பட்டினப்பாலை



பத்துப்பாட்டு வரிசையில் ஒன்பதாவது பாட்டு



பட்டினப்பாலை

`சங்ககாலத்துத் தமிழ் நூல் தொகுப்பான பத்துப்பாட்டில் அடங்கிய ஒரு நூல். பத்துப்பாட்டு வரிசையில் ஒன்பதாவது பாட்டு, இந்நூல்.

இயற்றியவர் : கடியலூர் உருத்திரங்கண்ணனார்

( பத்துப்பாட்டில் அடங்கியுள்ள “பெரும்பாணாற்றுப்படை” என்னும் நூலையும் இயற்றியுள்ளார். )

அடிகள் : 301 அடிகள்; இடையிடையே வஞ்சிப்பாவின் அடிகள் விரவி இருந்தாலும் ஆசிரியப்பாவால் இயன்றவை.

காலம் : கி.மு. இரண்டாம் நூற்றாண்டு


நூல் கூறும் சிறப்புகள்

கரிகால் சோழனுடைய காவிரிப்பூம்பட்டினத்தின் பெருஞ்சிறப்பைச் சொல்வதே பட்டினப்பாலை ஆகும்

பண்டைய சோழ நாட்டின் சிறப்பு

சோழ நாட்டின் தலைநகரான காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பு

அதன் செல்வ வளம்

கரிகாலனுடைய வீரச்செயல்கள்

மக்கள் வாழ்க்கை முறை ஆகியவற்றை எடுத்து இயம்பும். இப்பாட்டின் கருத்துகளை,

  • I ) பட்டினப்பாலை - சொல்லின் பொருள்
  • II ) நூல் கூறும் செய்திகள்
  • III ) கரிகாற்சோழன்
  • IV ) ஆசிரியர் வரலாறு
  • V ) பாடல் கூறும் கருத்துகள் : சுருக்கமாக!
  • VI) பாடலும் கருத்துகளும் - விரிவாக!
  • VII ) தனிப்பாடல்
  • என்னும் தலைப்புகளில் காணலாம்.

பட்டினப்பாலை - சொல்லின் பொருள்

பட்டினம் : துறைமுகத்தை ஒட்டியுள்ள நகரங்கள். காவிரிப்பூம்பட்டினம் சோழ நாட்டின் பழம்பெரும் நகரமாகும்.

தலைநகரமாக விளங்கிய துறைமுகப்பட்டினம். இது தமிழகத்தில், தஞ்சாவூர் மாவட்டத்தில் கீழ்க்கோடியிலே காவிரி நதி கடலோடு கலக்கும் இடத்தில் உள்ளது. இப்போது இது ஒரு சிறிய ஊராகும். ஏறக்குறைய ஆயிரத்தைந்நூறு ஆண்டுகளுக்கு முன் இந்த நகரம் கடலிலே மூழ்கி விட்டதாகச் சொல்லப்படுகிறது. ஐம்பெருங்காப்பியங்களிலே ஒன்றான மணிமேகலையில் காவிரிப்பூம்பட்டினம் கடலில் மூழ்கிய செய்தி காணப்படுகிறது.

பாலை : பாலைத்திணை ஆகும் - பிரிவைப் பற்றிக் கூறுவது பாலைத்திணையாகும். பிரிதலும் பிரிதல் தொடர்பான நிகழ்வுகள் இதில் அடங்கும். பொருள் ஈட்டி வருவதற்குத் தலைவன் தலைவியைப் பிரிய நினைத்தல், தலைவி வருந்துதல், பிரிவுக்கு உடன்படாமை, பாலைநிலக் கொடுமைகளை நினைத்துத் தலைவி அஞ்சுதல், பிரிந்திருக்கும் இடத்தில் இருந்துகொண்டு தலைவன் வருந்துதல் போன்ற நிகழ்வுகளும் அடங்கும். எனவே, பட்டினப்பாலை என்பது பட்டினம்- பாலை என்ற இரு சொற்களைக் கொண்ட தொடர். "பட்டினத்தின் சிறப்பைக் கூறிப் பிரிவின் துன்பத்தை உணர்த்துவது" என்பது இதன் பொருளாகும். நூலின் அமைப்பு பொருள் தேடத் தலைவியைப் பிரிந்து செல்ல வேண்டியுள்ளது. அவ்வாறு சொன்னால், அப்பிரிவைத் தாங்குவாளா? தான் திரும்பி வரும்வரை உயிர் தாங்கி இருப்பாளா? பிரிந்து சென்றால் தானும் மனஅமைதியுடன் அங்குச் செயலாற்ற முடியுமா? என்றெல்லாம் நினைக்கிறான். இதனால், " நான் பிரிந்து செல்ல நினைக்கும் காட்டு மார்க்கம், கரிகாற்சோழன் தன் பகைவர்களின் மேல் வீசிய வேல்படையைக் காட்டினும் கொடுமையானது. என்காதலியின் மெல்லிய தோள்கள் அந்தக் கரிகாற்சோழனுடைய செங்கோலைக் காட்டினும் குளிர்ச்சியைத் ( நன்மையை, இன்பத்தை)தருவன. ஆதலால் நீங்காத சிறப்பினையுடைய காவிரிப்பூம்பட்டினமே கிடைப்பதாக இருந்தாலும் கூட என் காதலியை விட்டுப் பிரிந்து வரமாட்டேன். என் மனமே! பிரிந்து போகவேண்டும் என எண்ணுவதை மறந்துவிடு". என்ற முடிவுக்கு வருகிறான். இதுவே பட்டினப்பாலையின் அகப்பொருள்கருத்தாகும். இதனை,

" திருமாவளவன் தெவ்வர்க்கு ஓங்கிய

வேலினும் வெய்ய கானம்; அவன்,

கோலினும் தண்ணிய தடம்மென் தோளே.

முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும்

வாரிரும் கூந்தல் வயங்கிழை ஒழிய

வாரேன் வாழிய செஞ்சே."

என்று வரும் இந்நூலின் அடிகளால் அறியலாம். இவ்வாறு, பாட்டுடைத் தலைவனான கரிகாற்சோழனின் பெருமை, வீரம், கொடை முதலியவற்றையும் இந்நூல் எடுத்துரைக்கிறது.

இந்நூல் பாலைத்திணை என்னும் அகப்பொருளைப் பற்றியதாயினும் புறப்பொருள் செய்திகளே இதில் மிகுதியாகக் காணப்படுகின்றன.

நூல் கூறும் செய்திகள்

காவிரியாற்றின் சிறப்பு

சோழநாட்டின் நிலவளம்

காவிரிப்பூம்பட்டினத்தின் சுற்றுப்புறங்களின் செழிப்பு

காவிரித்துறையின் காட்சி

செம்படவர்களின் வாழ்க்கை

பொழுதுபோக்கு

ஆகியவற்றை இந்நூல் விரிவாகக் கூறுகிறது. காவிரிப்பூம்பட்டினத்திலே அக்காலத்தில் நடைபெற்ற வாணிகம்; அந்நகரத்திலே குவிந்திருந்த செல்வங்கள்; அங்கு நடைபெற்ற ஏற்றுமதி இறக்குமதி வாணிகம்; வாணிகர்களின் நடுவுநிலைமை; பண்டங்களைப் பாதுகாக்கும் முறை ஆகியவற்றையெல்லாம் இந்நூலிலே காணலாம்.

கரிகாற்சோழன்

இந்நூலில் குறிப்பிடப்படும் பாட்டுடைத்தலைவனான கரிகால் சோழன். இரணடாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவன். இவனது தலைநகரமாகக் காவிரிப்பூம்பட்டினம் சிறந்து விளங்கியது.

கரிகால் சோழன் சிறுவனாய் இருந்த போது அவனைக் கொல்ல பகைவர்கள் சூழ்ச்சி செய்து அவரிருந்த இல்லத்திற்குத் தீ வைக்க அஞ்சாமல் தீயினின்றும் வெளிவந்து தப்பித்துக்கொண்டான். அவன் தீயிலிருந்து வெளிவரும் போது அவனுடைய கால் தீப்பட்டுக் கரிந்து போனதால் கரிகால்சோழன் என்று பெயர் வந்தது.

இவன் இளையோனாய் இருந்த போது நரை முடித்து நீதி கூறிய கதையும் வழங்குகிறது. இச்செய்தி பட்டினப்பாலையின் இறுதியில் கூறப்பட்டுள்ளது.

இவன் இளைஞனாய் இருந்தபோது பகைவரால் சிறை பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.எப்படியோ சிறைலிருந்து தப்பி தனக்குரிய அரசாட்சியையும் கைப்பற்றினான். பிறகு தன் பகைவர்களின் மேல் படை திரட்டிச் சென்று அவர்களையெல்லாம் வீழ்த்தி வெற்றிபெற்றான்.

இவன் வெண்ணி என்னும் ஊரின் பக்கத்திலிருந்த போர்க்களத்தில் சேரமான் பெருஞ்சேரலாதன் என்பவனோடு போர் செய்து வென்றான். அப்பாேது அதே போர்க்களத்தில் சேரலாதனுக்குத் துணையாக வந்த பாண்டியனையும் எதிர்த்துப் போர் செய்து வென்றான். ஆகவே பாண்டியன், சேரன் இருவரையும் வென்றவன்.

இவன் இமயம் வரை படையெடுத்துச் சென்றான். இடையிட்ட மன்னர்களை எல்லாம் வென்று இமயத்தில் புலிக்கொடியையும் நாட்டினான். இவன், 'திருமாவளவன்' என்றும் அழைக்கப்பட்டிருப்பதை இந்நூலின் வழி அறியலாம்.

இவனைப் பற்றி மேலும் பழமொழி, பொருநராற்றுப்படை, புறநானூறு, சிலப்பதிகாரம் போன்றவற்றில் பல செய்திகள் காணக்கிடைக்கின்றன. கரிகால் சோழன் தமிழை மிகவும் விரும்புபவன். புலவர்களையும் ஆதரிப்பவன். இரும்பிடர்த்தலையார் என்னும் புலவர் இவனது தாய்மாமன். பட்டினப்பாலையைப் பாடிய உருத்திரங்கண்ணனாருக்கு பதினாறு நூறாயிரம் கழஞ்சு (பொன்) பரிசளித்தான் என்ற செய்தி இவனுடைய தமிழ்ப்பற்றை விளக்குவதாகும்.

ஆசிரியர் வரலாறு

இந்நூலை இயற்றிய ஆசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணனார், "பெரும்பாணாற்றுப்படை " என்ற நூலினையும் இயற்றியுள்ளார். இந்நூல், தொண்டைமான் இளந்திரையன் என்னும் அரசன் மீது பாடப்பட்டது. பட்டினப்பாலை கரிகால்சோழன் மீது பாடப்பட்டது. ஆகவே இவர் கரிகாலன், இளந்திரையன் என்ற இரண்டு மன்னர்களின் அன்புக்குரியவராக வாழ்ந்தார் என்பதை அறியலாம். இவரின் வரலாற்றினை அறிவதற்கான சான்று எதுவும் இல்லை. கடியலூர் என்பதை இவர் பிறந்த ஊராகக் கருதுகின்றனர். இவ்வூர் எதுவெனத் தெரியவில்லை. இவர் தொண்டைமானையும், சோழனையும் பாடியிருப்பதால் இந்த ஊர் சோழ நாட்டிலோ, அல்லது தொண்டை நாட்டிலோதான் இருந்திருக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர்.

