திருமுருகாற்றுப்படை



பத்துப்பாட்டு



திருமுருகாற்றுப்படை


பத்துப்பாட்டில் முதலாவது நூலாக அமைகிறது. "புலவராற்றுப்படை", என்றும் "முருகு" என்றும் இந்நூல் அழைக்கப்படும். 317 அடிகளில் ஆசிரியப்பாவினால் அமைந்துள்ளது. இயற்றியவர் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார். இவரது இயற்பெயர் கீரன். சிறப்புக் கருதி 'ந' என்னும் முன்னொட்டு இணைத்து நக்கீரன் எனப்பட்டார். பத்துப்பாட்டில் நெடுநல்வாடையும் இயற்றியவர் இவரே ஆவார்.

பிற நூல்கள் ஆற்றுப்படுத்துபவர்களைச் சார்ந்து நூலின் தலைப்பாகக் கொண்டிருக்க, இந்நூலோ அருள் தருபவரின் பெயரால் அமைந்திருக்கிறது. மேலும், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளைப் போற்றிப் பாடும் விதமாக ஆறு பகுதிகளாக அமைத்திருக்கிறார், நக்கீரர்.


1. திருப்பரங்குன்றம்

திருமுருகப் பெருமானின் பெருமை


" உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு

பலர்புகழ் ஞாயிறு கடல்கண் டாஅங்கு

ஓஅற இமைக்கும் சேண்விளங்கு அவிர்ஒளி ( 1 – 3 )

விளக்கம் : "உலகத்தில் வாழும் உயிர்கள் அனைத்தும் மகிழுமாறு உதித்தெழுந்து மேரு மலையை வலம் வருவதும், பலராலும் புகழப்படுவதுமான சூரியன் கிழக்குக்கடலில் தோன்றுவதைப்போன்று, தம் கண்களின் பார்வையை வேறு எந்தப் பொருள் மீதும் செலுத்தாமல் கண் இதழ்களைக் குவித்து மூடியவாறு இறையருளில் மூழ்கியுள்ள பக்தர்களின் உள்ளத்தில் விளங்குவதும், தம் புறக்கண்களால் நோக்கும் பக்தர்களுக்குத் தொலைவில் நின்று விளங்குவதுமான இயற்கைப் பேரொளி வடிவினன் திருமுருகப்பெருமான்."



" உறுநர்த் தாங்கிய மதன் உடை நோன்தாள்

செறுநர்த் தேய்த்த செல் உறழ் தடக்கை

மறு இல் கற்பின் வாள்நுதல் கணவன்" ( 4 - 6 )

விளக்கம் : "தம்மைச் சார்ந்த அடியார்களைத் தாங்கிக் காத்தருளும் அழகும் வலிமையும் பொருந்திய திருவடிகளையும், பகைவர்களை அழிக்கின்ற, இடியை ஒத்த, பெருமை சார்ந்த திருக்கரங்களையும் உடைய திருமுருகப் பெருமான், குற்றமற்ற கற்பினையும் ஒளி பொருந்திய நெற்றியினையும் உடைய தெய்வயானையின் கணவர் ஆவார்."



"கார்கோள் முகந்த கமம் சூல் மாமழை

வாள்போழ் விசும்பில் வள்உறை சிதறி

தலைப்பெயல் தலைஇய தண்நறுங் கானத்து

இருள்படப் பொதுளிய பராரை மராஅத்து

உருள்பூந் தண்தார் புரளும் மார்பினன்" ( 7 - 11 )

விளக்கம் : "கடல்நீரை முகந்த காரணத்தால் நிறைவான கருவுற்ற 'கார்' எனப்படும் கரியநிற மேகமானது, ஞாயிறும் திங்களும் இருளைப் போக்குவதால் ஏற்படும் ஒளி பொருந்திய ஆகாயத்திலிருந்து மழைத் துளிகளைப் பொழியவும், 'கார்காலம்' எனப்படும் மழைப் பருவத்தின் தொடக்கத்தில் [மலர் மிகுதியால்] நறுமணமும் பொருந்திய காடுகளில் பெய்யும் அந்த 'முதல் மழை'யின் பயனாக இருள் போன்று அடர்த்தியாகத் தழைத்த, பருமனான அடிப்பாகத்தையுடைய செங்கடம்பு மரங்களில் மலர்ந்த, தேர்ச் சக்கரத்தைப் போன்ற வட்ட வடிவுடைய குளிர்ச்சி பொருந்திய சிவப்பு நிற மலர்களால் தொடுக்கப்பட்ட மாலை புரளுகின்ற மார்பினை உடையவன் திருமுருகப்பெருமான்."



" மால்வரை நிவந்த சேண்உயர் வெற்பில்

கிண்கிணி கவைஅய ஒண்செஞ் சீறடி

கணைக்கால் வாங்கிய நுசுப்பின் பணைத்தோள்

கோபத்து அன்ன தோயாப் பூந்துகில்

பல்காசு நிரைத்த சில்காழ் அல்குல்

கைபுனைந்து இயற்றாக் கவின்பெறு வனப்பின்

நாவலொடு பெயரிய பொலம்புனை அவிர்இழை

சேண்இகந்து விளங்கும் செயிர்தீர் மேனி" ( 12 - 19 )

விளக்கம் : "பெரிய மூங்கில் வளர்ந்துள்ள மிக உயரமான மலையில், 'கிண்-கிண்' என்று ஒலி எழுப்பும் சதங்கைகளைக் கணுக்காலில் அணிகலனாக அணிந்தவர்களாகவும், செம்மையான சிவந்த சிறு பாதங்களையும், உறுதியான திரண்ட கால்களையும், நுட்பமாக வளைந்துள்ள இடையினையும், மூங்கிலையொத்த தோள்களை உடையவர்களாகவும், செயற்கையான சிவப்பு நிறக் குழம்பில் தோய்க்கப்படவில்லையாயினும் 'இந்திர-கோபம்' எனப்படும் ஒருவகை சிவப்பு நிறப் பூச்சியின் நிறத்தை ஒத்த செந்நிறப் பூக்கள் போன்ற வடிவங்களையுடைய ஆடைகளை அணிந்தவர்களாகவும், பல்வேறு வகை மணிகளை ஏழு வடங்களாகக் கோர்க்கப்பட்ட 'மேகலை' என்னும் அணிகலனை அணிந்த இடையினையும், இயற்கை அழகினையும் உடையவர்களாகவும், 'சாம்பூநதம்' அல்லது 'நாவல்' எனப்படும் ஒருவகை உயர்தரப் பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்தவர்களாகவும், நெடுந் தூரத்திலிருந்து பார்க்கும்போதும் ஒளி பொருந்திய குற்றமற்ற மேனியழகுடன் தோற்றம் அளிப்பவர்களாகவும்"


" துணையோர் ஆய்ந்த இணைஈர் ஓதிச்

செங்கால் வெட்சிச் சீறிதழ் இடைஇடுபு

பைந்தாள் குவளைத் தூஇதழ் கிள்ளி

தெய்வ உத்தியொடு வலம்புரி வயின்வைத்து

திலகம் தைஇய தேம்கமழ் திருநுதல்

மகரப் பகுவாய் தாழமண் ணுறுத்து

துவர் முடித்த துகள்அறும் உச்சிப்

பெருந்தண் சண்பகம் செரீஇ கருந்தகட்டு

உளைப்பூ மருதின் ஒள்இணர் அட்டி

கிளைக்கவின்று எழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்பு

இணைப்புறு பிணையல் வளைஇ" ( 20 - 30 )

விளக்கம் : " 'நல்ல நெய்ப்புடைய கூந்தல்' என்று தோழியர் புகழ்ந்துரைத்த கூந்தலில் சிவந்த காம்பினை உடைய சிறிய வெட்சிப் பூக்களை நடுவே இடு பூக்களாக இட்டு, பசுமையான குவளை மலர்களின் இதழ்களையும் கிள்ளி அந்தக் கூந்தலில் இட்டு, 'சீதேவி', 'வலம்புரி' எனப்படும் தலைக் கோலங்களை வைப்பதற்குரிய இடத்தில் வைத்து, திலகமிட்ட நறுமணம் பொருந்திய அழகிய நெற்றியில் மகர மீனின் திறந்த வாயினைப் போன்ற வடிவில் அமைந்த தலைக் கோலத்தையும் வைத்து, முற்றமுடித்த குற்றமற்ற கொண்டையில் பெரிய குளிர்ந்த சண்பகப் பூவையும் செருகி, கரிய புற இதழையும் உள்ளே துளையையும் உடைய மருதின் ஒள்ளிய பூங்கொத்துக்களை அதன் மீது இட்டு, கிளையிலிருந்து தோன்றி நீரின் கீழ் அழகாய் விளங்கும் சிவந்த அரும்புகளால் கட்டப்பட்ட மாலையை அந்தக் கொண்டையில் வளைய வைத்து "


