைப் பொழுது நெருங்கி வருதலைக் கண்டு,

மன்றலில் மணப்பேன் என்று கூறிப் பிரிதல்

“நேர் இறை முன் கை பற்றி, நுமர் தர,

நாடு அறி நன் மணம் அயர்கம் சில் நாள்,

கலங்கல் ஓம்புமின், இலங்கு இழையீர்!” என

ஈர நல் மொழி தீரக் கூறி,

துணை புணர் ஏற்றின் எம்மொடு வந்து, 235

துஞ்சா முழவின் மூதூர் வாயில்

உண் துறை நிறுத்துப் பெயர்ந்தனன்” (231-237)

பொருளுரை: “நுண்ணிய மூட்டுவாய் உடைய முன்கையைப் பற்றி, உன்னை உன் உறவினர் எனக்குத் தர, நாடறியும் நல்ல மணத்தினை நான் நடத்துவேன் இன்னும் சில நாட்களில்! கலங்குதலைப் பாதுகாப்பீர்களாக, விளங்குகின்ற அணிகலன்களை அணிந்தவர்களே!” என்று நல்ல சொற்களைத் தலைவியின் துன்பம் தீருமாறுக் கூறி, பசுவைப் புணர்ந்த ஏறு போல், எங்களுடன் வந்து, முழவின் ஓசை நிற்காத பழைய நம்மூரின் வாயிலில் பலரும் நீரை உண்ணும் துறையில் எங்களை நிறுத்திவிட்டுச் சென்றான்.


தொடர்ந்தது தோன்றலின் உறவு!

“—————- ————– அதற்கொண்டு,

அன்றை அன்ன விருப்பொடு, என்றும்

இரவரல் மாலையனே, வருதோறும்

காவலர் கடுகினும், கத நாய் குரைப்பினும், 240

நீ துயில் எழினும், நிலவு வெளிப்படினும்,

வேய் புரை மென் தோள் இன்துயில்

பெறாஅன், பெயரினும், முனியல் உறாஅன்,

இளமையின் இகந்தன்றும் இலனே, வளமையின்

தன் நிலை தீர்ந்தன்றும் இலனே” (237-245)

பொருளுரை: அப் புணர்ச்சி தொடங்கி, முதல் நாளில் கொண்ட விருப்பத்துடன் என்றும் இரவில் வரும் தன்மையுடையவன் அவன். அவ்வாறு அவன் வரும்பொழுதெல்லாம், காவலர் விரைந்துக் காவல் காப்பினும், சினம் மிகுந்த நாய்கள் குரைத்தாலும், தூக்கத்திலிருந்து நீ விழித்தாலும், நிலா ஒளியைப் பரப்பினும், தலைவியைக் காணாது அவளது மூங்கில் போன்ற மென்மையான தோளில் இனிய துயிலைப் அவன் பெறாவிட்டாலும், குறி இல்லாததை தலைவன் செய்தக் குறியாகக் கருதிச் சென்று மீண்டு மனையில் புகுந்தாலும் வெறுத்தலைச் செய்யான். அவன் இளமையைக் கடந்தவன் இல்லை. தன் செல்வத்தின் செருக்கால், நல்ல குடியில் பிறந்த தனக்குரிய நல்ல செயல்களிலிருந்து விலகியவனும் இல்லை. மாலை (239) – தன்மை. மாலை இயல்பே. (தொல்காப்பியம், உரியியல் 17)


தலைவியின் துயரம்

“———- ———- கொன் ஊர்

மாய வரவின் இயல்பு நினைஇத் தேற்றி,

நீர் எறி மலரின் சாஅய், இதழ் சோரா,

ஈரிய கலுழுமிவள் பெரு மதர் மழைக் கண்

ஆகத்து அரிப் பனி உறைப்ப, நாளும்

வலைப் படு மஞ்ஞையின் நலம் செலச் சாஅய், 250

நினைத்தொறும் கலுழுமால் இவளே. ———-“ (245-251)

பொருளுரை: அச்சம் தரும் ஊரின்கண் இரவு குறியில் கூடுவதற்கு அவன் வரும் நிலையற்ற நிலையை ஒழுக்கம் அன்று என்று எண்ணி திருமணத்தை விரும்பி, மழைத் துளிகளால் தாக்கப்படும் மலரைப் போல், தன்னுடைய அழகு அழிந்து, இமை சோர்ந்து, கண்களில் ஈரத்தை உடையவளாய், கலங்குகின்றாள் இவள். இவளுடைய பெரிய, அழகிய, குளிர்ந்த கண்களிருந்து தொடர்ந்து கண்ணீர் மார்பில் சொட்ட, நாள்தோறும் வலையில் அகப்பட்ட மயிலைப் போன்று, நலம் தொலைய, மெலிந்து, அவனை நினைக்கும்பொழுதெல்லாம் இவள் அழுகின்றாள். குறிப்பு: சோரா – சோர்ந்து என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.


அவன் வரும் வழி இடர்கள் வாட்டியது இவளை!

“———— —————— —————– கங்குல்

அளைச்செறி உழுவையும், ஆளியும், உளியமும்,

புழல் கோட்டு ஆமான் புகல்வியும், களிறும்,

வலியின் தப்பும் வன்கண் வெஞ்சினத்து

உருமும், சூரும், இரை தேர் அரவமும், 255

ஒடுங்கு இருங்குட்டத்து அருஞ்சுழி வழங்கும்

கொடும் தாள் முதலையும் இடங்கரும் கராமும்,

நூழிலும், இழுக்கும் ஊழ் அடி முட்டமும்,

பழுவும், பாந்தளும், உளப்படப் பிறவும்,

வழுவின் வழாஅ விழுமம், அவர் 260

குழுமலை விடர் அகம் உடையவால் எனவே” (251-261)

பொருளுரை: இரவில் குகையில் உறையும் புலிகளும், ஆளியும், கரடியும், உட்துளை உடைய கொம்பையுடைய காட்டு ஆவினத்தின் காளைகளும், களிற்று யானைகளும், வலிமையால் கெடுக்கும் கொடூரமான சினத்துடன் கூடிய இடியும், வருத்தும் கடவுள்களும், இரை தேடும் பாம்புகளும், ஒடுக்கமான கருமையான குளங்களில், கடினமான சுழிகள் இருக்குமிடத்தில் இருக்கும் வளைந்த கால்களையுடைய முதலையும் இடங்கரும் கராமும் (இடங்கர் கராம் ஆகிய இரண்டும் முதலை வகையைச் சார்ந்தவை ), ஆறலைக் கள்வர்கள் கொன்று குவிக்கும் இடங்களும், வழுக்கும் இடங்களும், முறையான பாதையாகத் தோன்றி செல்லச் செல்ல மறைந்து விடும் பாதைகளும் (ஊழ் அடி முட்டமும் ), பேய்களும், மலைப் பாம்புகளும், உட்பட பிறவும், தப்ப முடியாத தொல்லையைத் தருவன ஆகியவை அவருடைய தொகுதியாக உள்ள மலையின் பிளவுகளில் இருப்பதால்."

என்று தோழி, தலைவிக்காக அறத்தொடு நின்றாள்.



குறிஞ்சிப்பாட்டு நிறைவுற்றது.