இவர் கூறியிருக்கும் இயற்கை நிகழ்ச்சிகளும் உவமைகளும் அக்கால காவிரிப் பூம்பட்டினத்தை நம் மனக்கண்ணில் படம் பிடித்துக் காட்டுவது போல் அமைந்துள்ளன.

தமிழ்நாட்டின் பெருமை, தமிழர் நாகரிகத்தின் உயர்வு, தமிழர்களின் வீரம், பண்பாடு ஆகியவற்றையெல்லாம் இந்நூலில் காணலாம்.

பாடல் கூறும் கருத்துகள் : சுருக்கமாக!

1, மழை இல்லாவிட்டாலும் காவிரியில் நீர் வந்துவயலில் பொன்போல் விளைச்சல் பெருகும்.

2. கழனியில் கரும்பும் வயலில் ஆம்பலும் பூக்கும்.

3, செந்நெல், தென்னை, வாழை, பாக்கு, மஞ்சள்,சேம்பு, இஞ்சி – விளையும்.

4. காயும் உணவுப்பொருள்களைக் கவர்ந்து உண்ணும்கோழிகளை, காதில் அணிந்திருக்கும் பொன்னணிகளைக் கழற்றி எறிந்து மகளிர் ஓட்டுவர். அவைகுழந்தைகள் உருட்டும் நடைவண்டிகளைத் தடுக்கும்.

5. விலங்கு-பகை அல்லது மக்கள் தாக்கும் பகைஅங்கு இல்லை.

6. மக்கள் பஃறியில் கொண்டுசென்ற உப்பை விற்றபண்டமாற்று நெல்லுடன் திரும்புவர்.

7. சிவன் கோயிலுக்கு ஆணும் பெண்ணும் தம் காமம்நிறைவேற மூழ்கி எழும் இரட்டை ஏறி இருக்கும்.

8. அரசனின் வெள்ளை-மாளிகையின் கதவில் புலிச்சின்னம்பொறிக்கப்பட்டிருக்கும். அங்கே மொழி வளரப் பாடுபடுவோருக்கு உணவு வழங்கப்படும்.

9. கேணி-முற்றத்தில் முனிவர் தீ வளர்த்து வேள்விசெய்வர்.

10. கையாலும், கருவிகளாலும் மோதி, கவண் எறிந்துபோர்ப்பயிற்சி பெறும் முரண்-களரி இருக்கும்.

11. நிறை-நிலா வெளிச்சத்தில் ஆணும் பெண்ணுமாகப்பரதவர் உண்டும் ஆடியும் மகிழ்வர்.

12. கடலில் விளையாடல், பின்பு அதன் உப்புப் படிவுநீங்க ஆற்றில் குளித்தல், பின்னர் நண்டு விளையாட்டு, பாவை விளையாட்டு – என்றெல்லாம்பகலில் விளையாடுவர் 12 மகளிரும், மைந்தரும் மகிழ்ந்து திளைப்பர்.

14. மாடத்து மகளிர் இரவில் கடலில் திமிலில் எரியும்பந்தங்களை எண்ணுவர். மணல்-பரப்பில் பாட்டும் நாடகமும் நடைபெறும்.

15. தெருவில் அரசனின் காவலர் உல்கு-வரி வாங்கியபொருள்களில் முத்திரை பதிப்பர்.

16. நீரிலிருந்து நிலத்துக்கு ஏற்றும் பண்டங்களும்,நிலத்திலிருந்து நீர்க்கப்பல்களுக்கு இறக்கும் பண்டங்களும் அளந்தறிய முடியாதபடி மண்டிக்கிடக்கும்.

17. அவற்றில் புலிச்சின்னம் பொறிக்கப்பட்டு மூட்டைமூட்டைகளாக அடுக்கப்பட்டிருக்கும்.

18. அந்த மூட்டைகளில் ஏறி நாயும், ஆடும் விளையாடும்

19. மாடங்களில் முருகன் வழிபாட்டு வெறியாட்டம்நடைபெறும்.

20. அப்போது இசைக்கருவிகள் முழங்கும்.

21. கோயில்களில் தெய்வத்தின் கொடி பறக்கும்.

22. படைக்கருவிகளின் இருப்பிடம் எனக் காட்டும்கொடிகள் பறக்கும்.

23. புலவர்களின் சொற்போர் நிகழுமிடம் என்பதைக்காட்டும் கொடி பறக்கும்.

24. கடலில் கப்பலின் கொடி பறக்கும்.

25. மீன் விற்குமிடம், நறவுக்கள் விற்குமிடம்– எனக் காட்டும் கொடிகள் பறக்கும்.

26. இந்தப் பதாகை நிழலில்தான் தேவர் உலகம் போன்றஊர்.

27. கடல்-வழி வந்த குதிரை, வண்டியில் வந்த மிளகு-மூட்டை,வடமலையில் பிறந்த மணி, குடமலையில் பிறந்த சந்தனம், தென்கடல் முத்து, கீழைக்கடல் பவளம்,கங்கை-காவிரிப் படுகை விளைச்சல்கள், ஈழத்து உணவு, காழகத்து (கடாரம்-பர்மா)ச் செல்வம்– இப்படிப் பல சிறியனவும், பெரியனவுமாக மண்டிக்கிடக்கும்.

28. வலைஞர் முற்றத்தில் மீன், விலைஞர் பட்டிகளில்குதிரை- விற்கப்படும்.

29. கொலை-களவு இல்லை. அந்தணர் வேள்வி நடைபெறும். பசுவும் காளையும் வளர்ப்பர். பண்ணியம் சுட்டு வழங்குவர். புண்ணிய வாழ்க்கை நடைபெறும்.

30. வணிகர் நடுவுநிலையில் வாணிகம் செய்வர்.

31. வேறு வேறு மொழி பேசும் மக்கள் கலந்து உறவாடிவாழ்ந்தனர்.

32. நெஞ்சே! இப்படிப்பட்ட காவிரிப்பூம்பட்டினமேஎனக்குக் கிடைப்பதாயினும் என் காதலியை விட்டுவிட்டு வரமாட்டேன்.

33. திருமாவளவன் வரிப்புலி கூட்டில் வளர்ந்ததுபோல வளர்ந்தான். குழியில் விழுந்த ஆண்யானை தன் கொம்புகளால் குழிக்கரையைக் குத்திக்குழியைத் தூர்த்துக்கொண்டு மேலேறித் தன் பெண்யானையை அடைந்தது போல வாளுடன் வெளிப்பட்டுப்போந்து தன் ஆட்சித் தாயத்தைப் பெற்றான்.

34. பெற்றதோடு மகிழ்வுறாமல், பகைவரின் யானை,குதிரை, வயவர் படைகளை வீழ்த்தினான்.

35. உழிஞைப் பூச்சூடி நாடு விரிவாக்கப் போரில்ஈடுபட்டான்.

36. போர்-முரசு முழங்கிற்று.

37. கரும்பும், நெல்லும் விளைந்த பகைவர் நிலங்களைப்பாழாக்கி, மான்கள் விளையாடும் நிலம் ஆகும்படிச் செய்தான்.

38. கொண்டி-மகளிரும், யானையும் தங்கும் இடங்களாகச்செய்தான்.

39. பாணர் ஆடிப் பாடி மகிழ்வித்த பகைவர் மன்றங்களில்நரியும் கூகையும் குரல் எழுப்புமாறு செய்தான்.

40. விருந்து உண்டும், கிளி-மொழி கேட்டும் மகிழ்ந்திருந்தமாடங்களில் கொள்ளையடிக்கும் எயினர் வாழும் இடங்களாக மாறுமாறு செய்தான்.

41. அப்படியும் சினம் தணியாமல், மலையைப் பிளப்பேன்,கடலைத் தூர்ப்பேன், வானத்தை வீழ்த்துவேன், காற்றின் திசையை மாற்றுவேன் – என்றல்லாம்முழங்ககினான்.

42. ஒளியர், அருவாளர், வடவர், குடவர், பொதுவர்ஆகிய குடிமக்களின் அரசர்களும், தென்னவன், இருங்கோவேள் ஆகிய மன்னர்களும் அடங்குமாறுசெய்தான்.

43. தன் நாட்டில் காடுகளை அழித்து நாடாக்கினான்.குளங்கள் தோண்டி நீர்வளம் பெருக்கினான். ஆட்சியாளர்களை உறையூரில் குடிபுகச் செய்துஅங்கும் கோட்டை அமைத்துக்கொண்டு அங்கும் இங்குமாக இருந்து ஆட்சி புரிந்துவந்தான்.

44. வென்ற பகைவரின் முடிப் பொன்னால் கழல் செய்துதன் பிள்ளைகளுக்கு அணிவித்து, அவர்கள் ஓடியாடுவதைக் கண்டுகளித்தான்.

45. "இப்படி வாழ்ந்த திருமாவளவனின் வேல் போல்கொடியது பொருள்தேடச் செல்லும் காடு. அவன் செங்கோல் போல் குளுமையானது என் காதலியின்தோள். எனவே, நெஞ்சே, இவளை விட்டுவிட்டு வரமாட்டேன்" என்கிறான் தலைவன்.


பாடலும் கருத்துகளும் - விரிவாக!


வசை இல் புகழ், வயங்கு வெண்மீன்

திசை திரிந்து தெற்கு ஏகினும்,

தற் பாடிய தளி உணவின்

புள் தேம்பப் புயல் மாறி,

வான் பொய்ப்பினும், தான் பொய்யா, 5

மலைத் தலைய கடல் காவிரி

புனல் பரந்து பொன் கொழிக்கும்

மழை இல்லாவிட்டாலும் காவிரியில் நீர் வந்து வயலில் பொன்போல் விளைச்சல் பெருகும். எனவே அது பொய்யாக் காவிரி. ஒளி விளங்கும் சூரியன் ஒரு வெண்மீன். திங்களைப் போல் காலம் மாறாமல், காலக் கணியாய் விளங்குவதால் அது வசையில்லாத புகழினை ஊடையது. வானம்பாடி, குரல் தந்து தன்னையே பாடிக்கொள்ளும். ‘தளி’ என்பது மேகத்திலுள்ள நீர். வானம்பாடி நீராக உண்ணுவது இந்தத் தளிநீரை மட்டுமே. சூரியன் திசைமாறித் தென்முகமாகச் சென்றாலும், வானம்பாடி நீரின்றித் தேம்பினாலும், காவிரியில் புனல் பாய்ந்து பொன் கொழிப்பது தவறுவதில்லையாம். . தலைக்காவிரி தோன்றும் குடகுமலை, காவிரித் தாய்க்குத் தலை!


விளைவு அறா வியன் கழனி,

கார்க் கரும்பின் கமழ் ஆலைத்

தீத் தெறுவின், கவின் வாடி, 10

நீர்ச் செறுவின் நீள் நெய்தல்

பூச் சாம்பும் புலத்து ஆங்கண்,

கழனியில் கரும்பும் வயலில் ஆம்பலும் பூக்கும். காவிரியாற்றுக் கழனிகளில் என்றும் விளைச்சல் இருந்துகொண்டேயிருக்கும். கழனிகளில் விளைந்த கரும்பை ஆலையில் சாறு பிழிந்து வெல்லமாக்குவதற்காகக் காய்ச்சிய புகையின் சூடு பட்டு நீர் வயல்களிலிருந்த நெய்தல் பூக்கள் சாம்பிவிடுமாம். ( சாம்புதல் = சூடுபட்டு வாடுதல் )


காய்ச் செந்நெல் கதிர் அருந்து

மோட்டு எருமை முழுக் குழவி,

கூட்டு நிழல், துயில் வதியும் 15

கோள் தெங்கின், குலை வாழை,

காய்க் கமுகின், கமழ் மஞ்சள்,

இன மாவின், இணர்ப் பெண்ணை,

முதல் சேம்பின், முளை இஞ்சி

விளையாடிய எருமைக் கன்றுக்குட்டி கதிர் முற்றிய நெல் வயலில் இறங்கிக் காலால் கதிர்களைத் துவட்டி விட்டு நெல்லைப் பாதுகாத்து வைத்திருக்கும் நெற்கூட்டின் நிழலில் படுத்திருக்கும். ஊரைச் சூழ்ந்துள்ள வயல் முற்றங்களில் தென்னை, வாழை பாக்குமரம் மஞ்சள், மா, பனை, சேம்பு, இஞ்சி முதலான பணப்பயிர்கள் விளைந்திருக்கும்.