"துணைத்தக

வண்காது நிறைந்த பிண்டி ஒண்தளிர்

நுண்பூண் ஆகம் திளைப்பத் திண்காழ்

நறுங்குறடு உரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை

தேம்கமழ் மருது இணர்கடுப்பக் கோங்கின்

குவிமுகிழ் இளமுலைக் கொட்டி விரிமலர்

வேங்கை நுண்தாது அப்பிக் காண்வர

வெள்ளில் குறுமுறி கிள்ளுபு தெரியா

கோழி ஓங்கிய வென்றுஅடு விறல்கொடி

வாழிய பெரிது என்று ஏத்திப் பலருடன்

சீர்திகழ் சிலம்பு அகம் சிலம்பப் பாடி

சூரர மகளிர் ஆடும் சோலை" ( 31 - 41 )

விளக்கம் : "ஒன்றிற்கொன்று இணையான வளம் பொருந்திய இரு காதுகளின் பின்புறத்தில் இட்டுச்செருகி தொங்கவிட்டிருந்த அசோக மரத்தின் ஒளியுடைய தளிர்கள் நுட்பமான பூணினை அணிந்த மார்பின் மீது அசைய, திண்மையான வயிரத்தை உடைய சந்தனக் கட்டையை தேய்த்துப்பெற்ற நறுமணம் பொருந்திய சந்தனக் குழம்பினை, மருதமரத்தின் மஞ்சள் நிறப் பூவினை அப்பியது போன்று, கோங்கினது அரும்பினையொத்த இளமுலையில் அப்பி, அச்சந்தனக் குழம்பின் ஈரம் புலர்வதற்கு முன்பே விரிந்த வேங்கை மலரின் நுண்ணிய மகரந்தத் தாதினையும் அப்பி, அதன்மேல் விளாமரத்தின் சிறிய தளிர்களைக் கிள்ளித்தெறித்த கோலமுடைய மகளிர், 'கோழியின் உருவம் வரையப்பட்ட வெற்றிக் கொடி நீண்ட காலம் வாழ்வதாக' என்று வாழ்த்தி, மலைகள்தோறும் எதிர் ஒலி உண்டாகும்படி 'சூரர மகளிர்' எனப்படும் மகளிர் பலரும் ஒருங்கே கூடிப்பாடி ஆடுகின்ற சோலை"


" மந்தியும் அறியா மரன்பயில் அடுக்கத்து

சுரும்பும் மூசாச் சுடர்ப்பூங் காந்தள்

பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்" ( 42 - 44 )

விளக்கம் : "மரம் ஏறுவதில் வல்ல குரங்குகளும் ஏறுவதற்கு அறியாத வகையில் மிக உயரமாக வளர்ந்து நிற்கும் மரங்களையுடைய மலைப் பக்கத்தில் வண்டுகளும் மொய்க்க இயலாத அதிக உயரத்தில் மலர்ந்த, தீயைப் போன்ற நிறமுடைய செங்காந்தள் மலர்களால் ஆகிய குளிர்ச்சி பொருந்திய பெரிய மாலையைத் தலையில் சூடும் கண்ணியாக அணிந்த திருமுடியை உடையவன் திருமுருகப்பெருமான்"


" பார்முதிர் பனிக்கடல் கலங்க உள்புக்கு

சூர்முதல் தடிந்த சுடர்இலை நெடுவேல்" ( 45 - 46 )

விளக்கம் : "பாறைகளை உடைய, முற்றும் பனியாக உறைந்திருந்த கடலின் உள்ளே புகுந்து, அக்கடலின் உள்ளே மாமரமாய் ஒளிந்து நின்ற] அசுரர்களின் தலைவனாகிய சூரபன்மனைக் கொன்ற, இலையைப் போன்ற ஒளி பொருந்திய தலைப் பாகத்தை உடைய திருமுருகப்பெருமானின் நீண்ட வேல்"



" உலறிய கதுப்பின் பிறழ்பல் பேழ்வாய்

சுழல்விழிப் பசுங்கண் சூர்த்த நோக்கின்

கழல்கண் கூகையொடு கடும்பாம்பு தூங்கப்

பெருமுலை அலைக்கும் காதின் பிணர்மோட்டு

உருகெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள்

குருதிஆடிய கூர்உகிர்க் கொடு விரல்

கண்தொட்டு உண்ட கழிமுடைக் கருந்தலை

ஒண்தொடித் தடக்கையின் ஏந்தி வெருவர

வென்று அடு விறல்களம் பாடித் தோள்பெயரா

நிணம்தின் வாயள் துணங்கை தூங்க " ( 47 - 56 )

விளக்கம் : "உலர்ந்த பரட்டைத் தலைமுடியினையும் வரிசையற்ற பற்களையும் பிளந்த பெரிய வாயினையும், பிறரை அச்சுறுத்தும் வகையில் சுழலும் பச்சை நிறக் கண்களையும் மார்பின் மீது வீழ்ந்து வருத்துகின்ற தொங்கும் பாம்பினைக் கயிறாகவும் பெரிய ஆந்தையைக் குண்டலமாகவும் கொண்ட காதணிகளை அணிந்த காதுகளையும், சொரசொரப்பான வயிற்றினையும், காண்பவர்கள் அஞ்சும்படியான நடையையும் உடைய பேய்மகள், போர்க்களத்தில் வீழ்ந்து மாண்ட அசுரரின் தலையைக் கிள்ளி எடுத்து அதன் கண்ணைத் தோண்டித் தின்ற பின் நாற்றமுடைய அத்தலையைத் தன் பெரிய கைகளில் ஏந்தியவாறு பிறருக்கு அச்சம் விளைவிக்கும் வகையில் நடந்து சென்று, திருமுருகப்பெருமான் போர்க்களத்தில் அசுரரை வீழ்த்தி அடைந்த வெற்றியைப் புகழ்ந்து பாடி, தன் தோளை அசைத்தவாறு அசுரர்களின் நிணத்தைத் தின்ற வாயுடன் துணங்கைக் கூத்து ஆட"


" இருபேர் உருவின் ஒருபேர் யாக்கை

அறுவேறு வகையின் அஞ்சுவர மண்டி

அவுணர் நல்வலம் அடங்கக் கவிழ்இணர்

மாமுதல் தடிந்த மறுஇல் கொற்றத்து

எய்யா நல்இசை செவ்வேல் சேஎய்" ( 57 - 61 )

விளக்கம் : "'விலங்காகிய குதிரையின் தலையோடு கூடிய பெரியதொரு மனித உடல்' போன்ற உருவம் எடுத்து கடலிற் புகுந்து கீழ் நோக்கி மலர்ந்துள்ள மலர்க் கொத்துக்களையுடைய ஒரு மாமரம் போல் நின்ற அசுரர்களின் தலைவனாகிய சூரபன்மனை, அறுவகை வடிவங்களெடுத்து அச்சுறுத்தி அசுரர்களின் ஆற்றலை அடக்கி மாமரமாய் நின்ற சூரபன்மனை இரண்டாகப் பிளந்து கொன்ற குற்றமில்லாத வெற்றியையும் நல்ல புகழையும் சிவந்த வேலினையும் திருமேனியினையும் உடைய திருமுருகப்பெருமான் ..."


" சேவடி படரும் செம்மல் உள்ளமொடு

நலம்புரி கொள்கைப் புலம்பிரிந்து உறையும்

செலவுநீ நயந்தனை ஆயின் பலஉடன்

நன்னர் நெஞ்சத்து இன்னசை வாய்ப்ப

இன்னே பெறுதி நீமுன்னிய வினையே " ( 62 - 66 )

விளக்கம் : "திருமுருகப்பெருமானின் சிவந்த திருவடிகளை அடைவதற்குரிய செம்மையான உள்ளத்துடனும் பிறருக்கு நன்மைகளையே செய்யும் கொள்கையுடனும் [மெய்ப் பொருளை உணர்ந்து] ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்ல விரும்புவாயானால் நீ கருதிய வினையின் பயனை இப்போதே பெறுவாய் "


" செருப் புகன்றுஎடுத்த சேண்உயர் நெடுங்கொடி

வரிப்புனை பந்தொடு பாவை தூங்க

பொருநர்த் தேய்த்த போர் அருவாயில்

திருவீற்றிருந்த தீதுதீர் நியமத்து

மாடம் மலிமறுகின் கூடல் குடவயின்

இருஞ்சேற்று அகல்வயல்விரிந்து வாய்அவிழ்ந்த

முள்தாள் தாமரைத் துஞ்சி வைகறைக்

கள்கமழ் நெய்தல் ஊதி எல்படக்

கண்போல் மலர்ந்த காமரு சுனைமலர்

அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும்

குன்று அமர்ந்து உறைதலும் உரியன், அதான்று " ( 67 - 77 )