அகல் நகர் வியல் முற்றத்து, 20

சுடர் நுதல், மட நோக்கின்,

நேர் இழை மகளிர் உணங்கு உணாக் கவரும்

கோழி எறிந்த கொடுங் கால் கனங் குழை,

பொன் கால் புதல்வர் புரவி இன்று உருட்டும்,

முக் கால் சிறு தேர் முன் வழி விலக்கும் 25

காயும் உணவுப்பொருள்களைக் கவர்ந்து உண்ணும் கோழிகளை, காதில் அணிந்திருக்கும் பொன்னணிகளைக் கழற்றி எறிந்து மகளிர் ஓட்டுவர். அவை குழந்தைகள் உருட்டும் நடைவண்டிகளைத் தடுக்கும் செல்வச் சீமாட்டியர் சுடரும் நெற்றியும், எதையும் பொருட்படுத்தாத கள்ளம் கபடமற்ற மடமை நோக்கமும் கொண்டவர்கள். காதிலே மதிப்புமிக்க குழைகளையும், கழுத்திலே பொருத்தமான இழைகளையும் அணிந்திருப்பர். முற்றத்தில் உணவு தானியங்களை அந்த மகளிர் காயவைத்துக் கொண்டிருப்பர். கோழிகள் அவற்றைக் கவர்ந்து உண்ணும். அந்தக் கோழிகளை அவர்கள் தம் காதுகளில் அணிந்திருக்கும் குழைகளைக் கழற்றி எறிந்து ஓட்டுவர். அவர்களுடைய பிள்ளைகள் மூன்று சக்கர வண்டியை அவ்விடங்களில் உருட்டிக்கொண்டு செல்லும்போது அந்தக் குழைகள் தடுக்கும். தடையையோ, குழையின் மதிப்பையோ பொருட்படுத்தாமல் பிள்ளைகள் தம் தேர் வண்டியை உருட்டிச் செல்வர். முக்கால் சிறுதேர் = நடைவண்டி உணங்கு உணா = காய வைத்திருக்கும் உணவுப் பண்டம் புரவியின் உருட்டும் = குதிரைபோல் இழுத்துச் செல்வர்.


விலங்கு பகை அல்லது கலங்கு பகை அறியா,

கொழும் பல் குடிச் செழும் பாக்கத்து,

குறும் பல் ஊர் நெடுஞ் சோணாட்டு

சோழ நாட்டில் பயிர்களை உண்ணும் விலங்குபகை உண்டு. உட்பகை, வேற்றுநாட்டுப் பகை போன்ற எந்தப் பகையும் இல்லை. கொழுத்துக் கிடக்கும் செல்வக் குடிகள் பலவாகப் பெருகியிருந்தன. இவர்கள் வாழும் செழுமையான சிற்றூர்கள் பலவற்றைக் கொண்டது சோழநாடு.


வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி

நெல்லொடு வந்த வல் வாய்ப் பஃறி, 30

பணை நிலைப் புரவியின், அணை முதல் பிணிக்கும்

உப்பேற்றிக்கொண்டு ஆற்றின் வழியே சென்ற பஃறி மிதவை பண்டமாற்றாக விற்பனை செய்த நெல்லோடு மீண்டது. ஆற்றோரங்களில் குதிரைகளைக் கட்டும் முளைக்கம்பத்தில் அந்தப் பஃறிகள் தண்ணீர் அடித்துக்கொண்டு ஓடாமல் இருப்பதற்காகக் கட்டப்பட்டிருந்தன.


கழி சூழ் படப்பை, கலி யாணர்ப்,

பொழில் புறவின் பூந்தண்டலை,

மழை நீங்கிய மா விசும்பில்

மதி சேர்ந்த மக வெண் மீன் 35

உரு கெழு திறல் உயர் கோட்டத்து,

முருகு அமர் பூ முரண் கிடக்கை

வரி அணி சுடர், வான் பொய்கை,

இரு காமத்து இணை ஏரி,

உப்பங்கழி, உழுநிலம், பொழில், புறவு, பூஞ்சோலை ஆகியவற்றைக் கொண்டது புகார் நகரம். மகர வெண்மீனைக் கொடியில் கொண்டவன் காமவேள். மழைமேகம் இல்லாத வானத்தில் மக(ர) வெண்மீன் தெரியும். காமவேள் கோட்டம், நிலாக்கோட்டம், குமர கோட்டம் ஆகிய கோயில்கள் மணக்கும் பூக்கள் கொண்ட அந்தச் சோலைப் பகுதியில் இருந்தன. காமவேள் கோட்டத்தில் இரண்டு குளங்கள் இருந்தன. ஒன்று ஆண் குளிக்கும் குளம். மற்றொன்று பெண் குளிக்கும் குளம். இதில் குளித்தால் பிரிந்திருக்கும் கணவன் மனைவியாகிய இருவர் காமமும் இணையுமாம். இடைக் குறிப்பு - சிலப்பதிகாரம் அமரர் தருக்கோட்டம் 1 கற்பகமரக் கோயில் வெள்யானைக் கோட்டம் 2 இந்திரன்-யானைக் கோயில் புகர்வெள்ளை நாகர்தம் கோட்டம் 3 நாக-தெய்வங்கள் இருக்கும் கோயில் உச்சிக்கிழான் கோட்டம் 4 சூரியன் கோயில் ஊர்க்கோட்டம் 5 குலதெய்வக் கோயில் வேல் கோட்டம் 6 வேல் கோயில் வச்சிரக் கோட்டம் 7 இந்திரனின் வச்சிரப்படைப் கோயில் புறம்பணையான் வாழ் கோட்டம் 8 ஊரின் புறத்தே ஊரை அணைத்துக் காக்கும் எல்லைத்தெய்வக் கோயில், நிக்கந்தக் கோட்டம் 9 அய்யனார் கோயில் \ (கந்தன் = துணைவன் \ காதன்மை கந்தா – திருக்குறள்) (நிக்கந்தன் = பற்று அற்றவன்) அருகன் கோயில், புத்தன் கோயிலுமாம் நிலாக் கோட்டம் 10 ஆகிய கோயில்கள் புகார் நகரத்தில் இருந்தன. மற்றும் கடலொடு காவிரி தலையலைக்கும் முன்றில் மடலவிழ் நெய்தலங்கானல் தடம் உள சோமகுண்டம் 1 நிலாக்குளம் சூரியகுண்டம் 2 துறை மூழ்கிக் காமவேள் கோட்டம் தொழுதார் கணவரோடு தாம் இன்புறுவர் உலகத்துத் தையலார் (சிலப்பதிகாரம் கனாத்திறம் உரைத்த காதை)


புலிப் பொறிப் போர்க் கதவின் 40

திருத் துஞ்சும் திண் காப்பின்,

புகழ் நிலைஇய மொழி வளர

அறம் நிலைஇய அகன் அட்டில்

சோறு வாக்கிய கொழுங் கஞ்சி

யாறு போலப் பரந்து ஒழுகி, 45

ஏறு பொரச் சேறாகி,

தேர் ஓடத் துகள் கெழுமி,

நீறு ஆடிய களிறு போல,

வேறுபட்ட வினை ஓவத்து

வெண் கோயில் மாசு ஊட்டும்: 50

திருமாவளவனின் வெள்ளை மாளிகை \ White house அரசனின் வெள்ளை மாளிகையின் கதவில் புலிச்சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும். அங்கே மொழி வளரப் பாடுபடுவோருக்கு உணவு வழங்கப்படும். புலிச் சின்னம் - திருமாவளவன் அரண்மனையின் கதவில் புலி உருவம் பொறிக்கப் பட்டிருந்தது. அரண்மனையில் செல்வம் பயன்படுத்த முடியாமல் தூங்கியது. மொழி வளர்க்கும் அறச்சாலை - தமிழ்மொழி நிலைபெற்ற புகழ் உடையது. அது மேலும் வளர்வதற்காக அறச்சாலை அமைக்கப்பட்டிருந்தது. சோறு – சேறு – நீறு \ - \ அறச்சாலையிலுள்ள சமையலறையில் சோறாக்கி வடித்த கஞ்சி ஆறுபோல ஓடியது. அங்கு யானைகள் போரிட்டதால் அதன் காலடியில் கஞ்சி ஓடிப் பாயும் மண் சேறாக மாறியது. அவ்வழியே தேர்கள் சென்றதால் சேற்றுமண் காய்ந்து பொடிமண் நீராக மாறியது. ஓவியம் - அரண்மனைச் சுவரில் கலைத்திற வேலைப்பாடுகளுடன் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தன. White house வெண்கோயில் - வெள்ளை மாளிகையாக விளங்கிய அரண்மனைச் சுவரிலிருந்த ஓவியங்களைத் தேர்த்துகள்களின் புழுதிகள் மாசுபடச் செய்தன.


தண் கேணித் தகை முற்றத்து,

பகட்டு எருத்தின் பல சாலை; 52

தவப் பள்ளி; தாழ் காவின்

அவிர் சடை முனிவர் அங்கி வேட்கும்

ஆவுதி நறும் புகை முனைஇ, குயில் தம் 55

மா இரும் பெடையோடு இரியல் போகி,

பூதம் காக்கும் புகல் அருங் கடி நகர்,

தூதுணம் புறவொடு துச்சில் சேக்கும்

விரிந்த சடைமுடி கொண்ட முனிவர்கள் தீ வளர்த்து வேள்வி செய்தனர். கேணிக்கரையின் முற்றத்தில் செய்தனர். திருமறைப் பாட்டுப் பாடிக்கொண்டு செய்தனர். பாட்டொலி மிடற்றிலிருந்து வந்தது. தாழ்ந்த காட்டுப் பகுதியிலிருந்த முனிவர்களின் தவப் பள்ளிகள் பலவாக இருந்தபடியால் அவை ‘பல்சாலை’ எனப் பெயர் பெற்றிருந்தன. வேள்விப் புகையை அங்கிருந்த குயில்கள் வெறுத்தன. தம் பெண்குயிலோடு பறந்து சென்றன. பூதம் காவல் புரியும் காப்புள்ள கோயில் பகுதிக்குச் சென்றன. அங்கே தங்கியிருந்த தூதுணம் புறாக்களோடு ஒதுக்கிடங்களில் தங்கின. குறிப்பு : இங்கே, பூதம் காவல் புரிகின்ற என்னும்பொழுது 'பூதச்சதுக்கம்' என்பது பற்றி அறியவேண்டியுள்ளது.

i) பொய் வேடதாரிகளையும், பொல்லாங்கு செய்வோரையும் ‘பூதம் புடைத்து உண்ணும் பூதச்சதுக்கம்’ ( சிலப்பதிகாரம் 5 - 134 ).

ii) பூதச் சதுக்கத்தில் ‘அரசன் வெல்க’ என்று பலி கொடுத்தனர். ( மணிகேகலை 7 - 78 )

iii) புகார் நகரத்தில் காயசண்டிகாயை அவளது கணவன் காஞ்சணன் தேடிய இடங்கள் பூதச்சதுக்கம், பூமரச்சோலை, மன்றம் , பொதியில் (மணிமேகலை 20 - 22)

iv) கணவனை அன்றி வேறு தெய்வத்தைத் தொழாத கற்புக்கரசி மருதியின் அழகில் மயங்கிய ககந்தன் மகன் தன் ஆசைக்கு இணங்கும்படி மருதியை அழைத்தான். ‘பிறர் நெஞ்சு புகுந்தேன் என்னைக் கொன்றுவிடு’ என்று மருதி சதுக்கப் பூதத்திடம் முறையிட்டாள். அப் பூதம் அவளது கற்பை எண்ணி அவளை உண்ண மறுத்து விட்டது.