விளக்கம் : "மதுரை மாநகரின் நுழை வாயிலில், போரை விரும்பி மிக உயரமான நெடிய கொடிகளின் அருகில் வரிந்து கட்டப்பட்ட பந்தும் பாவையும் அவற்றை அறுத்துப் போரிட முன்வருவோர் யாரும் இல்லாமையால் தொங்கிய வண்ணம் உள்ளன; அம் மாநகரின் கடை வீதிகளில் திருமகளே வீற்றிருப்பது போல செல்வம் கொழிக்கின்றது; மாளிகைகள் அமைந்திருக்கும் வீதிகளும் அங்கு உள்ளன. அந் நகரின் மேற்குத் திசையில் அமைந்திருக்கும் அகன்ற நெல் வயல்களில் முட்கள் பொருந்திய தண்டுகளை உடைய தாமரை மலர்கள் மீது வண்டுகள் இரவில் உறங்கிய பின்னர் வைகறையில் தேன் மணம் கமழும் நெய்தல் மலர் மீது மொய்த்து ஊதி, கதிரவன் தோன்றிய பின்னர் மலையின் சுனைகளில் கண்களைப் போல் பூத்துள்ள விருப்பம் தரும் மலர்களின் அருகே சென்று ரீங்காரமிடும் அழகிய இடமாகிய திருப்பரங்குன்றத்தின் மீது திருமுருகப்பெருமான் மனம் விரும்பி அமர்ந்துள்ளார், அதுமட்டுமன்று"


2. திருச்சீர் அலைவாய்

முருகப் பெருமான் யானையின் மேல் ஏறி வருதல்


" வைந்நுதி பொருத வடுஆழ் வரிநுதல்

வாடா மாலை ஓடையொடு துயல்வர

படுமணி இரட்டும் மருங்கின் கடுநடை

கூற்றத் தன்ன மாற்றஅரு மொய்ம்பின்

கால் கிளர்ந்தன்ன வேழம் மேல்கொண்டு


( ஆறுமுகங்களின் இயல்புகள் )


ஐவேறு உருவின் செய்வினை முற்றிய

முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி

மின்உறழ் இமைப்பின் சென்னிப் பொற்ப

நகைதாழ்பு துயல்வரூஉம் வகைஅமை பொலங்குழை

சேண்விளங்கு இயற்கை வாள்மதி கவைஇ

அகலா மீனின் அவிர்வன இமைப்ப

தாஇல் கொள்கைத் தம்தொழில் முடிமார்

மனன்நேர்பு எழுதரு வாள் நிறமுகனே" ( 78 - 90 )

விளக்கம் : "கூர்மையான முனையை உடைய அங்குசம் குத்துவதால் மத்தகத்தில் ஏற்பட்ட வடுவினையும், புகர் எனப்படும் செம் புள்ளிகளை உடைய நெற்றியையும், அசையும் நெற்றிப் பட்டத்தையும், [பொன்னாலான] வாடாத மாலையினையும், இரு பக்கங்களிலும் தாழ்ந்து தொங்குகின்ற மணியானது மாறி மாறி ஒலிக்கின்ற ஒலியினையும், கடுமையான வேகத்துடன் நடக்கும் நடையினையும், யமனைப் போன்று தடுப்பதற்கு அரிதான வலிமையினையும் உடைய, கடுமையாக வீசும் காற்றைப் போன்று விரைவாகச் செல்லும் ஆண் யானை மீது திருமுருகப்பெருமான் வீற்றிருக்கின்றார்; திருமுருகப்பெருமானின் திருமுடியானது, 'தாமம், முகுடம், பதுமம், கிம்புரி, கோடகம்' எனப்படும் ஐவ்வேறு வகையில் அலங்கரிக்கப்பட்டு, மின்னலையொத்த ஒன்றுக்கொன்று நிறத்தால் மாறுபடும் மணிகளாலான கிரீடத்துடன் காட்சியளிக்கின்றது; திருமுருகப்பெருமானின் ஒளி பொருந்திய பொன்னால் ஆகிய 'மகரக் குழை' வடிவில் அமைந்த காதணிகள் தொலை தூரத்தில் உள்ள நிலமெங்கும் ஒளி வீசும் சந்திரனைச் சூழ்ந்துள்ள விண் மீன்களைப் போல ஒளி வீசி விளங்குகின்றன; குற்றம் இல்லாத நோன்போடு தாம் மேற்கொண்ட செயல்களை நிறைவு செய்யும் அடியார்களின் மனத்தில் பொருந்தித் தோன்றும் ஒளிமிக்க நிறமுடைய திருமுருகப்பெருமானின் ஆறு திருமுகங்களில்"



" மாஇருள் ஞாலம் மறுஇன்றி விளங்க

பல்கதிர் விரிந்தன்று ஒருமுகம்; ஒருமுகம்

ஆர்வலர் ஏத்த அமர்ந்து இனிது ஒழுகி

காதலின் உவந்து வரம் கொடுத்தன்றே; ஒருமுகம்

மந்திர விதியின் மரபுளி வழாஅ

அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே; ஒருமுகம்

எஞ்சிய பொருள்களை ஏமுற நாடித்

திங்கள்போலத் திசை விளக்கும்மே; ஒருமுகம்

செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கி

கறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட்டன்றே; ஒருமுகம்

குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின்

மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்றே

ஆங்கு அம்மூஇருமுகனும் முறைநவின்று ஒழுகலின்" ( 91 - 103 )

விளக்கம் : "உலகத்தைச் சூழ்ந்துள்ள மிகுதியான இருள் நீங்கி, அவ்வுலகம் குற்றம் இல்லாது விளங்கும் பொருட்டு பல கதிர்களை உடைய கதிரவன் தோன்றுவதற்குக் காரணமாய் விளங்குவது திருமுருகப்பெருமானின் ஒரு திருமுகம்; அடியார்கள் வேண்டிய வரங்களை அவர்களுக்கு அன்புடன் மகிழ்ந்து வழங்குவது மற்றொரு திருமுகம்; அந்தணர்கள் தம் மரபு வழியில் மந்திரங்களை ஒலித்து இயற்றுகின்ற வேள்விகளை ஏற்று மகிழ்வது மற்றொரு திருமுகம்; எந்த நூல்களும் ஆராய்ந்து உணர்த்த இயலாத மெய்ப் பொருளை, அனைத்துத் திசைகளையும் தன் ஒளியால் விளக்கும் திங்களைப் போல, முனிவர்களுக்கு உணர்த்தி விளக்குவது மற்றொரு திருமுகம்; தீய சக்திகளாகிய அசுரர்களைப் போரில் கொன்று அழித்து கள வேள்வியை இயற்றச் செய்வது மற்றொரு திருமுகம்; பூங்கொடி போன்ற இடையையும் இளமையையும் உடைய குறவர் மகள் வள்ளியுடன் மகிழ்ச்சி அடைவது மற்றொரு திருமுகம்; மேற்கூறியவாறு, திருமுருகப்பெருமானின் ஆறு திருமுகங்களும் தத்தம் தொழில்களை முறையாக நடத்துவதற்கு ஏற்ப".


( பன்னிரு கைகளின் தொழில்கள் )


" ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பின்

செம்பொறி வாங்கிய மொய்ம்பின் சுடர்விடுபு

வண்புகழ் நிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள்

விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது

ஒருகை; உக்கம் சேர்த்தியது ஒருகை;

நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை அசைஇயதுஒருகை;

அங்குசம் கடாவ ஒருகை; இருகை

ஐஇரு வட்டமொடு எஃகுவலம் திரிப்ப;

ஒருகை மார்பொடு விளங்க;

ஒருகை தாரொடு பொலிய; ஒருகை

கீழ்வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப; ஒருகை

பாடுஇன் படுமணி இரட்ட; ஒருகை

நீல்நிற விசும்பின் மலிதுளி பொழிய; ஒருகை

வான்அர மகளிர்க்கு வதுவை சூட்ட

ஆங்கு அப்பன்னிருகையும் பாற்பட இயற்றி" ( 104 - 118 )

விளக்கம் : "அழகும், பெருமையும், ஒளியும், வலிமையும் பொருந்திய திருமுருகப்பெருமானின் மார்பில் அழகிய சிவந்த [மூன்று] வரிகள் உள்ளன; ஒளி பொருந்திய வேலினை எறிந்து பகைவர்களின் மார்பைப் பிளக்கின்ற ஆற்றல் உடைய நிமிர்ந்த தோள்களின் கீழ் உள்ள திருமுருகப்பெருமானின் திருக்கைகளில் ஒன்று, முக்திப் பேற்றினைப்பெற்று வானுலகம் செல்லும் முனிவர்களைப் பாதுகாத்து ஏந்திய வண்ணம் உள்ளது; மற்றொரு திருக்கை, இடுப்பினைச் சார்ந்து விளங்குகின்றது; மற்றொரு திருக்கை, அழகிய செந்நிற ஆடையால் அலங்கரிக்கப்பெற்ற தொடையைச் சார்ந்து உள்ளது; மற்றொரு திருக்கை, யானையை அடக்குவதற்குரிய அங்குசத்தைச் செலுத்திய வண்ணம் உள்ளது; மற்றொரு திருக்கை, கேடயத்தைத் தாங்கிய வண்ணமும், மற்றொரு திருக்கை வேற்படையினை வலப் பக்கம் நோக்கி சுழற்றிய வண்ணமும் உள்ளது; மற்றொரு திருக்கை, அடியார்களுக்குத் தத்துவங்களை உணர்த்திய வண்ணம் 'மோன முத்திரை'யோடு மார்பின் மீது விளங்குகின்றது; மற்றொரு திருக்கை, மார்பில் புரளும் மாலையைச் சார்ந்துள்ளது; மற்றொரு திருக்கை, 'கள வேள்வி தொடங்குக' என்னும் சைகையைக் காட்டுகின்றது; மற்றொரு திருக்கை [கள வேள்வியின்போது] ஓதப்படும் பாடலுக்கு ஏற்ற வகையில் இனிய ஓசையை உண்டாக்கும் மணியானது மாறி மாறி ஒலிக்கச் செய்கின்றது; மற்றொரு திருக்கை, வானத்திலிருந்து மேகமானது மிக்க மழையைப் பொழியுமாறு செய்கின்றது; மற்றொரு திருக்கை, வானுலக மகளிர்க்கு திருமண மாலையைச் சூட்டுகின்றது; மேற்கூறியவாறு, திருமுருகப்பெருமானின் பன்னிரு திருக்கைகளும் தத்தம் பணியைச் செய்த வண்ணம் உள்ளன"