( மணிமேகலை 22 – 55 )


முது மரத்த முரண் களரி;

வரி மணல் அகன் திட்டை, 60

இருங் கிளை, இனன் ஒக்கல்,

கருந் தொழில், கலி மாக்கள்

கடல் இறவின் சூடு தின்றும்,

வயல் ஆமைப் புழுக்கு உண்டும்,

வறள் அடும்பின் மலர் மலைந்தும் 65

புனல் ஆம்பல் பூச் சூடியும்,

நீல் நிற விசும்பின் வலன் ஏர்பு திரிதரும்

நாள்மீன் விராஅய கோள்மீன் போல

மலர் தலை மன்றத்துப் பலர் உடன் குழீஇ,

கையினும் கலத்தினும் மெய் உறத் தீண்டி, 70

பெருஞ் சினத்தால் புறக்கொடாஅது,

இருஞ் செருவின் இகல் மொய்ம்பினோர்,

கல் எறியும் கவண் வெரீஇப்,

புள் இரியும் புகர்ப் போந்தை;

பறழ்ப் பன்றி, பல் கோழி, 75

உறைக் கிணற்றுப் புறச் சேரி,

மேழகத் தகரொடு சிவல் விளையாட

காவிரிப்பூம்பட்டினத்தில் கையாலும், கருவிகளாலும் மோதி, கவண் எறிந்து போர்ப்பயிற்சி பெறும் முரண்-களரி இருந்தது. இது வீர விளையாட்டுக்களின் பயிற்சிக்களம். முதிர்ந்த மரங்கள் சூழ்ந்த ஆற்றோர மணல்திட்டில் ‘முரண்களரி’ எனப்பட்ட போர்ப் பயிற்சிக்களம் இருந்தது. ( கருந்தொழில் : போர்த்தொழில் ). மக்களின் சுற்றத்தார் தங்களுக்குள்ளே மோதி ஆரவாரத்துடன் போர்ப்பயிற்சி செய்து கொண்டனர். கடலில் பிடித்த இறால் மீனைச் சுட்டுத் தின்றனர். வயலில் பிடித்த ஆமைக் கறியை வேகவைத்துத் தின்றனர். அடையாளம் தெரிவதற்காக ஒருவர் மணல் மேட்டில் பூக்கும் அடும்பு மலரைத் தலையில் அணிந்திருந்தார். மற்றொருவர் நீரில் பூக்கும் ஆம்பல் மலரை மாலையாகக் கட்டிப் போட்டுக் கொண்டிருந்தார். “நாள் மீன்’ என்னும் சூரியன் போல் நடுவர் நடுவில் இருந்தார். சூரியனைச் சுற்றிக் கோள்கள் சுழல்வது போல் போர்ப்பயிற்சிகள் நடந்தன. மலரும் தலைமுறையினரின் (இளைஞர்களின்) மன்றம் அந்த முரண்களரி. மற்போர், குத்துச் சண்டை போன்ற சண்டைப் பயிற்சிகளில் காயால் மோதிக்கொண்டனர். இகல் என்பது விளையாட்டுக்காக மாறுபடுதல். அழிக்கும் பகை அன்று. உடலின் திணவைக் காட்டுவது இகல். ஆகையால் சினங்கொண்டு பின்வாங்காமல் தாக்கினர். கவணில் கல்லை வைத்து எறிந்து தாக்குவது. அக்காலப் போர் முறைகளில் ஒன்று. இதில் அவர்கள் பயிற்சி செய்தபோது வீசிய கற்களால் பனை மரத்திலிருந்த பறவைகள் பறந்தோடிச் சென்றன. அந்தப் பனை மரத்தடியில் செம்மறியாட்டுக் கடாவையும், சிவல் என்னும் காடைகளையும் மோதவிட்டு அவற்றின் சண்டையைப் பாரத்துக் கொண்டிருந்தனர்.


கிடுகு நிரைத்து, எஃகு ஊன்றி,

நடு கல்லின் அரண் போல,

நெடுந் தூண்டிலில் காழ் சேர்த்திய 80

குறுங் கூரைக் குடி நாப்பண்;

நிலவு அடைந்த இருள் போல,

வலை உணங்கும் மணல் முன்றில்;

வீழ்த் தாழைத் தாள் தாழ்ந்த

வெண் கூதாளத்துத் தண் பூங் கோதையர், 85

சினைச் சுறவின் கோடு நட்டு,

மனைச் சேர்த்திய வல் அணங்கினான்,

மடல் தாழை மலர் மலைந்தும்;

பிணர்ப் பெண்ணைப் பிழி மகிழ்ந்தும்;

புன் தலை இரும் பரதவர் 90

பைந் தழை மா மகளிரொடு,

பாய் இரும் பனிக் கடல் வேட்டம் செல்லாது,

உவவு மடிந்து, உண்டு ஆடியும்;

நிலா வெளிச்சத்தில் ஆணும் பெண்ணுமாகப் பரதவர் உண்டும் ஆடியும் மகிழ்வர். காதல் விளையாட்டுகள் கூரைவீடுகளின் இடையே வேல் நட்டுக் கேடயம் மாட்டப்பட்டிருந்தது. வயிரம் பாய்ந்த மரக்கொம்புகளை நட்டு அதில் மீன்வலையைக் காய வைத்திருந்தனர். இது நடுகல் அரண் போல் விளங்கியது. வலை விரித்த மணல் அவர்களுக்கு மெத்தை. இங்கிருந்த தாழைமரத்து அடியில்-தான் காதலர்களின் களியாட்டங்கள் நிகழ்ந்தன. பூச்சூடல் மகளிர் கூதாளம் பூவைத் தலையில் சூடிக் கொண்டிருந்தனர். மனையணங்கு வழிபாடு நிறைமதி நாளும் மறைமதி நாளும் ‘உவா’ எனப்படும். அந்த நாள்களில் கடலின் கொந்தளிப்பு அதிகமாக இருக்கும். எனவே அந்த இரண்டு நாள்களிலும் பரதவர் கடலில் மீன் பிடிக்கச் செல்வதில்லை. அவரவர் மனைவிமாருடன் கூடி மனையில் அணங்குவிழாக் கொண்டாடுவர் அணங்குவிழா நாளில் வீட்டில் சினையுற்றிருக்கும் சுறாமீன் கொம்பு ஒன்றில் குத்தி நடப்பட்டிருக்கும். காதலர் உண்டு களித்து உடலுறவு கொள்வதைக் காட்டும் அடையாளச் சின்னம் சுறாமீன் கொம்பு. இது மனையில் நடப்பட்டிருந்தால் அம்மனைக்குள் வேறு யாரும் செல்லமாட்டார்கள். பூ மாற்றம் மற்ற நாட்களில் கூதாளம் பூவைச் சூடிக்கொள்ளும் மீனவப் பெண்கள் அணங்குவிழா நாளில் தாழம் பூவைத் தலையில் சூடிக்கொள்வர் பனைக்கள் கடலுக்குள் செல்லும்போது கள் பருகாத பரதவர் அணங்கு நாளில் பனங்கள்ளைப் பருகுவர். ஆடை மாற்றம் பிற நாட்களில் நூலாடை உடுத்தியிருந்த பரதவப் பெண்கள் அந்த நாட்களில் தழையாடை அணிவர்.

( உண்டாட்டு : வெட்சித்திணையின் துறைகளில் ஒன்றாகத் தொல்காப்பியம் குறிப்பிடும். உண்டாட்டு கூடிக் களிக்கும் புறத்திணையின் பாற்பட்டது. ( புறத்திணையியல் 2 ) இங்குக் கூறப்படும் உண்டாட்டு காதல் இருவர் களிப்புடன் தனிமையில் ஆடுவது.


புலவு மணல், பூங் கானல்,

மா மலை அணைந்த கொண்மூப் போலவும், 95

தாய் முலை தழுவிய குழவி போலவும்,

தேறு நீர்ப் புணரியோடு யாறு தலைமணக்கும்

மலி ஓதத்து ஒலி கூடல்,

தீது நீங்க, கடல் ஆடியும்;

மாசு போக, புனல் படிந்தும்; 100

அலவன் ஆட்டியும்; உரவுத் திரை உழக்கியும்;

பாவை சூழ்ந்தும்; பல் பொறி மருண்டும்;

அகலாக் காதலொடு பகல் விளையாடி

காவிரி ஆறு கடலில் கலக்கும் கூடல்நிலம் கொண்டது புகார் நகரம். மலையைத் தழுவும் மேகம் போல அங்குக் காவிரி கடலைத் தழுவியது. தாயைத் தழுவும் குழந்தையைப் போலக் காவிரி கடலைத் தழுவியது. புலவுமணல் வைகறையில் தனித்துக் கூடிய காதலர் மாலையில் பொது இடமாகிய கருவாட்டு நாற்றம் வீசும் மணல் பரப்பில் விளையாடுவர். கடலாடல் \ புனலாடல் கடலில் குளித்தால் செய்த தீமைகள் அகலும் என்று நம்பினர். என்றாலும் உப்பு உடலில் படிந்துவிடும் அல்லவா? அதனைப் போக்க நன்னீர் ஓடும் ஆற்றில் குளித்தனர். நண்டு விளையாட்டு கடல் நண்டுகளை கடலோர மணலில் அங்குமிங்கும் ஓடச்செய்து அதனைப் பார்த்து மகிழ்ந்தனர். திரை விளையாட்டு கடலலைகளில் நின்றும், ஓடியும், ‘நீரா, நிலமா’ என்று தொடச் சொல்லியும் விளையாடி மகிழ்ந்தனர். இது மணல்பாவை இப்படிப் பாவை செய்து காவிரிப்பூம்பட்டின மணலில் விளையாடினர் பாவை விளையாட்டு மணலில் புடைப்போவியப் பொம்மை செய்து விளையாடினர். பொறி விளையாட்டுக் காணல் மிதக்கும் பொருள்களைக் கடலலையில் போட்டால் அது கரைக்கு வந்துசேரும். இவ்வாறு மீள்வதைக் கண்டு களித்தல் பொறி விளையாட்டு. இது ஒருவகைக் கட்பொறி விளையாட்டு.