" அந்தரப்பல்லியம் கறங்கத் திண்காழ்

வயிர்எழுந்து இசைப்ப வால்வளை ஞரல

உரம் தலைக்கொண்ட உரும்இடி முரசமொடு

பல்பொறி மஞ்ஞை வெல்கொடி அகவ

விசும்பு ஆறுஆக விரைசெலல் முன்னி

உலகம் புகழ்ந்த ஒங்குஉயர் விழுச்சீர்

அலைவாய்ச் சேறலும் நிலைஇயபண்பே, அதான்று" ( 119 - 125 )

விளக்கம் : "'துந்துபி' போன்ற வானுலகத்தோரின் இசைக் கருவிகள் முழங்கவும், திண்ணிய வயிரம் வாய்ந்த ஊதுகொம்பு மிகுதியாக ஒலிக்கவும், வெண் சங்கு முழங்கவும், அச்சம் தரும் இடியைப் போன்ற ஓசையுடைய முரசுடன், பல பீலியையுடைய மயிலானது [திருமுருகப்பெருமானின் ஆணைப்படி] வெற்றிக் கொடியில் இருந்தவாறு கூவி ஒலிக்கவும், வானின் வழி விரைவான செலவினை மேற்கொண்டு உலக மக்கள் அனைவரும் போற்றும் உயர்ந்த புகழை உடைய திருச்சீரலைவாய் [திருச்செந்தூர்] என்னும் திருநகர் வந்து சேர்தலும் திருமுருகப்பெருமானின் நிலையான பண்பேயாகும்; அதுமட்டுமன்று"



3. திரு ஆவினன்குடி ( பழநி )

முனிவரது இயல்புகள்


" சீரை தைஇய உடுக்கையர் சீரொடு

வலம்புரி புரையும் வால்நரை முடியினர்

மாசுஅற இமைக்கும் உருவினர் மானின்

உரிவை தைஇய ஊன்கெடு மார்பின்

என்புஎழுந்து இயங்கும் யாக்கையர் நன்பகல்

பலஉடன் கழிந்த உண்டியர் இகலொடு

செற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும்

கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்குத்

தாம்வரம்பு ஆகிய தலைமையர் காமமொடு

கடும்சினம் கடிந்த காட்சியர் இடும்பை

யாவதும் அறியா இயல்பினர் மேவரத்

துனிஇல் காட்சி முனிவர் முன்புக" ( 126 – 137 )

விளக்கம் : "மரவுரியை ஆடையாக உடுத்தியவர்களாகவும், அழகுடன் [வடிவாலும் நிறத்தாலும்] வலம்புரிச் சங்கைப் போன்ற வெண்மையான நரை முடியை உடையவர்களாகவும் [எப்பொழுதும் நீராடுதலால்] தூய்மையாக விளங்கும் வடிவினை உடையவர்களாகவும், மானின் தோலைப் போர்வையாகப் போர்த்துக்கொண்டுள்ளவர்களாகவும் [உணவினை விலக்கிய நோன்பின் காரணமாக] தசை வற்றிய நிலையில் மார்பு எலும்புகள் வெளிப்படுவதைப் போன்ற தோற்றத்தை உடையவர்களாகவும், பகற்பொழுதிலும் உணவு உண்ணா நோன்பினைப் பல நாட்கள் கடைப்பிடிப்பவர்களாகவும், பகையினையும் நெடுங்காலம் தொடரும் சீற்றத்தினையும் அகற்றிய மனத்தினை உடையவர்களாகவும், பலவற்றைக் கற்றவரும் அறிந்திராத கல்வி அறிவினை உடையவர்களாகவும், கல்வியால் பெறும் அறிவிற்கே எல்லையாக விளங்கும் தலைமைத்துவம் உடையவர்களாகவும், ஆசையினையும் கொடிய சினத்தினையும் விலக்கிய அறிவுடையவர்களாகவும், ஒரு சிறிதும் துன்பம் அறியாதவர்களாகவும், யாரிடத்தும் வெறுப்பில்லாது பொருந்தி ஒழுகும் மெய் அறிவினை உடையவர்களாகவும் விளங்கிய முனிவர்கள் முன்னே சென்று திருக்கோவிலின் உள்ளே புகவும் ..."


( பாடுபவர் இயல்பு )


" புகை முகந்தன்ன மாசுஇல் தூஉடை

முகைவாய் அவிழ்ந்த தகைசூழ் ஆகத்து

செவிநேர்பு வைத்த செய்வுறு திவவின்

நல்யாழ் நவின்ற நயனுடை நெஞ்சின்

மென்மொழி மேவலர், இன்நரம்பு உளர

நோய்இன்று இயன்ற யாக்கையர் மாவின்

அவிர்தளிர் புரையும் மேனியர் அவிர்தொறும்

பொன்னுரை கடுக்கும் திதலையர் இன்நகைப்

பருமம் தாங்கிய பணிந்துஏந்து அல்குல்

மாசுஇல் மகளிரொடு மறுஇன்றி விளங்க." ( 138 – 147 )

விளக்கம் : "வெண்புகை, அல்லது பாலாவியை முகந்து ஆடையாக உடுத்தியதைப் போல தூய [மெல்லிய] ஆடையினை அணிந்தவர்களாகவும், மலர்ந்த அரும்புகளாலாகிய மாலையினை அணிந்த மார்பினை உடையவர்களாகவும், தம் செவிகளால் இசையை அளந்து நரம்புகளைக் கட்டிய வார்க்கட்டினை உடைய நல்ல யாழ் இசையில் பயிற்சி பெற்றிருந்தவர்களாகவும் நல்ல உள்ளத்தை உடையவர்களாகவும், எப்பொழுதும் இனிய சொல்லையே பேசுபவர்களாகவும் விளங்கிய இசை வாணர்கள், அல்லது பாணர்கள், இனிய யாழின் நரம்புகளை இயக்குவதற்காக, நோயற்ற உடலை உடையவர்களாகவும், மாமரத்தின் ஒளி பொருந்திய தளிர் போன்ற நிறமுடையவர்களாகவும், [உரை கல்லில் பொன்னை உரைக்கும்போது தோன்றும்] பொன் துகள் போன்ற தோற்றமுடைய அழகுத் தேமலை உடையவர்களாகவும், காண்பதற்கினிய ஒளி பொருந்திய பதினெட்டு வடங்களாலாகிய மேகலையை இடுப்பில் அணிகலனாக அணிந்தவர்களாகவும் விளங்கிய குற்றமற்ற [பாடினி, அல்லது இசை வாணிகளாகிய] மகளிருடன் [மேற்கூறிய இசை வாணர்கள்] குற்றமற்ற வகையில் வருகை புரிந்தனர்."


( திருமால், சிவன், இந்திரன் ஆகியோரின் இயல்புகள் )


"கடுவொடு ஒடுங்கிய தூம்புடை வால்எயிற்று

அழல்என உயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறல்

பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப்

புள்அணி நீள்கொடிச் செல்வனும் வெள் ஏறு

வலம்வயின் உயரிய பலர்புகழ் திணிதோள்

உமைஅமர்ந்து விளங்கும் இமையா முக்கண்

மூஎயில் முருக்கிய முரண்மிகு செல்வனும்

நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து நூறுபல்

வேள்வி முற்றிய வென்றுஅடு கொற்றத்து

ஈர்இரண்டு ஏந்திய மருப்பின் எழில்நடை

தாழ்பெருந் தடக்கை உயர்த்த யானை

எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும்" ( 148 – 159 )

விளக்கம் : "நஞ்சுடன் கூடிய துளையையும் வெண்மையான பற்களையும், நெருப்பு போல மூச்சுவிடும்போது காண்பவர்களுக்கு அச்சத்தை விளைவிக்கும் கடுமையான வலிமையினையும் உடைய பாம்புகள் மடியும்படி அவற்றை அடித்து வீழ்த்துவதும் பல வரிகளை உடைய வளைந்த சிறகுகளையுடையதுமான கருடன் எனப்படும் பறவை தோற்றமளிக்கும் கொடியையுடைய திருமாலும்; தம் ஊர்தியான வெண்ணிற காளை தோற்றமளிக்கும் கொடியினை வலப் பக்கத்தில் உயர்த்தியுள்ளவரும், பலரும் புகழ்ந்து போற்றும் திண்மையான தோள்களையுடையவரும், உமாதேவியாரைத் தம் இடப் பக்கத்தில் உடையவரும், இமைக்காத மூன்று கண்களையுடையவரும், முப்புரங்களை எரித்து அழித்தவருமான சிவபெருமானும்; ஆயிரம் கண்களை உடையவனும், நூற்றுக்கு மேற்பட்ட வேள்விகளைச் செய்து முடித்தலால் பகைவரை வென்று அவர்களைக் கொல்லும் வெற்றியை உடையவனும், முன்பக்கம் உயர்ந்த நான்கு கொம்புகளையும் அழகிய நடையினையும், நிலத்தைத் தொடுமாறு நீண்ட வளைந்த துதிக்கையினையும் உடையதும், புலவர்களால் புகழப்படுவதுமான ['ஐராவதம்' எனப்படும்] யானையின் பிடரியின் மீது அமர்ந்தவாறு இந்திரனும் திருக்கோவிலில் வந்து சேர ;



" நாற்பெருந் தெய்வத்து நல்நகர் நிலைஇய

உலகம் காக்கும் ஒன்றுபுரி கொள்கைப்

பலர்புகழ் மூவரும் தலைவர் ஆக

ஏமுறு ஞாலம் தன்னில் தோன்றி

தாமரைப் பயந்த தாஇல் ஊழி

நான்முக ஒருவற் சுட்டி காண்வர

பகலில் தோன்றும் இகல்இல் காட்சி

நால்வேறு இயற்கைப் பதினொரு மூவரொடு

ஒன்பதிற்று இரட்டி உயர்நிலை பெறீஇயர்

மீன்பூத்தன்ன தோன்றலர் மீன்சேர்பு

வளிகிளர்ந்தன்ன செலவினர் வளியிடைத்

தீஎழுந்தன்ன திறலினர் தீப்பட

உரும்இடித் தன்ன குரலினர் விழுமிய

உறுகுறை மருங்கில் தம்பெறு முறைகொண்மார்

அந்தரக் கொட்பினர் வந்து உடன்காண


( முருகப் பெருமான் மடந்தையோடு வீற்றிருத்தல் )


தாஇல் கொள்கை மடந்தையொடு சில்நால்

ஆவினன்குடி அசைதலும் உரியன், அதான்று" ( 160 – 176 )

விளக்கம் : "நான்கு பெருந் தெய்வங்களாகக் கருதப்படும் பிரமன், திருமால், சிவபெருமான், இந்திரன் ஆகியோரில், பிரமன் அல்லாத மற்ற மூவரும் உலகத்தை காத்தல் என்னும் ஒன்றையே தங்கள் கோட்பாடாகக் கடைப்பிடித்துவரவும், திருமாலின் கொப்பூழ்த் தாமரையில் தோன்றிய பிரமனுக்காக, திருமுருகப்பெருமானின் திருவருளினை வேண்டி முப்பத்து முக்கோடித் தேவர்களும் பதினெட்டு கணங்களும் பகல் நேரத்தில் தோன்றும் ஞாயிறு போன்றவற்றின் ஒளியுடன் வரலாயினர்; அவர்கள் வானத்தின் விண் மீன்களை போன்ற தோற்றத்தினர்; காற்றினைப் போல் விரைவாகச் செல்லும் ஆற்றல் உடையவர்கள்; காற்றில் தீ எரிவதைப் போன்ற வலிமை உடையவர்கள்; வானத்தில் மின்னலுடன் இடி இடிக்கும் ஓசையை ஒத்த குரலை உடையவர்கள்; அவர்கள் [பிரமனைச் சிறையிலிருந்து விடுவிக்கவேண்டும் என்னும் வேண்டுகோளுடன்] வானத்தில் வட்டமாய் சுழன்று வந்து நிற்கின்றனர். குற்றமற்ற கொள்கையை உடைய தெய்வயானை-அம்மையாருடன் சில நாட்கள் திரு ஆவினன்குடியில் [பழநியில்] அமர்ந்து இருப்பவர் திருமுருகப்பெருமான்."


4 - திரு ஏரகம் ( சுவாமிமலை )

(இருபிறப்பாளரின் இயல்புகள் )


" இரு மூன்று எய்திய இயல்பினின் வழாஅது

இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி

அறு நான்கு இரட்டி இளைமைநல் யாண்டு

ஆறினில் கழிப்பிய அறன்நவில் கொள்கை

மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து

இருபிறப்பாளர் பொழுது அறிந்து நுவல


( அந்தணர் வழிபடும் முறை )


ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்

புலராக் காழகம் புலர் உடீஇ

உச்சிக்கூப்பிய கையினர் தற்புகழ்ந்து

ஆறுஎழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி

நாஇயல் மருங்கில் நவிலப் பாடி

விரைஉறு நறுமலர் ஏந்தி பெரிதுஉவந்து

ஏரகத்து உறைதலும் உரியன், அதான்று" ( 177 – 189 )

விளக்கம் : "['வேதம்' போன்ற நூல்களைக்] ஓதல் [கற்றல்], ஓதுவித்தல் [கற்பித்தல்], வேட்டல் [வேள்வி, அல்லது யாகம், செய்தல்], வேட்பித்தல் [ஏனையோரின் நன்மைக்காக வேள்வி செய்வித்தல்], ஏற்றல் [மற்றவர்களிடமிருந்து பொருளைத் தானமாகப் பெறுதல்], ஈதல் [மற்றவர்களுக்குப் பொருளைத் தானமாகக் கொடுத்து உதவுதல்] ஆகிய ஆறுவகைப் பணிகளையும் தவறாமல் நிறைவேற்றுபவர்களாகவும்; தாய்-தந்தையர் இருவரின் குடும்பமும் நல்ல குடும்பம் என உலகத்தாரால் மதிக்கப்பெற்ற பழம்பெரும் குடியில் தோன்றியவர்களாகவும்; தம் வாழ்நாளில் முதலாவது நாற்பத்தெட்டு ஆண்டுகள் அடங்கிய இளமைக் காலம் முழுவதும் 'பிரமச்சரியம்' எனப்படும் திருமணமாகாத வாழ்வியலை மேற்கொள்பவர்களாகவும்; அறம் பொருந்திய கோட்பாட்டினை உடையவர்களாகவும்; 'ஆகவனீயம், தக்கிணாக்கினியம், காருகபத்தியம்' எனப்படும் மூவகைத் தீயால் வேள்வி செய்து பெறும் செல்வத்தை உடையவர்களாகவும்; இவ்வுலகில் தம் தாயின் வயிற்றிலிருந்து இயற்கையாகப் பிறக்கும் பிறப்போடு, கல்வியறிவு, அறிவு முதிர்ச்சி ஆகியவற்றை எய்திய பிறகு 'மீண்டும் பிறத்தலால்' 'இரு பிறப்பாளர்' என அழைக்கப்படுபவர்களாகவும்; ஒவ்வொரு நாளுக்கும் உரிய நல்ல நேரத்தை கணித்து மற்றவர்களுக்குத் தெரிவிப்பவர்களாகவும்; [ஒவ்வொரு புரியிலும்] மூன்று நூல் இழைகளைத்கொண்ட புரிகள் மூன்றால் ஆகிய ஒன்பது நூலிழைகளைக் கொண்ட பூணூலை அணிபவர்களாகவும்; நீராடிய பின்னர் உலராத ஆடையையே அணிந்து ஈரமான அந்த ஆடை உலரும்படிச் செய்பவர்களாகவும்; தலை உச்சி மீது தங்கள் இரு கைகளையும் குவித்து இறைவனை வணங்குபவர்களாகவும்; 'சரவணபவ', அல்லது 'குமாராயநம' என்னும் ஆறெழுத்து மந்திரத்தைச் சொல்லி, தம் நாவினால் மென்மையாகவும் இனிமையாகவும் பாடி நறுமணமுடைய மலர்களைத் தூவி திருமுருகப்பெருமானை வழிபடுபவர்களாகவும் விளங்கும் அந்தணர்கள் வாழ்ந்துவரும் திரு ஏரகத்திலும் திருமுருகப்பெருமான் மனமகிழ்வோடு அமர்ந்திருக்கும் உரிமை உடையவன், அதுமட்டுமன்று"


5 - குன்றுதோறாடல்

( குரவைக்கூத்து )