பெறற்கு அருந் தொல் சீர்த் துறக்கம் ஏய்க்கும்,

பொய்யா மரபின், பூ மலி பெருந் துறை, 105

துணைப் புணர்ந்த மட மங்கையர்

பட்டு நீக்கித் துகில் உடுத்தும்,

மட்டு நீக்கி மது மகிழ்ந்தும்,

மைந்தர் கண்ணி மகளிர் சூடவும்,

மகளிர் கோதை மைந்தர் மலையவும், 110

அங்கு ஆண்டு முழுவதும் மாறிமாறிப் பொய்க்காமல் பூத்துக் கொண்டேயிருக்கும் மரங்கள் இருந்தன. அந்த இடம் வீடுபேற்றுச் சுவர்க்கம் போன்றது. அங்கிருந்த வீடுகளில் மகளிர் காலத்திற்கேற்ற கோலம் பூண்டு கூடிக்களித்து இன்புற்றனர். கணவனோடு கூடித் திளைத்த மகளிர் வெளியிலோ, வீட்டிலோ கூடித் திளைக்கும்போதும், வெளியில் உலாவும்போதும் முறையே பருத்தித்துணி உடுத்தியும், பட்டாடை உடுத்தியும் மகிழ்ந்தனர். மட்டு ( சுவைநீர் ) மதுமகிழ் ( களிப்புநீர் ) பருகல் வெளியில் உலாவும்போது மயக்கம் தராத மட்டுகள்ளைப் பருகியவர்கள் கூடித் திளைக்கும்போது மதுக்கள்ளை உண்டு மகிழ்ந்தனர். மாலை மாற்று விளையாட்டு மைந்தர் தலையில் சூடியிருந்த கண்ணி மகளிர் தலைக்கு மாறிவிட்டது. மகளிர் கழுத்தில் அணிந்திருந்த மாலை மைந்தர் கழுத்துக்கு மாறிவிட்டது.


நெடுங் கால் மாடத்து, ஒள் எரி நோக்கி,

கொடுந் திமில் பரதவர் குரூஉச் சுடர் எண்ணவும்,

பாடல் ஓர்த்தும், நாடகம் நயந்தும்,

வெண் நிலவின் பயன் துய்த்தும்,

கண் அடைஇய கடைக் கங்குலான், 115

மாஅ காவிரி மணம் கூட்டும்

தூ எக்கர்த் துயில் மடிந்து

பாரிமகளிர் கூரைமீது ஏறி நின்று உப்புவண்டிகளை எண்ணியதை இங்கு நினைவுபடுத்திக்கொள்ளலாம் நிலாமுற்றத்தில், உயர்ந்த கால் நட்டுக் கட்டப்பட்டிருந்த மாடங்களில் கூடிக் களித்த காதலர் கடலில் விளக்கு ஒளியோடு மீன் பிடித்துக் கொண்டிருக்கும் திமில்களில் எரிந்த விளக்கொளிகளை எண்ணிக் கணக்குப் போட்டு மகிழ்ந்து கொண்டிருந்தனர். காவிரி மணலில் வெண்ணிலாவின் பயனைத் துய்த்துக் கொண்டிருந்த மக்கள் அங்கு மேடையில் இருந்து பாடப்பட்ட பாட்டுகளைக் கேட்டு மகிழ்ந்தனர். நாடகங்களைக் கண்டு மகிழ்ந்தனர். பார்த்துக்கொண்டும், கேட்டுக்கொண்டும் அந்த மணல் வெளியிலேயே தூங்கிவிட்டனர்.


வால் இணர் மடல் தாழை

வேல் ஆழி வியன் தெருவில்,

நல் இறைவன் பொருள் காக்கும் 120

தொல் இசைத் தொழில் மாக்கள்,

காய் சினத்த கதிர்ச் செல்வன்

தேர் பூண்ட மாஅ போல,

வைகல்தொறும் அசைவு இன்றி,

உல்கு செயக் குறை படாது 125

உல்கு என்பது சுங்கவரி. புகார்த் துறைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களுக்கு உல்குவரி வாங்கப்பட்டது. உல்குவரி பெறப்பட்டதற்கான முத்திரையும் பொருளின்மீது இடப்பட்டது. இப்படி முத்திரையிட்டு மாளாத அளவுக்குப் பொருள்கள் குவிந்து கிடந்தன. இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள் தெருக்களில் குவிந்துகிடந்தன. வெண்ணிற மடல்களை உடைய தாழைமரங்கள் மண்டிக்கிடந்த தெருக்கள் அவை. அப்பொருள்களில் அரசனுக்குச் சொந்தமான பொருள்களை ‘இறைவன் தொழில் மாக்கள்’ காவல் புரிந்தனர். வேலேற்றிய வண்டி அப் பொருள்களைக் காக்கும் இடங்களில் நிறுத்தப்பட்டிருந்தது. சூரியனாம் தேரை இழுத்துச் செல்லும் குதிரை போல நாள்தோறும் பகல் முழுவதும் உல்கு செய்யப்பட்டது. உல்கு செய்யச் செய்ய உல்கு செய்யப்படாத பொருள்களின் இருப்பு குறையவே இல்லை.


வான் முகந்த நீர் மலைப் பொழியவும்,

மலைப் பொழிந்த நீர் கடல் பரப்பவும்,

மாரி பெய்யும் பருவம் போல

நீரினின்றும் நிலத்து ஏற்றவும்,

நிலத்தினின்று நீர்ப் பரப்பவும், 130

அளந்து அறியாப் பல பண்டம்

வரம்பு அறியாமை வந்து ஈண்டி,

காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதி கடலிலிருந்து மேகம் முகந்து சென்ற நீர் மலையில் பொழிவது போல நீரிலிருந்து பொருள்கள் நிலத்தில் ஏற்றப்பட்டன. மலையில் பொழிந்த நீர் கடலுக்கு வந்து பரவுவது போல நிலத்திலிருந்து பொருள்கள் நீரிலுள்ள நாவாயில் பரப்பப் பட்டன. அந்தப் பண்டங்கள் அளந்தறிய முடியாதபடி பற்பலவாகக் குவிந்துகொண்டிருந்தன.


அருங் கடிப் பெருங் காப்பின்,

வலியுடை வல் அணங்கின் நோன்

புலி பொறித்து, புறம் போக்கி, 135

மதி நிறைந்த மலி பண்டம்

பொதி மூடைப் போர் ஏறி,

ஏற்றுமதிக்காகவும், இறக்குமதியிலிருந்தும் வந்த மதிப்பு மிக்க பொருள்களின்மீது புலிச் சின்னம் பொறிக்கப்பட்டது. பின்னர் அவை பொதிமூட்டைகளாகக் கட்டிக் காப்பகத்தில் அடுக்கப்பட்டன. உடல் வலிமையைக் கண்ட மாத்திரத்திலேயே அச்சம் தரும் காவலாளிகள் அவற்றைப் பாதுகாத்தனர்.


மழை ஆடு சிமைய மால் வரைக் கவாஅன்

வரை ஆடு வருடைத் தோற்றம் போல,

கூர் உகிர் ஞமலிக் கொடுந் தாள் ஏற்றை 140

ஏழகத் தகரோடு உகளும் முன்றில்

மழைமேகங்கள் விளையாடும் மலையுச்சியிலும் மலையிடைப் பிளவுகளிலும் வருடை என்னும் வரையாடு ஏறி விளையாடுவது போல வேட்டையாடும் ஆண் நாய்களும், முட்டித் தாக்கும் செம்மறியாட்டுக் கடாக்களும் முற்றங்களில் அடுக்கியுள்ள மூட்டைகளின் மேல் ஏறித் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தன.


குறுந் தொடை நெடும் படிக்கால்

கொடுந் திண்ணை, பல் தகைப்பின்,

புழை, வாயில், போகு இடைகழி,

மழை தோயும் உயர் மாடத்து 145

சேவடி, செறி குறங்கின்,

பாசிழை, பகட்டு அல்குல்,

தூசு உடை, துகிர் மேனி,

மயில் இயல், மான் நோக்கின்,

கிளி மழலை, மென் சாயலோர் 150

வளி நுழையும் வாய் பொருந்தி,

ஓங்கு வரை மருங்கின் நுண் தாது உறைக்கும்

காந்தள் அம் துடுப்பின் கவிகுலை அன்ன,

செறி தொடி முன்கை கூப்பி, செவ்வேள்

வெறி ஆடு மகளிரொடு செறியத் தாஅய், 155

மூட்டைகள் அடுக்கிக் கிடக்கும் பகுதியை அடுத்து மாடி வீடுகள். அதற்கு வளைந்த தாழ்வாரம் இறக்கிய திண்ணை. திண்ணைக்கு ஏற நீண்ட சிறுசிறு படிக்கட்டுகள். மேல்மாடி வீட்டுக்கு நுழைந்தேறக் குகை போன்ற வாயில். அதன் வழியே ஏறிச்சென்றால் ‘போகிடைக் கழி’. இது அதற்கு வழி நுழையும் வாயில். மாடியில் மகளிர் குரவை விளையாடும் காட்சி தெரிகிறது. அந்தச் சாயல் அழகியர்களுக்குச் சிவந்த காலடிகள். நெருங்கிய தொடைகள். பசுமையான தழையாடை மூடிப் பகட்டிக்கொண்டிருக்கும் அல்குல். மயிலின் சாயலையுடைய அவர்களின் பவளம் போன்ற மேனியில் பட்டாடை. மான்போல் மருண்ட பார்வை. கிளிபோல் மழலைமொழி. பூப் போல் மென்மையாகத் தோன்றும் மேனிச் சாயல். இவர்கள் கைகூப்பி வெறிநடனம் ஆடினர். அது மலைமுகட்டில் மலர்த் தாதுகளைக் கொட்டிக்கொண்டு கொடியோடு கூடிய காந்தள் பூ காற்றில் ஆடுவது போல் இருந்தது.

‘போகிடைக்கழி’ = மாடி வீட்டுக் கூடம்.

'வளி நுழையும் வாயில்' = காற்று வரும் வழி - திறந்தவெளிச் சன்னல்.


குழல் அகவ, யாழ் முரல,

முழவு அதிர, முரசு இயம்ப,

விழவு அறா வியல் ஆவணத்து

முழவின் ஓசை அதிர்ந்தது. முரசின் ஓசை ஏதோ சொல்வதுபோல் இருந்தது. இந்த விழா முழக்கத்தின் ஒலி கடைத்தெருவிலும் முழங்கிற்று.


மை அறு சிறப்பின் தெய்வம் சேர்த்திய

மலர் அணி வாயில் பலர் தொழு கொடியும்; 160

தெய்வத்தை வைத்து மலர்ப்பூசை செய்யும் கோயில் வாயிலில் வழிபாடு செய்யும் பலரும் போற்றிப் புகழும் கொடி பறந்தது. தெய்வ உருவம் எழுதப்பட்ட எழுப்பட்ட கொடி பறக்க விடப்பட்ட கம்பத்தை இக்காலத்தில் 'துவஸ்தம்பம்' என்று அழைக்கின்றனர்.


வரு புனல் தந்த வெண் மணல் கான் யாற்று

உரு கெழு கரும்பின் ஒண் பூப் போல,

கூழுடைக் கொழு மஞ்சிகை,

தாழுடைத் தண் பணியத்து,

வால் அரிசிப் பலி சிதறி, 165

பாகு உகுத்த, பசு மெழுக்கின்,

காழ் ஊன்றிய கவி கிடுகின்

மேல் ஊன்றிய துகில் கொடியும்;

கம்பத்தின் ஓரத்தில் வேல் ( ‘காழ்’ ) நட்டுக் கேடயம் மாட்டப் பட்டிருந்தது. இங்கும் கொடி பறந்தது. இவை படைவீரர்களுக்கும், காவல்-தொழில் புரிவோருக்கும் சோறு வழங்கும் அறச்சாலை எனக் காட்டும் கொடிகள்.


பல் கேள்வித் துறை போகிய

தொல் ஆணை நல் ஆசிரியர் 170

உறழ் குறித்து எடுத்த உரு கெழு கொடியும்;

பட்டிமன்றக் கொடி ‘ஆணை’ என்பது வாய்மை. ‘கேள்வி’ என்பது கேட்டுக் கேட்டு வளர்த்துக்கொண்ட அறிவு. வழிவழியாக வரும் வாய்மைக் கருத்துகளைக் கேட்டுக் கேட்டு மெய்ப்பொருள் காட்சியில் துறைபோய பெருமக்கள் தான் ‘தொல்லாணை நல்லாசிரியர்’ (Ancient philosophers). இவர்கள் தெளிவு பெறுவதற்காகக் கருத்துக்களால் முரண்பட்டு உரையாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதன் அடையாளமாகக் கொடி கட்டப்பட்டிருந்தது.


வெளில் இளக்கும் களிறு போல,

தீம் புகார்த் திரை முன்துறை,

தூங்கு நாவாய், துவன்று இருக்கை,

மிசைக் கூம்பின் நசைக் கொடியும்; 175

கடலில் கப்பலின் கொடி பறக்கும். முளையில் கட்டப்பட்டிருக்கும் களிறு போலப் புகார்த் துறைமுகத்தில் அசைந்தாடிக் கொண்டிருக்கும் நாவாயின் உச்சியில் கொடி கட்டப்பட்டிருந்தது.

வெளில் = விலங்குகளைக் கயிற்றில் தொடுத்துக் கட்டிவைக்கும் முளைக்குச்சி .


மீன் தடிந்து, விடக்கு அறுத்து,

ஊன் பொரிக்கும் ஒலி முன்றில்,

மணல் குவைஇ, மலர் சிதறி,

பலர் புகு மனைப் பலிப் புதவின்

நறவு நொடைக் கொடியோடு; 180

மீன் விற்குமிடம், நறவுக்கள் விற்குமிடம் எனக் காட்டும் கொடிகள் காவிரிப்பூம்பட்டினத்தில் பறக்கும் கள்ளுக்கடையின் கொடி பெரிய மீன்களை வெட்டி, அதன் நச்சுப்-பகுதிகளை நீக்கிவிட்டு மீன்கறியைப் பொறித்துத் தந்தனர். அந்த மணல்மேட்டு முற்றத்தில் மீன் கவிச்சல் போக மலர்களைத் தூவி வைத்திருந்தனர். அங்கே நறவுக்கள் விற்கும் கடை இருந்தது. பலர் உள்ளே செல்லும் அந்தக் கள்ளுக்கடையின் கதவில் “பலியாவீர்’ என்று காட்டும் அடையாளக் குறி பொறிக்கப்பட்டிருந்தது. அந்த இடங்களில் விற்பனையை அறிவிக்கும் தனித்தனிக் கொடிகள் பறந்தன.

முக்கியமான குறிப்பினைக் கவனித்தல் வேண்டும். விடு > விடம் > விடக்கு = உயிரை விடுவிக்கும் பொருள் – சங்ககாலத் தமிழ்ச்சொல். விஷம் என்னும் சொல்லிலிருந்து வந்தது அன்று.


பிற பிறவும் நனி விரைஇ,

பல் வேறு உருவின் பதாகை நீழல்

செல் கதிர் நுழையாச் செழு நகர் வரைப்பின்

செல்லா நல் இசை அமரர் காப்பின்,

தேவர் உலகம் போன்ற ஊராகக் காவிரிப்பூம்பட்டினத்துத் துறைமுக நகரம் விளங்கியது இந்தக் கொடிகளேயன்றி பிறபிற கொடிகளும் பல்வேறு உருவங்களில் பறந்து வெயில் நுழையாத நிழலை உண்டாக்கியது. புகார் நகரம், அமரர் காக்கும் நகரமாக விளங்கியது. அதன் நற்பெயர் என்றென்றும் விலகிச் செல்வதில்லை.


நீரின் வந்த நிமிர் பரிப் புரவியும், 185

காலின் வந்த கருங் கறி மூடையும்,

வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்,

குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்,

தென் கடல் முத்தும், குண கடல் துகிரும்,

கங்கை வாரியும், காவிரிப் பயனும், 190

ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும்,

அரியவும், பெரியவும், நெரிய ஈண்டி,

வளம் தலைமயங்கிய நனந் தலை மறுகின்

போர்க்குதிரை - கடல் வழியே இறக்குமதி செய்யப்பட்டவை.

மிளகு மூட்டை - தரைவழியே வண்டிகளில் வந்தவை.

மணி, பொன் - வடமலைப் பகுதியிலிருந்து வந்தவை.

சந்தனம் - மேற்கிலுள்ள சேரரின் குடமலையில் பிறந்தவை.

அகில் - மேற்கிலுள்ள சேரரின் குடமலையில் பிறந்தவை.

முத்து - பாண்டியரின் தென்கடலில் பிறந்தது.

பவளம் - சோழ நாட்டுக் குணகடலில் பிறந்தது.

வாரி (விளைச்சல் வருவாய்) - கங்கைச் சமவெளியிலிருந்து வந்தவை.

பயன் : விளைச்சலை விற்று வந்த பயன் - காவிரிப் படுகை விளைச்சலை விற்றுப் பெற்றவை.

உணவு ( பதப்படுத்தப் பட்டவை) - ஈழத்திலிருந்து வந்தவை.

காழகம் = பர்மாவிலிருந்து வந்தவை.

இப்படிப்பட்ட கிடைத்தற்கரிய பொருள்களும் விலைமதிப்பு மிக்க பெரும் பொருள்களும் புகார் நகரின் வளமாக, அங்குமிங்குமாக எங்கும் ஒன்றோடொன்று மயங்கி முறைப்படுத்தப் படாமல் கிடந்தன.


நீர் நாப்பண்ணும் நிலத்தின் மேலும்

ஏமாப்ப இனிது துஞ்சி, 195

கிளை கலித்துப் பகை பேணாது,

வலைஞர் முன்றில் மீன் பிறழவும்,

விலைஞர் குரம்பை மா ஈண்டவும்,

பெருகிக் கிடக்கும் நிம்மதியான வாழ்க்கை நீருக்கிடையே நாவாயிலும் தூங்கலாம். நிலத்தில் எங்கு வேண்டுமானாலும் தூங்கலாம். என்று விரும்பிய இடத்தில் இன்பமாக நாட்டு மக்கள் உறங்கினர். சுற்றம் செழித்தது. பகையைப் பற்றி யாரும் கவலைப் படவில்லை. வலைவீசுவோரின் நீர் முற்றத்தில் மீன்கள் மிகுதியாகப் புரண்டன. குதிரை விற்போரின் குடிசைப் பகுதியில் நாவாயில் வந்து இறங்கிய குதிரைகள் பெருகின.


கொலை கடிந்தும், களவு நீக்கியும்,

அமரர்ப் பேணியும், ஆவுதி அருத்தியும், 200

நல் ஆனொடு பகடு ஓம்பியும்,

நான் மறையோர் புகழ் பரப்பியும்,

பண்ணியம் அட்டியும், பசும் பதம் கொடுத்தும்,

புண்ணியம் முட்டாத் தண் நிழல் வாழ்க்கை,

குடிமக்களின் அறநெறி வாழ்க்கை, குடிமக்களுக்கு நிம்மதி எங்கிருந்து வந்தது? அவர்களின் வாழ்க்கைப் பாங்கிலிருந்து வந்தது. வாழ்க்கைப் பாங்கு எப்படி இருந்தது? கொலைத்தொழிலை அவர்கள் வெறுத்து ஒதுக்கினார்கள். களவுத்தொழிலை அவர்கள் இல்லாமல் செய்துவிட்டார்கள். தேவர்களைப் பேணிப் பாதுகாத்தனர். தேவர்களுக்கு வேள்வி உணவை ஊட்டினர். பால்மாடுகள் மட்டுமல்லாமல் காளைமாடுகளையும் அவர்கள் பேணிவந்தனர். நான்மறையாளர்களின் புகழைப் பரப்பினர். பசித்தவர்களுக்கு உணவு படைக்கும் போது சுட்ட பலகாரங்களையும் சேர்த்துப் படைத்தனர். இப்படியெல்லாம் வாழ்வதுதான் புண்ணியம் என்று கருதினர். இப்படிப்பட்ட வாழ்க்கையில் முட்டுப்பாடு இல்லாமல் பிறருக்கு ஈரநிழல் தந்து வாழ்ந்து வந்தனர்.


கொடு மேழி நசை உழவர் 205

நெடு நுகத்துப் பகல் போல,

நடுவு நின்ற நல் நெஞ்சினோர்,

வடு அஞ்சி, வாய் மொழிந்து,

தமவும் பிறவும் ஒப்ப நாடி,

கொள்வதூஉம் மிகை கொளாது,

கொடுப்பதூஉம் குறை கொடாது, 210

பல் பண்டம் பகர்ந்து வீசும்,

பகலாணி போல் வாணிகம் நடந்தது என்றால், "கொள்வது ஒரு மாடு, கொடுப்பது ஒரு மாடு என்றால் ஒரு மாடு முன்னும் மற்றொரு மாடு பின்னும் நடந்தாலும் நுகத்தில் இழுவை மையமாகிய பகலாணி மாறாது". அதுபோல வாணிகம் நடைபெற்றது. வணிகர் அறம் உழவரின் ஏரில் இரண்டு மாடுகள் பூட்டிய நுகத்தின் நடுவில் இருக்கும் பகலாணி போல நடுவுநிலை கொண்ட நன்னெஞ்சோடு வணிகர்கள் வாணிகம் செய்தனர். தமக்குப் பழி வந்துவிடுமோ என்னும் அச்சத்தோடு சொன்னசொல் மாறாமல் வாய்மையையே பேசினர். தாம் கொடுக்கும் பொருளையும், தாம் பிறரிடமிருந்து விலையாக வாங்கும் பொருளையும் ஒத்த நிறையுடையதாகக் கருதினர். எனவே மதிப்புக்கு அதிகமாக வாங்குவதோ, குறையாகக் கொடுப்பதோ அவர்களின் வாழ்க்கையில் இல்லை.

இதுவரை உருத்திரங்கண்ணனார் புறத்திணையில் அமைத்து வந்தார். இனி, இப்பாடலை அகத்திணையாக்கிப் பாடுகிறார்!


தொல் கொண்டி, துவன்று இருக்கை

பல் ஆயமொடு பதி பழகி,

வேறு வேறு உயர்ந்த முது வாய் ஒக்கல்

சாறு அயர் மூதூர் சென்று தொக்காங்கு, 215

மொழி பல பெருகிய பழி தீர் தேஎத்துப்

புலம் பெயர் மாக்கள் கலந்து, இனிது, உறையும்,

'தொல்கொண்டி’ என்பது மூதாதையரிடமிருந்து பெற்ற செல்வம். இவ்வகையில், செல்வம் பெற்று வாழும் பல்வேறு ஆயத்தார் ஊரில் ஒன்றாகப் பழகி வாழ்ந்து வந்தனர். என்றாலும் அவர்கள் செல்வ நிலையில் வெவ்வேறு உயர்வுகளைப் பெற்றிருந்தனர். இப்படிப்பட்டவர்கள் விழாக் கொண்டாடும் ஊருக்கு ‘முதுவாய் ஒக்கல்’ என்று போற்றப்படும் புலவர், பாணர், கூத்தர் முதலானோர் சென்று கூடியிருப்பது போல. புகார் நகரத்தில் பல்வேறு மோழிகளைப் பேசும் மக்கள் வந்து தங்கிப் போய்க் கொண்டிருந்தனர். பன்மொழி பேசுவோரில் குற்றமற்ற சிலர் புகார் மக்களோடு கலந்து இனிமையாகத் தடையின்றிப் பழகி வாழ்ந்து வந்தனர்.