" பைங்கொடி நறைக்காய் இடைஇடுபு வேலன்

அம்பொதிப் புட்டில் விரைஇ குளவியொடு

வெண்கூ தாளம் தொடுத்த கண்ணியன்

நறுஞ்சாந்து அணிந்த கேழ்கிளர் மார்பின்

கொடுந்தொழில் வல்வில் கொலைஇய கானவர்

நீடுஅமை விளைந்த தேக்கள் தேறல்

குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து

தொண்டகச் சிறுபறைக் குரவை அயர" ( 190 – 197 )

விளக்கம் : "பசுமையான கொடியால், நறுமணமுடைய சாதிக்காயினையும் அழகான புட்டில் போன்ற தக்கோலக்காயினையும் நடுவில் வைத்து, காட்டு மல்லிகை மலருடன் வெண் கூதாளம் என்னும் மலரினையும் சேர்த்துக் தொடுக்கப்பட்ட கண்ணியை தலைமுடி மீது அணிந்துள்ள வேலன், நறுமணம் பொருந்திய சந்தனம் பூசப்பெற்ற ளங்கும் மார்பினை உடையவன்; கொடிய வில்லால் விலங்குகளை வேட்டையாடிக் கொடுமையான கொலைத் தொழிலைச் செய்யும் வேடர்கள், நீண்ட மூங்கிற் குழாயில் முற்றி விளைந்த தேனாலான கள்ளின் தெளிவை மலையில் சிறு ஊரில் வாழும் தம் சுற்றத்தாருடன் உண்டு மகிழ்ந்து [அக் குறிஞ்சி நிலப் பகுதிக்குரிய] தொண்டகம் எனப்படும் சிறியதொரு பறையின் தாளத்துக்கு ஏற்பக் குரவைக் கூத்தாட."


" விரல்உளர்ப்பு அவிழ்ந்த வேறுபடு நறுங்கான்

குண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணி

இணைத்த கோதை அணைத்த கூந்தல்

முடித்த குல்லை இலையுடை நறும்பூ

செங்கால் மராஅத்த வால்இணர் இடைஇடுபு

சுரும்புஉணத் தொடுத்த பெருந்தண் மாத்தழை

திருந்துகாழ் அல்குல் திளைப்ப உடீஇ

மயில்கண் டன்ன மடநடை மகளிரொடு" ( 198 – 205 )

விளக்கம் : "விரல்களால் அரும்புகளைத் தொட்டு அலைத்து அலர்த்தப்பட்டமையால் பல்வேறு வகை நறுமணம் வீசுவதும், ஆழமான சுனையில் மலர்ந்த மலர்களால் தொடுக்கப்பட்டதும், வண்டுகள் மொய்ப்பதுமான மாலையினையும், தொடுக்கப்பட்ட ஏனைய மாலைகளையும் சேர்த்துக் கட்டிய கூந்தலையும் உடையவர்களாகவும், இலையைத் தலைமுடி மீது அணிந்த கஞ்சங்குல்லையையும் நறிய பூங்கொத்துகளையும் சிவந்த அடிப்பாகத்தை உடைய கடம்பு மரத்தின் மலர்க் கொத்துகளை இடையே இட்டுக் கட்டிய பெரிய குளிர்ந்த அழகிய தழையையும், வடங்களோடு கூடிய அணிகலன்கள் அணியப்பெற்ற இடுப்பில், ஆடையாக உடுத்தியவர்களாகவும், மயிலைப் போன்ற சாயலை உடையவர்களாகவும் விளங்கிய மகளிரொடு"


" செய்யன் சிவந்த ஆடையன் செவ்வரைச்

செயலைத் தண்தளிர் துயல்வரும் காதினன்

கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன்

குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்

தகரன் மஞ்ஞையன் புகர்இல் சேவல்அம்

கொடியன் நெடியன் தொடிஅணி தோளன்

நரம்பு ஆர்த்தன்ன இன்குரல் தொகுதியொடு

குறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயல்

மருங்கில் கட்டிய நிலன்நேர்பு துகிலினன்

முழவுஉறழ் தடக்கையின் இயல ஏந்தி

மென்தோள் பல்பிணை தழீஇ தலைத்தந்து

குன்றுதொறு ஆடலும்நின்ற தன்பண்பே, அதான்று" ( 206 – 217 )

விளக்கம் : "வேலினை உடைய வேலன், சிவந்த மேனியனாகக் காட்சியளிப்பவன்; சிவப்பு நிற ஆடையை அணிந்துள்ளவன்; சிவந்த அடிப்பாகத்தையுடைய அசோக மரத்தின் குளிர்ச்சி பொருந்திய தளிர்களை இரு காதுகளிலும் அணிந்துள்ளவன்; இடையில் கச்சை அணிந்துள்ளவன்; கால்களில் வீரக் கழல்களை அணிந்துள்ளவன்; சிவந்த வெட்சி மலர்களை தலை முடியில் கண்ணியாக அணிந்துள்ளவன்; புல்லாங்குழலை உடையவன்; ஊதுகொம்பினை உடையவன்; பல இசைக் கருவிகளை உடையவன்; ஆட்டினை உடையவன்; மயிலினை உடையவன்; குற்றமற்ற அழகிய சேவல் கொடியை உடையவன்; உயரமானவன்; தோளில் அணியப்பெறும் 'தொடி' எனப்படும் அணிகலன் அணியப்பெற்றுள்ள தோள்களை உடையவன்; நரம்பாலாகிய இசைக் கருவிகளின் இசையை ஒத்த இனிய இசையோடு வருகின்ற மகளிர் குழாத்துடன் வருபவன்; சிறிய புள்ளிகளையும் நறுமணத்தையும் குளிர்ச்சியையும் அழகினையும் உடையதாக, நிலத்தில் தோய்கின்ற ஓர் ஆடையை அணிந்திருப்பவன்; குரவை ஆடவிருக்கும் பெண்மானைப் போன்ற மகளிரை முழவு போன்ற பெருமையுடைய தன் கைகளால் பொருந்தத் தாங்கித் தோளைத் தழுவியவாறு தன் பெருமை பொருந்திய கையை முதற் கையாக அம் மகளிர்க்குத் தந்து, ஒவ்வொரு குன்றின் மீதும் திருமுருகனைப் போல ஆடுவது அவன்தன் இயல்பாகும், அது மட்டுமன்று."


6 - பழமுதிர்சோலை

( முருகப் பெருமானின் இருப்பிடங்கள் )


" சிறுதினை மலரொடு விரைஇ மறிஅறுத்து

வாரணக்கொடியொடு வயிற்பட நிறீஇ

ஊர்ஊர் கொண்ட சீர்கெழு விழவினும்

ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும்

வேலன் தைஇய வெறிஅயர் களனும்

காடும் காவும் கவின்பெறு துருத்தியும்

யாறும் குளனும் வேறுபல் வைப்பும்

சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும்

மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும்" ( 218 – 226 )

விளக்கம் : "சிறிய தினை அரிசியைப் பூக்களுடன் கலந்து பல பாத்திரங்களில் பரப்பி 'பிரப்பு அரிசி'யாய் வைத்து, ஆட்டுக் கிடாயை அறுத்து, கோழிக் கொடியை அதற்குரிய இடத்தில் நிறுத்தி ஊர்தோறும் கொண்டாடப்படும் பெருமையுடைய விழாவிலும், அன்புடைய பக்தர்கள் திருமுருகப்பெருமானை வழிபட்டு போற்றும் பொருத்தமான இடத்திலும் வேலன் மிக்க மகிழ்ச்சியுடன் ஆடும் 'வெறியாடு' களத்திலும், காட்டிலும், சோலையிலும், அழகான [தீவு போன்ற] ஆற்றிடைக்குறையிலும், ஆறு, குளம் ஆகியவற்றின் கரைகளிலும், வேறு பல இடங்களிலும், நான்கு தெருக்கள் சந்திக்கும் சதுக்கத்திலும், மூன்று தெருக்கள் சந்திக்கும் முச்சந்தியிலும், புதுமலர்களை உடைய கடம்பு மரத்தினடியிலும், ஊரின் நடுவில் உள்ள மரத்தினடியிலும், அம்பலத்திலும், கந்து நடப்பட்டுள்ள இடத்திலும்"


" மாண்தலைக் கொடியொடு மண்ணி அமைவர

நெய்யோடு ஐயவி அப்பி ஐதுஉரைத்து

குடந்தம்பட்டு கொழு மலர் சிதறி

முரண்கொள் உருவின் இரண்டுஉடன் உடீஇ

செந்நூல் யாத்து வெண்பொறி சிதறி

மதவலி நிலைஇய மாத்தாள் கொழுவிடைக்

குருதியொடு விரைஇய தூவெள் அரிசி

சில்பலிச் செய்து பல்பிரப்பு இரீஇ

சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்து

பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை

துணைஅற அறுத்துத் தூங்க நாற்றி

நளிமலைச் சிலம்பில் நல்நகர் வாழ்த்தி

நறும்புகை எடுத்து குறிஞ்சி பாடி

இமிழ்இசை அருவியொடு இன்இயம் கறங்க

உருவப் பல்பூத் தூஉய் வெருவரக்

குருதிச் செந்தினைப் பரப்பி குறமகள்

முருகுஇயம் நிறுத்து முரணினர் உட்க

முருகுஆற்றுப்படுத்த உருகெழு வியல்நகர்" ( 227 – 244 )