முட்டாச் சிறப்பின், பட்டினம் பெறினும்

வார் இருங் கூந்தல் வயங்குஇழை ஒழிய,

வாரேன்; வாழிய, நெஞ்சே! கூர் உகிர்க் 220

வார் இருங்கூந்தல் வயங்கிழை நெஞ்சே! இப்படிப்பட்ட காவிரிப்பூம்பட்டினமே எனக்குக் கிடைப்பதாயினும் என் காதலியை விட்டுவிட்டு வரமாட்டேன் என்கிறான், தலைவன். இச்செய்திதான் பாட்டின் பயனிலை. "பொருளும் அருளும், கலையும் காமமும், வளமும் மகிழ்வும் மலர்ந்து முட்டுப்பாடின்றி மண்டிக் கிடக்கும் புகார்ப் பட்டினமே கொடையாகவோ உழைப்பின் வழியாகவோ பெறுவதாக இருந்தாலும், நெஞ்சே! நான் சொல்வதைக் கேள்! நீண்ட கூந்தலையுடைய இந்தப் பெண்ணாகிய என்னவளைத் தனியே விட்டுவிட்டுப் பொருள் தேட உன்னுடன் வரமாட்டேன். பொருளையும் இவளையும் நினைக்கும் நெஞ்சே! நீ வாழி!" என்னும் தலைவனின் இக்கருத்துதான், "புறப்பொருளிலிருந்து அகத்திணைக்கு" மாறுகிறது. மேலும், பட்டினப்பாலை என்பதன் கருப்பொருளாக ( பயனிலை ) அமைகிறது.


கொடுவரிக் குருளை கூட்டுள் வளர்ந்தாங்கு,

பிறர் பிணியகத்து இருந்து, பீடு காழ் முற்றி;

அருங் கரை கவியக் குத்தி, குழி கொன்று,

பெருங் கை யானை பிடி புக்காங்கு,

நுண்ணிதின் உணர நாடி, நண்ணார் 225

செறிவுடைத் திண் காப்பு ஏறி, வாள் கழித்து,

உரு கெழு தாயம் ஊழின் எய்தி

வரிப்புலிக்குட்டி கூட்டில் வளர்ந்தது போல் கரிகால் சோழனின் இளமைக் காலம் அமைந்திருந்தது. குழியில் விழுந்த ஆண்யானை குழியின் கங்குக்கரையைச் சரித்து இடித்துக்கொண்டு மேடேறித் தன் பெண் யானையோடு சேர்ந்தது போல் கரிகால் சோழன் தன் ஆட்சியைப் பெற்றான். நுட்பமாக எண்ணிப் பார்த்துப் போரிடத் துணிந்தான். பகைவர் செறிந்திருக்கும் கோட்டையை முற்றுகையிட்டு அவர்களுடன் வாளேந்திப் போரிட்டுத் தனக்கு உரிமையாகிய தாய ஆட்சியைப் பெற்றான். இது அவனுக்குக் கிடைத்த முறையான ஊழ்வெற்றி.


பெற்றவை மகிழ்தல் செய்யான், செற்றோர்

கடி அரண் தொலைத்த கதவு கொல் மருப்பின்,

முடியுடைக் கருந் தலை புரட்டும் முன் தாள், 230

உகிருடை அடிய, ஓங்கு எழில் யானை,

வடி மணிப் புரவியொடு, வயவர், வீழ,

போர் வெற்றியால் கரிகால் சோழனுக்கு அரசு கிடைத்தது. அரசுத்தாயம் பெற்ற மகிழ்வோடு கரிகால் சோழன் இருந்துவிடவில்லை. அவனை அழிக்க முற்பட்டோரின் அரண்களைத் தொலைத்தான். சோழனின் யானை, அவனது பகைவரின் முடிபுனைந்த தலைகளைத் தன் முன்னங்கால் நகங்களால் புரட்டியது. பகைவரின் யானை, புரவி, வயவர் அனைவரும் வீழ்ந்தனர்.


பெரு நல் வானத்துப் பருந்து உலாய் நடப்ப,

தூறு இவர் துறுகல் போல, போர் வேட்டு,

வேறு பல் பூளையொடு உழிஞை சூடி, 235

கரிகால் சோழன், உழிஞைப் பூச் சூடிப் போருக்கெழுந்தான். உழிஞைப் பூவுடன் பல்வேறு பூளைப் பூக்களையும் சேர்த்துச் சூடியிருந்தான். இவன் போருக்கெழுந்ததும் ‘நல்ல இரை பெறலாம்’ என்று எண்ணி வானத்தில் பருந்துகள் உலா வந்தன. யானைமீது சென்ற இவன் பெரிய பாறாங்கல் போலவும், பருந்துகள் பறந்தன. பாறாங்கல்லில் படரும் பல்வேறு கொடிகள் போலவும் இருந்தன.


பேய்க் கண் அன்ன பிளிறு கடி முரசம்

மாக் கண் அகல் அறை அதிர்வன முழங்க,

முனை கெடச் சென்று, முன் சமம் முருக்கி,

தலை தவச் சென்று தண்பணை எடுப்பி,

இவனது காவல் முரசம் பேயின் கண்போல் இருந்தது. அதன் அகன்று விரிந்த பெரிய வாயில் எழுந்த முழக்கம் மலைப்பாறைகளில் எதிரொலித்தது. கரிகாலன் பகைவரின் முனைப்பைக் கெடுத்து முன்னேறினான். முன்னின்ற போராளிகளைத் திரியை முறுக்குவது போலச் சுழற்றி முறுக்கினான். வெற்றிக்குப் பின் தன் வெற்றிமுரசை

[ தண்பனை ] மக்களுக்குக் குளுமை தரும் ஓசையுடன் முழக்கினான்


வெண் பூக் கரும்பொடு செந்நெல் நீடி, 240

மா இதழ்க் குவளையொடு நெய்தலும் மயங்கி,

கராஅம் கலித்த கண் அகன் பொய்கை,

கொழுங் கால் புதவமொடு செருந்தி நீடி,

செறுவும் வாவியும், மயங்கி, நீர் அற்று,

அறு கோட்டு இரலையொடு மான் பிணை உகளவும்; 245

கரிகாலன் வெற்றிக்கு முன், பகைவரின் நாடு வளமுடன் செழித்திருந்தது. வயல்களில் கரும்பும் செந்நெல்லும், வாவிகளில் குவளையும் நெய்தலும், பொய்கையில் முதலைகள் என்று அதன் செழுமை இருந்தது.

இவனது வெற்றிக்குப் பின், வயல்களும் வாவிகளும் நீரற்று நிலம் திணைமயக்கம் எய்தி வறண்ட நிலத்தில் பூக்கும் புதவம் பூக்களும் செருந்திப் பூக்களும் பூக்கும் நிலையைப் பெற்றன. மக்கள் பயிர் செய்த நிலைமை மாறிக் கலைமான்களும் காட்டுமான்களும் விளையாடும் காடாக மாறியது.


கொண்டி மகளிர், உண்துறை மூழ்கி,

அந்தி மாட்டிய நந்தா விளக்கின்,

மலர் அணி மெழுக்கம், ஏறிப் பலர் தொழ,

வம்பலர் சேக்கும் கந்துடைப் பொதியில்,

பரு நிலை நெடுந் தூண் ஒல்கத் தீண்டி, 250

பெரு நல் யானையொடு பிடி புணர்ந்து உறையவும்;

கரிகாலன் வெற்றிக்கு முன், பகைவர் நாட்டில் அந்தி நேரம் வந்ததும் கொண்டி மகளிர் ஆற்றில் குளித்துவிட்டு வந்து ஊர்மன்றத்தை மெழுகிப் பூ வைத்து அங்கிருந்த தூணில் விளக்கேற்றினர். அவர்களும் அங்கு வரும் புதியவர்களும் மன்றிலிருந்த கந்திற் பாவையைத் தொழுதனர். கரிகாலன் வெற்றிக்குப் பின் வழிபட்ட அந்தத் தூண்கள் வெறுங் கல்லுத் தூணாக மாறியது. களிறும் பிடியும் புணர்ச்சிக்காலத்தில் அதில் உரசிக்கொள்ளும்படியும், உறைவிடங்களாகக் கொள்ளும்படியும் ஆயிற்று.


அரு விலை நறும் பூத் தூஉய், தெருவில்

முது வாய்க் கோடியர் முழவொடு புணர்ந்த

திரி புரி நரம்பின் தீந் தொடை ஓர்க்கும்

பெரு விழாக் கழிந்த, பேஎம் முதிர், மன்றத்து, 255

சிறு பூ நெருஞ்சியோடு அறுகை பம்பி,

அழல் வாய் ஓரி அஞ்சுவரக் கதிர்ப்பவும்;

அழு குரல் கூகையோடு ஆண்டலை விளிப்பவும்;

கணம் கொள் கூளியொடு கதுப்பு இகுத்து அசைஇ,

பிணம் தின் யாக்கைப் பேய் மகள் துவன்றவும்; 260

கரிகாலன் வெற்றிக்கு முன், அப்போது தெருவில் எப்போதும் விழாக்கொண்டாட்டம். தெரு வாசலில் பூக்களைத் தூவி மக்கள் முதுவாய்க் கோடியரை வரவேற்பர். முதுவாய்க் கோடியரின் யாழிசையும் முழவொலியும் தெருவெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கும். அவற்றை மக்கள் கேட்டு மகிழ்வர்.

கரிகாலன் வெற்றிக்குப் பின், இப்போது விழாத்தெருக்கள் பேய்மன்றங்களாக மாறிவிட்டன. பூத் தூவிய இடங்களில் நெருஞ்சிமுள் பூத்துள்ளது. அருகம்புல் பம்பிக் கிடக்கிறது. யாழொலி கேட்ட இடத்தில் குள்ளநரி ஊளையிடும் ஓசை கேட்கிறது. அழுகையொலி, கூகையின் குழறல், ஆண்டலையின் அழைப்பு, பிணம் தின்ற கூளிகள் அசைபோடும் அதவல், பிணம் தின்னும் பேய்மகளின் பித்தாட்டம் போன்றவை நிகழ்ந்தன.


கொடுங் கால் மாடத்து நெடுங் கடைத் துவன்றி,

விருந்து உண்டு ஆனாப் பெருஞ் சோற்று அட்டில்,

ஒண் சுவர் நல் இல் உயர் திணை இருந்து,

பைங் கிளி மிழற்றும் பால் ஆர் செழு நகர்,

தொடுதோல் அடியர் துடி படக் குழீஇ, 265

கொடு வில் எயினர் கொள்ளை உண்ட

உணவு இல் வறுங் கூட்டு உள்ளகத்து இருந்து,

வளை வாய்க் கூகை நன் பகல் குழறவும்;

அருங் கடி வரைப்பின் ஊர் கவின் அழிய,

கரிகாலன் வெற்றிக்கு முன், அன்று விருந்தூட்டிய பின் மிஞ்சிக் கிடக்கும் சோற்றை வளைவு வாயிலில் வைத்துக்கொண்டு வழங்கக் காத்திருந்த நல்ல இல்லங்களின் உயர்திணைப் பண்பு. அவ்விடங்களில் வளர்ப்புப் பச்சைக் கிளிகள் விருந்தினரை அழைக்கும் மழலைமொழி. மழலை மொழிக்குக் கைம்மாறாகப் பால் ஆர்த்தும் பாவையர் நிலை காணப்பட்டது.

கரிகாலன் வெற்றிக்குப் பின் அந்த இடங்களில் பாலைநிலத்து எயினர்களின் நடமாட்டம். செருப்பை வெளியில் கழற்றிவிட்டு அன்று நுழைந்த இல்லங்களில் இன்று அவர்கள் செருப்புக் காலோடு நடமாடுகின்றனர். அன்று கிளி மழலை கேட்ட இடங்களில் இன்று கூகையின் குழறல் ஒலி பகலிலேயே கேட்கிறது. உடுக்கடிக்கும் துடிப்பறை கேட்கிறது. அன்று விருந்தூட்டிய இடங்களில் இன்று கொள்ளையடித்த உணவைப் பங்கிட்டுக் கொள்கிறார்கள். அன்று காவலரின் காப்பகம், இன்று வேண்டாதவர்களின் விளையாட்டிடமாக மாறியது.


பெரும் பாழ் செய்தும் அமையான் 'மருங்கு அற 270

மலை அகழ்க்குவனே; கடல் தூர்க்குவனே;

வான் வீழ்க்குவனே; வளி மாற்றுவன்' என,

பகைவரின் அச்சம் இப்படித் திருமாவளவன் பகைவர் நாட்டைப் பாழாக்கியும் நிறைவு கொள்ளாமல் மேலும் போருக்கெழத் திட்டமிட்டுக் கொண்டிருந்தான். ‘இவன் மலையை வேரோடு தோண்டி எறிந்து விடுவான். கடலைத் தூர்த்து விடுவான். வானத்தை மண்ணில் விழச் செய்து விடுவான். காற்றின் திசையை மாற்றி விடுவான்’ என்றெல்லாம் எண்ணிக்கொண்டு பகையரசர்கள் கலங்கினர்.


தான் முன்னிய துறை போகலின்,

பல் ஒளியர் பணிபு ஒடுங்க,

தொல் அருவாளர் தொழில் கேட்ப, 275

வடவர் வாட, குடவர் கூம்ப,

தென்னவன் திறல் கெட, சீறி, மன்னர்

மன் எயில் கதுவும் மதனுடை நோன் தாள்,

மாத் தானை மற மொய்ம்பின்,

செங் கண்ணால் செயிர்த்து நோக்கி, 280

புன் பொதுவர் வழி பொன்ற,

இருங்கோ வேள் மருங்கு சாய

ஆற்றில் விரும்பிய துறையில் குளிப்பது போல கரிகால் சோழன், தான் விரும்பிய நாட்டின்மீது போர் தொடுத்தான். அதனால் அவனிடம் பகை கொள்ளாத அரசர்களும் அவன்பால் சாய்ந்தனர். ஒளியர்குடி அரசர் பலர் பணிந்து ஒடுங்கினர். பல்வேறு இடங்களில் வாழ்ந்தனர். அருவாளர் குடி அரசர்கள் கரிகால் சோழன் சொன்னதெல்லாம் கேட்டு நடந்தனர். மாவிலங்கை நகரைத் தலைநகராகக் கொண்டும் எயிற்பட்டினத்தைத் துறைமுகமாகக் கொண்டும் குடியினர் இவர்கள். வடவர் வாடினர் குடவர் சோர்ந்து குறுகியிருந்தனர். தென்னவன் திறமை செல்லுபடியாகவில்லை. பாண்டியர் சார்பு நிலையை விட்டுக் கரிகால் சோழனின் சார்பை உண்டாக்கிக் கொண்டான். இவன் பாரி மகளிரை மணந்து கொள்ள மறுத்தவன். ( புறம் 201 202 ). மன்னர்களின் கோட்டைகளை இடிக்கும் வலிமை கொண்ட பெரும்படை இவனிடம் இருந்தது. அதன் துணையுடன் கரிகால் சோழன், தன் சிவந்த கண்ணின் சினப்-பார்வையை வீசினான். அதனைக் கண்ட பொதுவர், கால்வழியே இல்லாமல் அழிந்துவிட்டனர்.

‘மலங்கே’ என்று தாலமி குறிப்பிடும் பாசூர் நாகர் ஒளியர் எனப்பட்டனர் என்று கனகசபை பிள்ளை ‘the Tamils 18 hundred years ago” என்னும் நூலில் குறிப்பிடுகிறார்.

கனகசபை பிள்ளை “The Tamils 18 hundred years ago” என்னும் நூலில் அருவாளர் பற்றித் தெளிவுபடுத்தியுள்ளார்.

குடவர் என்போர் குடநாட்டுச் சேரர்.

தென்னவன் என்பவன் பாண்டியன் இருங்கோவேள்.

பொதுவர் என்போர் பொதியில் என்றும், பொதுமீக்கூற்றம் என்றும் ( பொதியில், பொதுமீக் கூற்றம் – ஆய் நாடு – புறம் 135 ) போற்றப்படும் பாண்டிய நாட்டின் தென்பகுதியில் இருந்த பொதியமலைப் பகுதியில் ஆண்டுகொண்டிருந்த ஆய்குடி மக்கள்.


காடு கொன்று நாடு ஆக்கி,

குளம் தொட்டு வளம் பெருக்கி,

பிறங்கு நிலை மாடத்து உறந்தை போக்கி, 285

கோயிலொடு குடி நிறீஇ,

வாயிலொடு புழை அமைத்து,

ஞாயில்தொறும் புதை நிறீஇ,

பொருவேம் எனப் பெயர் கொடுத்து,

காடுகளை அழித்து விளைநிலங்களாக மாற்றினான். மழைநீர் தேங்கும் குளங்கள் அமைத்து நீர் வளத்தைப் பெருக்கினான். உறையூரில் புதிய கோட்டையைக் கட்டினான். அதில் அலுவலரைக் குடியேற்றினான். வாயில், பதுங்கும் புழையறை, மதில் மேலிருந்து அம்பு எய்யும் ஞாயில், அதன் அருகில் படைக்கலப் புதையல் வைக்கும் புதையிடம் போன்ற அமைப்புகளைக் கோட்டையில் நிறுவினான். ‘போரிடுவேன்’ என்று தன்னைப் பறைசாற்றிக் கொண்டான்.


ஒருவேம் எனப் புறக்கொடாது, 290

திரு நிலைஇய பெரு மன் எயில்,

மின் ஒளி எறிப்பத் தம் ஒளி மழுங்கி,

விசி பிணி முழவின் வேந்தர் சூடிய

பசு மணி பொருத பரு ஏர் எறுழ்க் கழல் கால்,

பொன் தொடிப் புதல்வர் ஓடி ஆடவும், 295

முற்று இழை மகளிர் முகிழ் முலை திளைப்பவும்,

செஞ் சாந்து சிதைந்த மார்பின் ஒண் பூண்

கரிகால் சோழன், போருக்கு எழுந்தபோது வேறு எந்த மன்னரையும் கூட்டு சேர்த்துக் கொள்ளவில்லை. ஒருவனாகவே போரிட்டு வெற்றி கண்டான். செல்வ வளம் மிக்க இவனது கோட்டை புகழ் மின்னலை வீசியது. அதனால் பிற மன்னர்களின் புகழ் மங்கிப் போயிற்று. முரசு முழங்கும் பெருமை வாய்ந்த பகைவேந்தர் தம் முடியில் அணிந்திருந்த மணிகளைப் பறித்து வளவனின் புதல்வர் காலில் அணிந்திருந்த கழலுக்குள் ஒலிக்கும் மணியாக்கி மகிழ்ந்தனர். அவனது புதல்வர்கள் அந்தக் கழலொலி கேட்க ஓடியாடி விளையாடினார்கள். ‘முற்றிழை’ என்பது தாலி. திருமாவளவன் தன் முற்றிழை மனைவியரின் மார்பில் மகிழ்ந்து திளைத்தான். அப்போது மனைவியரின் மார்பிலிருந்த செஞ்சாந்து சிதைந்து இவன் மார்புச் சந்தனத்தைச் சிதைத்தது.


அரிமா அன்ன அணங்குடைத் துப்பின்

திருமாவளவன் தெவ்வர்க்கு ஓக்கிய

வேலினும் வெய்ய, கானம்; அவன் 300

கோலினும் தண்ணிய, தட மென் தோளே!

திருமாவளவன் சிங்கம்போல் பகைவர்களைத் தாக்கி வெல்லும் திறம் கொண்டவன். திருமாவளவன், பகைவர்களைச் சாய்க்க ஓங்கிய வேல் போல் பொருளுக்காக நீ பிரிந்து செல்ல விரும்பிய கானம் சுட்டெரிக்கும் வெம்மை உடையது. திருமாவளவன் தன் குடிமக்களுக்கு வழங்கும் குளுமைத்தண்மை போல் என்னவளுடையவளின் விரிந்த தோள் குளுகுளுக்கும் தண்மை உடையது.

இத்தகைய தண்ணிய தோளைப் பிரிந்து ‘வயங்கிழை ஒழிய வாரேன் நெஞ்சே’ ( பாடல் அடி 200 ) என்கிறான் தலைவன்.

பட்டினப் பாலை முற்றும்.


தனிப்பாடல்

( இது பிற்காலத்தில் பாடிச் சேர்க்கப்பட்ட வெண்பா )


முச் சக்கரமும் அளப்பதற்கு நீட்டிய கால்

இச் சக்கரமே அளந்ததால்- செய்ச் செய்

அரிகால்மேல் தேன் தொடுக்கும் ஆய் புனல் நீர்நாடன்

கரிகாலன் கால் நெருப்பு உற்று.

காவிரியின் தூய புனல்நீர் பாயும் வயல்களில் நெல் அறுவடைக்குப் பின் வளரும் தாளடி நெற்பயிர் தேன் கூடுகட்டும் அளவுக்குச் செழிப்பாக வளரும். கரிகாலன் அந்நாட்டின் அரசன். அந்தக் கரிகாலன் காலில் நெருப்புப் பட்டது. என்றாலும் அவனது ஆட்சிச் சக்கரக் கால், நிலப்பரப்பை யெல்லாம் அளந்தது. ஞாயிறு, திங்கள், தீ என்பன மூன்று சக்கரங்கள். இவை முறையே சோழனையும், பாண்டியனையும், சேரனையும் குறிப்பன. கரிகாலன் மூவேந்தரையும் வென்று தன் ஆளுகைக்கு உட்படுத்தினான் எனபது இப்பாடலில் நயமாகக் கூறப்பட்டுள்ளது. இந்த முச்சக்கரங்களையும் அளந்து பார்க்க உதவும் அளவுகோலாக உதவுவது ‘கால்’ என்னும் காற்று. இந்த அறிவியல் உண்மையைத் தெளிவுபடுத்தும் தொடர்தான் ‘முச்சக்கரமும் அளப்பதற்கு நீட்டிய கால்’ என்பது.

ஆக, இந்நூல் அகத்திணையில் அமைந்த பாலைத்திணையாக இருப்பதை இதுவரை கண்டு மகிழ்ந்தோம்.