விளக்கம் : "சிறப்பான முதன்மை பொருந்திய கோழிக் கொடியைப் பொருத்தமாக நிறுத்தி, நெய்யுடன் வெண்மையான சிறு கடுகினைக் கலந்து [கோயிலின் வாயிலில்] அப்பி, [திருமுருகப்பெருமானின் திருப்பெயரை] மென்மையாக உரைத்து, இரு கைகளையும் கூப்பி வணங்கி, வளம் பொருந்திய செழுமையான மலர்களைத் தூவி, வெவ்வேறு நிறமுடைய இரு ஆடைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அணிந்து, கையில் சிவப்பு நூல் [காப்பு நூலாக] கட்டப்பெற்று, வெண்மையான பொரியைத் தூவி, வலிமை வாய்ந்த ஆட்டு கிடாயின் இரத்தம் கலந்த தூய வெண்மையான பிரப்பு அரிசியை பலி அமுதாக பல இடங்களில் வைத்து, சிறு பசுமஞ்சளையும் நல்ல நறுமணப் பொருள்களையும் பல இடங்களில் தூவித் தெளித்து, செவ்வரளி மலரால் ஆகிய மாலையை சீராக நறுக்கி கோயிலைச் சுற்றித் தொங்கவிட்டு, செறிவான மலைப் பக்கங்களிலுள்ள ஊர் வாசிகள் அனைவரும் திருமுருகப்பெருமானை வாழ்த்திப் பாடுகின்றனர்; மணப் புகையை எடுத்து ஆராதனை செய்கின்றனர்; குறிஞ்சிப் பண்ணில் இயற்றப்பெற்ற பாடல்களைப் பாடுகின்றனர்; மலை மீதிருந்து விழும் அருவியின் ஓசைக்கேற்ப இசைக் கருவிகளை ஒலிக்கின்றனர்; பல்வேறு வடிவமுடைய அழகான பூக்களைத் தூவுகின்றனர்; காண்பவர்களுக்கு அச்சம் விளைவிக்கும் வகையில் இரத்தத்தோடு கலந்த தினை அரிசியைப் பரப்பி வைத்துள்ளனர்; திருமுருகப்பெருமானுக்கு விருப்பமான [குறிஞ்சி யாழ், துடி, தொண்டகம், சிறுபறை போன்ற] இசைக் கருவிகளைக் குறமகள் இயக்குகின்றாள். மாறுபட்ட உள்ளம் உடையவர்களும் அஞ்சுமாறு அந்த சூழ்நிலை அமைகின்றது; இவ்வாறு திருமுருகன்பால் வழிப்படுத்துகின்ற அழகு பொருந்திய அகன்ற ஊரில் கோயில் வழிபாடு அமைகின்றது


( முருகப் பெருமானை வழிபடுதல் )


" ஆடுகளம் சிலம்பப் பாடி பலவுடன்

கோடு வாய்வைத்து கொடுமணி இயக்கி

ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி

வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட

ஆண்டுஆண்டு உறைதலும் அறிந்த வாறே" ( 245 – 249 )

விளக்கம் : "அவ்வாறு, மிகுதியான மகிழ்ச்சியுடன் ஆடிய களத்தில் ஆரவாரம் ஏற்படுவதற்குரிய பாடல்களைப் பாடி, ஊது கொம்புகள் பலவற்றையும் ஊதி, வளைந்த மணியினையும் ஒலிக்கச் செய்து, என்றென்றும் கெடாத வலிமையை உடைய 'பிணிமுகம்' எனப்படும் யானையை அல்லது மயிலினை வாழ்த்தி, தாம் விரும்பும் அருட்கொடைகளை விரும்பியவாறு அடையவேண்டி அடியார்கள் வழிபடுவதற்கென்று, அந்தந்த இடங்களில் திருமுருகப்பெருமான் தங்கவும் செய்வான் என்று யான் அறிந்தவற்றை அறிந்த வண்ணமே உரைத்தேன்."



" ஆண்டு ஆண்டு ஆயினும்ஆக காண்தக

முந்துநீ கண்டுழி முகன்அமர்ந்து ஏத்தி

கைதொழூஉப் பரவி காலுற வணங்கி

நெடும்பெருஞ் சிமையத்து நீலப்பைஞ்சுனை

ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப

அறுவர் பயந்த ஆறுஅமர் செல்வ

ஆல்கெழுகடவுள் புதல்வ மால்வரை

மலைமகள் மகனே மாற்றோர் கூற்றே

வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ

இழையணி சிறப்பின் பழையோள் குழவி

வானோர் வணங்கு வில் தானைத்தலைவ

மாலை மார்ப நூல்அறி புலவ

செருவில் ஒருவ பொருவிறல் மள்ள

அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல்மலை

மங்கையர் கணவ மைந்தர் ஏறே

வேல்கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ

குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து

விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக்கிழவ

பலர்புகழ் நன்மொழிப் புலவர் ஏறே

அரும்பெறல் மரபின் பெரும்பெயர் முருக

நசையுநர்க்கு ஆர்த்தும் இசைபேர் ஆள

அலந்தோர்க்கு அளிக்கும் பொலம்பூண் சேஎய்

மண்டுஅமர் கடந்தநின் வென்றுஆடு அகலத்து

பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேஎள்

பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள்

சூர் மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி

போர்மிகு பொருந குரிசில் எனப்பல

யான்அறி அளவையின் ஏத்தி ஆனாது" ( 250 – 277 )

விளக்கம் : "அந்தந்த இடங்களில் திருமுருகப்பெருமானைக் காணும் நற்பேறுடைய அடியார்கள் திருமுருகப்பெருமானைக் காணும் நல்லதொரு வாய்ப்பினைப் பெற்றால், முகம் மலர்ந்து திருமுருகப்பெருமானை விரும்பி நோக்கி, வாயால் வாழ்த்தி கைகளைத் தலை மீது குவித்து வணங்கி, திருமுருகப்பெருமானின் திருவடிகளில் தலை பொருந்தும்படி விழுந்து வணங்கி, '[சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய தீப்பொறிகளை வானம், காற்று, தீ, நீர், நிலம் ஆகிய ஐவருள் ஒருவரான] தீயானது தன் அழகிய கையிலே தாங்கிக் கொண்டுவந்து நெடிய பெரிய இமய மலையின் உச்சியில் 'சரவணம்' எனப்படும் தருப்பை வளர்ந்த பசுமையான சுனையில் இடவும், கார்த்திகைப் பெண்டிர் அறுவரால் பாலூட்டப்பெற்று வளர்ந்த ஆறு திருமுகங்களையுடைய பெருமானே! கல்லால மரத்தின் கீழ் எழுந்தருளிய சிவபெருமானின் புதல்வரே! இமயவான் மகளான பார்வதி தேவியாரின் மைந்தரே! [தீயோராகிய] பகைவர்களுக்கு யமன் போன்றவறே! வெற்றியை உடைய வெல்லும் போர்த் தெய்வமான கொற்றவையின் மைந்தரே! அணிகலன்களை அணிந்த தலைமைத்துவம் உடைய காடுகிழாளின் குழந்தையே! வானவர்களாகிய தேவர்களின் விற்படைகளுக்குத் தலைவரே! கடம்பு மலர்களாலாகிய மாலையினை அணிந்த மார்பினை உடையவரே! அனைத்து மெய்யான நூல்களின் உண்மையான பொருளை அறியும் புலமை உடையவரே! போர்த் தொழிலில் ஒப்பற்றவரே!

உலகமெலாம் அழியும் காலத்திலும் தீயோரை எதிர்த்துப் போரிடுவதற்கென்று எஞ்சி நிற்கும் ஒரே கடவுளே! அந்தணர்களுக்குச் செல்வமாக விளங்குபவரே! புலைமையுடைவர்கள் புகழ்ந்து கூறும் சொற் கூட்டமாய் விளங்குபவரே! தெய்வயானை-அம்மையார், வள்ளி-அம்மையார் ஆகிய மங்கையரின் கணவரே! வலிமை உடைய வீரர்களுக்குள் அரியேறு போன்றவரே! ஞானசக்தியாகிய வேலினைப்பெற்று விளங்கும் பெருமை பொருந்திய கையினை உடைய செல்வரே! கிரௌஞ்ச மலையில் ஒளிந்திருந்த சூரபன்மனை அழித்து வென்ற குறையில்லாத வெற்றியையும் பெருமையையும் உடையவரே! வானத்தைத் தொடும் குறிஞ்சி நிலத்திற்கு உரிமை இடைய தலைவரே! உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் நூல் இயற்றும் புலவர்களுக்கெல்லாம் தலைவரே! மூத்த பரம்பரையினையும் சிறந்த புகழினையும் உடையவராக என்றென்றும் இளைஞனாகவும் அழகனாகவும் திகழ்வதால் முருகன் என்னும் திருப்பெயரை உடையவரே! விரும்பிச் செல்கின்றவர் வேண்டும் எல்லாவற்றையும் தந்தருளும் கொடை வள்ளலே! பொருள் இல்லாது துன்புறுவோர்களுக்குத் தரவேண்டியே பொன்னாலாகிய அணிகலன்களை அணிந்துள்ளவரே! பரிசில் பெற வருகின்ற அனைவரையும் தழுவித் தாங்கிக் காத்து அருள்பவரே! அசுரன் சூரபன்மனையும் அவன் தன் சுற்றத்தினரையும் அழித்து வென்ற காரணத்தால் 'மதவலி' என்னும் பெயரை உடையவரே! மிகச் சிறப்பாகப் போரிடும் இளமை பொருந்திய வீரரே! உண்மையான தலைவரே!' ... எனப் பல வகைகளில் யான் அறியும் அளவு கூறியவாறு திருமுருகப்பெருமானைத் துதித்து வணங்குவாயாக."


" நின்அளந்து அறிதல் மன்உயிர்க்கு அருமையின்

நின்அடி உள்ளி வந்தனென் நின்னொடு

புரையுநர் இல்லாப் புலமையோய் எனக்

குறித்தது மொழியா அளவையின் குறித்துஉடன்


(வழிபடுவோரின் கூற்று )


வேறுபல் உருவின் குறும்பல் கூளியர்

சாறுஅயர் களத்து வீறுபெறத் தோன்றி

அளியன் தானே முதுவாய் இரவலன் வந்தோன்

பெரும! நின் வண்புகழ் நயந்து என

இனியவும் நல்லவும் நனிபல ஏத்தி


( முருகப் பெருமான் அருள்புரிதல் )


தெய்வம்சான்ற திறல்விளங்கு உருவின்

வான்தோய் நிவப்பின் தான்வந்து எய்தி

அணங்குசால் உயர்நிலை தழீஇ பண்டைத்தன்

மணங்கமழ் தெய்வத்து இளநலம் காட்டி

'அஞ்சல் ஓம்புமதி அறிவல்நின் வரவு' என

அன்புடை நல்மொழி அளைஇ விளிவுஇன்று

இருள்நிற முந்நீர் வளைஇய உலகத்து

ஒருநீ ஆகித் தோன்ற விழுமிய

பெறல் அரும் பரிசில் நல்குமதி பலவுடன்" ( 278 – 295 )

விளக்கம் : " 'இறைவனின் தன்மை அனைத்தையும் அளவிட்டறிதல் இயலாது; எனவே நின் திருவடிகளை அடைய எண்ணி வந்தேன், ஒப்பில்லாத மெய்யறிவினை உடைய பெருமானே', என்று உரைத்து நீ எண்ணிய பரிசிலைப்பற்றிக் குறிப்பிடுவதற்கு முன்னர், வெவ்வேறான பல வடிவுடைய ஏவலாளர்கள், திருவிழா நிகழும் களத்தில் தோன்றுவது போல பொலிவுடன் தோன்றி, [திருமுருகப்பெருமானை நோக்கி] 'பெருமானே, அறிவு முதிர்ந்த சொற்களையுடைய இந்த இரவலன் இரங்கத்தக்கவன்; நின் அருளுக்குரியவன்; நின்னுடைய புகழை விரும்பி வந்துள்ளான்' என்று உரைத்து இனிமையும் உறுதியும் பயக்கும் சொற்களைக் கூறி நிற்ப, தெய்வத்தன்மையும் வலிமையும் பொருந்திய, வானத்தைத் தொடும் வடிவினையுடைய திருமுருகப்பெருமான் நின்முன்னே எழுந்தருள்வான்; ஆயினும் காண்பவர்களுக்கு அச்சத்தைத் தரும் தெய்வ வடிவினை உள்ளடக்கிக்கொண்டு முந்தைய மணம் கமழும் தெய்வத்தன்மை உடைய இளமை பொருந்திய வடிவினைக் காட்டி, 'நீ அஞ்சவேண்டாம், உன்னைக் காத்தருள்வேன், நின்வருகையை யான் முன்னரே அறிவேன்,' என்று உரைத்து, அன்புகூர்ந்த பல சொற்களையும் கூறி அருள்வதோடு, இருண்ட கடலால் சூழப்பட்ட இப் பெரிய உலகத்தில் தனிப்பெருமை வாய்ந்த ஒருவனாக நீ விளங்குமாறு மற்றவர்களும் பெறுவதற்கு அரிய பரிசிலைத் தந்தருள்வான்."


" வேறுபல் துகிலின் நுடங்கி அகில் சுமந்து

ஆர முழுமுதல் உருட்டி வேரல்

பூவுடை அலங்கு சினைபுலம்ப வேர்கீண்டு

விண்பொரு நெடுவரைப் பரிதியின் தொடுத்த

தண்கமழ் அலர்இறால் சிதைய நன்பல

ஆசினி முதுசுளை கலாவ மீமிசை

நாக நறுமலர் உதிர யூகமொடு

மாமுக முசுக்கலை பனிப்பப் பூநுதல்

இரும்பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்று

முத்துடை வான்கோடு தழீஇ தத்துற்று

நன்பொன் மணிநிறம் கிளர பொன்கொழியா

வாழை முழுமுதல் துமியத் தாழை

இளநீர் விழுக்குலை உதிரத் தாக்கி

கறிக்கொடிக் கருந்துணர் சாயப் பொறிப்புற

மடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇ

கோழி வயப்பெடை இரிய கேழலொடு

இரும்பனை வெளிற்றின் புன்சாய் அன்ன

குரூஉமயிர் யாக்கைக் குடாஅடி உளியம்

பெருங்கல் விடர்அளைச் செறியக் கருங்கோட்டு

ஆமா நல்ஏறு சிலைப்பச் சேண்நின்று

இழுமென இழிதரும் அருவி

பழமுதிர் சோலை மலைகிழ வோனே." ( 296 – 317 )

விளக்கம் : "பலவாகவும் ஒன்றாகவும் கூடிய வெவ்வேறான துகிலால் ஆகிய பல கொடிகளைப் போன்று மலை உச்சியிலிருந்து அசைந்து வீழ்கின்ற நீர்வீழ்ச்சியானது அகிற்கட்டையைச் சுமந்துகொண்டும், பெரிய சந்தன மரத்தைச் சாய்த்துத் தள்ளியும், சிறு மூங்கிலின் மலர் பொருந்திய கொம்பு தனிப்ப வேரைப் பிளந்தும், வானத்தைத் தொடுவது போன்ற நெடிய மலை மீது கதிரவனைப் போல் தோன்றி ஈக்கள் மொய்க்கின்ற குளிர்ச்சியும் மணமும் பொருந்திய தேன் கூடு சிதையவும், நல்ல 'ஆசினி' எனப்படும் பலாப் பழத்தின் பல முற்றிய சுளைகள் நீர்விழ்ச்சியில் விழுந்து கலக்கவும், மலையின் உச்சியில் உள்ள சுரபுன்னை மரத்தின் பூக்கள் உதிரவும், கருங்குரங்குடன், கரியமுகத்தை உடைய முசுக்கலை எனப்படும் பெண் குரங்குகளும் குளிரால் நடுங்கவும், நெற்றியில் புள்ளிகளை உடைய 'பிடி' எனப்படும் பெண் யானையும் மிகுதியான குளிர்ச்சியை உணரவும், பெரிய யானையின் முத்தினை ஒத்த கொம்புகளையும், நல்ல பொன், மணிகள் ஆகியவற்றையும், பொடி வடிவத்தில் உடைய பொன்னையும் கொண்டு சேர்க்கவும், வாழை மரத்தின் அடிப்பாகம் ஒடிந்து விழவும், தென்னையின் இளநீர்க் குலைகள் உதிரவும், மிளகின் கரிய கொத்துகள் விழுந்து சாயவும், அழகான இறகைப் புறத்தேயுடையதும் இளமையுடன் கூடிய நடையையும் உடைய பல மயில்கள் அச்சமுறவும், வலிமையுடைய பெண் கோழிகளும் அஞ்சி ஓடவும், ஆண் பன்றியுடன், கரிய பனையின் புல்லிய செறும்பைப் போன்ற கரிய மயிரை உடைய உடலையும் வளைந்த அடியினையும் உடைய கரடியும் பெரிய கற்குகைக்குள் சென்று சேரவும், கரிய கொம்பினையுடைய காட்டுப் பசுவின் நல் எருது அச்சத்தால் கதறவும், மலையின் உச்சியிலிருந்து 'இழும்' என்னும் ஓசையுடன் குதித்து விழும் அருவியினையும் முற்றிய பழங்களையும் உடைய சோலைகளைப்பெற்று விளங்கும் குறிஞ்சி நிலத்திற்கு உரிமை உடையவர் திருமுருகப்பெருமான்."


திருமுருகாற்றுப்படை நிறைவுற்றது